Dear friends,
Greetings from ‘Nesamudan’. Hold on! Don’t hit the delete button yet – this is not a spam mail. Welcome to the my Email Magazine: ‘Nesamudan’.
You received this email because I assume you love reading my Email Magazine. Happy reading!
Venkatesh R
Email: venkatesh.nesamudan@gmail.com
17 April 2020
Archives : https://rvenkatesh.substack.com/
How to unsubscribe: If you do not wish to receive any more updates from ‘Nesamudan’, please email me and I shall be prompt in removing your email ID from
my mailing list.
P.S: Also you can share your friend's Email ids, who might like Tamil writings.
இவ்விதழில்:
1. தரம் கேட்கும் பெற்றோர்
2. இளையோர் விருப்பங்கள் என்ன?
3. தோள் (சிறுகதை)
_______________________
தரம் கேட்கும் பெற்றோர்
*****************************
நான் வேலைநிமித்தம் நிறைய பள்ளி தாளாளர்களையும் முதல்வர்களையும் தொடர்ச்சியாக சந்தித்துவருகிறேன். நிறைய கனவுகளோடு பள்ளிகளை நடத்தும் தாளாளர்கள் இவர்கள். ஒரு பள்ளி, இரண்டு பள்ளிகள் என்று வைத்திருக்கும் இவர்கள் எல்லோருக்கும் எண்ணற்ற சவால்கள். இவற்றைக் கேட்கும்போது ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வளவு தூரம் நமது பெற்றோர் மனநிலை மாறியிருக்கிறதே என்பதே என்னுடைய ஆச்சரியத்துக்குக் காரணம்.
அதாவது, தரம் மட்டுமே நிலைத்து நிற்கும் என்பதை தாளாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றனர். அதுவும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் இந்த விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. மதிப்பெண்ணுக்கு மேல், மாணவர்கள் பல்வேறு துறைகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. மனப்பாடக் கல்வி உதவாது என்பதையும் உணர்ந்துகொண்டுவிட்டனர். அதனால், வகுப்பறையில் சொல்லிக் கொடுக்கப்படும் அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் அடிப்படைகளை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும், உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்கு கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதாவது, பத்தாவது, பிளஸ் டூ ஆகிய பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்குவது என்பதற்கு மேல், இவர்களுடைய பொறுப்பு விரிந்திருக்கிறது.
பெற்றோர்கள் அதைத் தான் கோருகிறார்கள். தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள், சர்வதேசத் தேர்வுகளில் கூட தங்கள் பிள்ளைகள் ஒளிர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. அதற்கேற்ப உங்கள் பள்ளியும் கல்விமுறையும் உள்ளதா என்று பெற்றோர்கள், முதல்வர்களையும் தாளாளர்களையும் துளைத்து எடுத்துவிடுகிறார்கள்.
இன்னொருபுறம் வேறொரு அழுத்தம். எங்கள் பிள்ளைகள் சுயமாக வளரவேண்டும். அவர்களுடைய தனித் திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்களா? அவற்றை ஊக்கப்படுத்தி, வளர்த்தெடுப்பீர்களா? அதற்கான வசதி, வாய்ப்புகள் உங்கள் பள்ளிகளில் உள்ளனவா? எங்கள் பிள்ளைகளை ஆட்டுமந்தைகளைப் போல் நடத்தாமல், கவனம் குவித்து நடத்துவீர்களா?
எனக்குத் தெரிந்த ஒரு பள்ளி, ஒவ்வொரு மாணவனது முன்னேற்றத்தையும் தனித்தனியே தொடர்ச்சியாக கணித்து, அவனது அத்தனை செயற்பாடுகளுக்கும் ஊக்கம் கொடுக்கிறது. பெற்றோரிடம் உன் மகன் / மகள் அடைந்திருக்கும் முன்னேற்றம் என்னவென்று பாருங்கள் என்று எடுத்துக் காண்பிக்கிறார்கள். 2005இல் வெளியிடப்பட்ட தேசிய பாடத் திட்ட வரைவு, மிகமுக்கியமான ஒன்றைச் செய்திருக்கிறது. ஒவ்வொரு வகுப்பை நிறைவு செய்யும்போது, ஒரு மாணவன் / மாணவி என்ன கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்ற லேர்னிங் அவுட்கம்முக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
பெற்றோர் மேன்மேலும் தரத்தைக் கேட்கிறார்கள். பள்ளி பார்த்துக்கொள்ளும் என்றும் வாளாவிருப்பதில்லை. கேள்வி எழுப்புகிறார்கள். தாளாளர்களையும் முதல்வர்களையும் சங்கடத்தில் ஆழ்த்துகிறார்கள்.
இன்னொரு சங்கடமும் தனியார் பள்ளிகளுக்குத் தோன்றியுள்ளது. புறநகர்களில் ஏராளமான பள்ளிகள் வந்துவிட்டன. அதாவது மாணவர்களைச் சேர்க்கும் இடங்கள் அதிகமாகிவிட்டன. நகரங்களுக்குள் இருக்கும் பள்ளிகளில் இடம் பெறுவதற்குத் தான் போட்டி நிலவுகிறது. ஆனால், புறநகர்களில் சப்ளை அதிகம்.
அதனால், பல பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்குக் கூட மாணவர்களைச் சேர்க்க முடியாமல் திண்டாடுகிறார்கள். அடுத்த கட்டம், சம்பளம்.
ஒருசில பள்ளிகள் தான், ஆண்டுக் கட்டணத்தை முன்னதாகவே வாங்கிவிடுகிறார்கள். பெரும்பாலோர், காலாண்டு அல்லது மாதத் தவணையாகத் தான் சம்பளம் பெறுகிறார்கள். ‘அதிலும் பேரம் பேசுவோர் உண்டு’ என்றார் ஒரு பள்ளித் தாளாளர்.
இன்னொரு தாளாளர் சொன்னதுதான் என் மனத்தில் ஆழமாக பதிந்தது. ‘பெரிசாக கட்டடம் கட்டிவிடலாம். லேப், வசதிகள், மைதானம் என்று ஏராளமான அம்சங்களையும் செய்துவிடலாம். கடைசியில் மாணவர்கள் பிரமாதமாக முன்னுக்கு வருகிறார்களா என்பதுதான் முக்கியம். அது ஆசிரியர்கள் கையில் தான் இருக்கிறது. அவர்களுக்கு எவ்வளவு பயிற்சி கொடுக்கமுடியுமோ அவ்வளவும் கொடுக்கிறோம். தினசரி வகுப்பறை பாடத்திட்ட முறைகளையும் கூட ரெவ்யூ செய்து அனுப்புகிறோம். வகுப்பறையிலேயே உட்கார்ந்து, அவர்கள் சொல்லிக்கொடுக்கும் முறைகளையும் மேம்படுத்துகிறோம். எவ்வளவு செய்தாலும் பெற்றோரைத் திருப்திப்படுத்தவே முடியவில்லை.’
பள்ளிகளையே இப்படிப் பாடாய் படுத்தும் பெற்றோர், பிள்ளைகளை என்ன செய்வார்களோ என்ற யோசனை வந்தவுடனே கொஞ்சம் கலவரமாகத் தான் இருந்தது :-)
------------------------
இளையோர் விருப்பங்கள் என்ன?
***************************************
சிறுவர்களுக்குத்தான் நாம் ஏராளமான படைப்புகளை எழுதியுள்ளோம். 3 வயது முதல் 10 வயது வரையான குழந்தைகள், சிறுவர்களை முன்னிறுத்தியே கதைகள், கவிதைகள், புதிர்கள், விளையாட்டுகள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. 11 முதல் 17 வயது வரையான பிள்ளைகளை, ‘இளையோர்’ என்று அழைக்கிறோம்.
இவர்களுக்கான வெகுசில படைப்புகளையே நான் படித்துள்ளேன். இவர்களையும் சிறுவர்கள் என்ற பட்டியலில் சேர்த்தே நாம் பார்க்கிறோமோ என்ற எண்ணம் உண்டு.
இதை வளரிளம் பருவம் என்று அழைக்கிறோம். அதாவது, இவர்கள் குழந்தைகளும் இல்லை, பெரியவர்களும் இல்லை. கற்றுக்கொண்டு வளரும் பருவம்.
இவர்கள் கற்றுக்கொள்வது வாழ்க்கைப் பாடங்கள். சிறுவர்களாக புரியாத பல செய்திகள், அனுபவங்கள், பாடங்கள் புரியும் பருவம் இது. ஆங்கிலத்தில் இளையோர் இலக்கியம் உண்டு. டீன் ஃபிக்ஷன் என்றே இதை அழைக்கிறார்கள்.
தாங்கள் குழந்தைகளைப் போல் நடத்தப்படுவது இவர்களுக்குப் பிடிக்காது. உலக அளவில் இளையோர் விரும்பும் இரண்டு அம்சங்களை என்னால் பார்க்க முடிகிறது.
முதலாவது, கே.பாப். அதாவது, தென் கொரிய நாட்டில் இளையோரை மையப்படுத்தும் பாப் இசைப் பாடல்கள். அதிலும் ‘பிடிஎஸ்’ என்றொரு குழு இருக்கிறது.
நம்ம ஊரில், பிக் பாஸ் நிகழ்ச்சி சமயத்தில் எப்படி ‘ஓவியா ஆர்மி’, ‘லாஸ்லியா ஆர்மி’ என்றெல்லாம் உருவாயிற்றோ, அதேபோல், உலகெங்கும் ‘பிடிஎஸ்’ ஆர்மி உண்டு. இணையத்தில் அக்குழு வலையேற்றும் ஒவ்வொரு பாடலையும் கோடிக்கணக்கில் பார்த்து, உலக சாதனை படைக்கவேண்டும் என்ற போட்டி கடுமையாக நிலவுகிறது. அவர்களுடைய பாடல்களில் உள்ள குழூஉக்குறிகளை கோனார் நோட்ஸ் போட்டு விளக்காத குறையாக அப்படி விளக்குகிறார்கள் இளையோர்.
இதற்கென்றே எண்ணற்ற வலைத்தளங்கள் உள்ளன.
பிடிஎஸ் வலையேற்றியுள்ள ஒருசில பாடல்களை இணையத்தில் பார்த்தேன். கனவுமயமாக இருக்கிறது. வண்ணமும் எண்ணமும் நளினமும் ஆடலும் மனத்தை மயக்குவது உண்மை. இளையோர் பருவத்தில் சந்திக்கும் எண்ணற்ற உணர்வுரீதியான அம்சங்களே இவர்களுடைய பாடல்களில் இடம்பெறுகின்றன.
இரண்டாவது, மாங்கா காமிக்ஸ். ஜெர்மனியில் பிராங்க்பர்ட் புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளன்று, படை படையாக இளையோர், கண்காட்சி அரங்கத்தையே அசத்தினார்கள். ஆயிரக்கணக்கில் இளையோர், மாங்கா காமிக்ஸ் பாத்திரங்களாகவே தங்களை மாற்றிக்கொண்டு, அதே உடை, அலங்காரம், வண்ணம் ஆகியவற்றோடு கண்காட்சியில் வளைய வந்தபோது, நான் இரண்டு விஷயங்களுக்காக மகிழ்ச்சி அடைந்தேன். இளையோர் படிக்க மாட்டார்கள் என்பது முற்றிலும் தப்பு. அவர்களுக்கு கற்பனை வறட்சி என்ற விமர்சனமும் முற்றிலும் தப்பு என்று உணர்ந்துகொண்டேன்.
நம்ம நாட்டில் ஏற்கெனவே கே.பாப் இளையோர் மத்தியில் அதிவேகமாக பரவிவிட்டது. நடுவில் கொஞ்ச நாட்கள் கொரிய தொடர்கள் தமிழ்த் தொலைக்காட்சிகளில் வளையவந்தன. அப்புறம் அது நின்றுவிட்டது. ஆனால், கைப்பேசிகளில் கே.பாப் சக்கை போடு போகிறது.
விரைவில், மாங்கா காமிக்ஸ் இந்தியக் கரையைத் தொட்டுவிடும்.
இவையிரண்டும் இறக்குமதி சமாச்சாரம். ஆனால், இந்தியாவில் உள்ள இளையோருக்கு என்னவிதமான எதிர்பார்ப்புகள் உள்ளன? அவர்களது வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? அவர்களது ரசனையை கட்டியமைப்பது எவை? எவற்றையெல்லாம் படிக்க விரும்புகிறார்கள்? என்று ஏதேனும் ஆய்வுகள் நடைபெற்றுள்ளனவா என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.
நிச்சயம் வளரிளம்பருவத்தை ஆய்வு செய்யும் உளவியல் ஆய்வாளர்கள் இருப்பார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
இதுவரையான என் முயற்சி தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஆய்வுகள் ஏதேனும் உங்களுக்குத் தெரியுமானால், எனக்கு விவரம் தெரிவியுங்கள். படித்துக்கொள்ள விரும்புகிறேன்.
முதலில், இளையோர் ஆர்வங்கள், எதிர்பார்ப்புகள். அதன் பிறகு, அதை எழுதி வழங்கும் எழுத்தாளர்கள். இப்படிப் படிப்படியாக உருவாக்கும்போது தான், காத்திரமான படைப்புகள் தமிழில் உருவாகும்.
தொலைக்காட்சிக்கும் அலைபேசிக்கும் அடிமையாகிக் கிடக்கிறார்கள், அவர்களுக்கு மதிப்பீடுகளே இல்லை, வாசிக்கும் பழக்கமே இல்லை என்று இளையோர் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. சரியான படைப்புகள் இல்லாதபோது, வேறு சில விஷயங்கள் இட்டுநிரப்பவே செய்யும்.
அதை மாற்றும் வழியென்ன என்பதை யோசிப்பதே, இளையோர் இலக்கியத்துக்கு வழிசமைக்கும்.
-------------------------
தோள் (சிறுகதை)
*******
ரொம்ப நேரமாக அவன் பெயரை ஞாபகத்துக்கு கொண்டுவர முயற்சி செய்தேன். என்னவோ பாபு. ராஜேந்திர பாபு, ஜெகஜீவன் பாபு, ரமேஷ் பாபு. எதுவுமே சரியென்று தோன்றவில்லை. அவனைப் போல் ஒரு ஆள் இருந்தால் தான் இந்த வேலை நடைபெறும். நான் பத்தாண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் தென்மண்டல மேலாளரின் உதவியாளனாக இருந்தவன் இந்த பாபு.
எந்த வேலை வேண்டுமானாலும் நடத்திக் கொடுத்துவிடுவான். ஜித்தன். அவனிடம் கேட்டு ஒன்று நடக்கவில்லை என்பது இல்லவே இல்லை. அந்தக் காலத்தில் கேஸ் சிலிண்டர் பெரிய பிரச்னை. எழுதிவைத்தால், புதிய இணைப்பு அவ்வளவு சீக்கிரத்தில் வராது. பாஸ்போர்ட் வேணுமா? மார்க் ஷீட்? ரேஷன் அட்டை?
நீங்கள் கேளுங்கள், அது போதும். முடித்துக்கொடுத்துவிடுவான் பாபு. எல்லாவற்றுக்கும் ஒரு விலை வைத்திருப்பான். அது அவசரத்தைப் பொறுத்தும், ஆளைப் பொறுத்தும் மாறுபடும்.
என்ன பாபு? பெயர் தான் ஞாபகம் வரமாட்டேன் என்கிறது. பத்தாண்டுகள் கழித்து மீண்டும் சென்னைவாசம். நடுவே ஹைதராபாத் நான்கு வருடம். அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் நாக்பூர். இதுநடுவே பெண்கள் வளர்ந்துவிட்டார்கள். சென்னையில் உள்ள கல்லூரியில் மூத்த மகளைச் சேர்க்கலாம் என்று வந்தபோதுதான், பிரச்னை தலைதூக்கியது.
அவர்கள் படித்தது மகாராஷ்டிரத்தில் பள்ளிக் கல்வியில். இங்கேயுள்ள கல்லூரியில் அட்மிஷன் ஃபார்ம் வாங்கிச் சேர்க்கப் போனபோது, கொஞ்சம் இழுத்தார்கள்.
மைக்ரேஷன் சர்டிபிகேட் கேட்டார்கள். அதையும் வாங்கிக் கொண்டு வந்தபோது, பல்கலைக்கழகத்தில் அதற்கான ஏற்பு முத்திரை ஒன்றைக் குத்திக் கொடுப்பார்கள், அதை வாங்கி வாருங்கள் என்றார்கள். உண்மையில் கல்லூரிக் கல்வியின் அரசாங்க வலைத்தளத்தில் இப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.
ஆனால், வேண்டுமென்றே இழுத்தடிக்கிறார்கள் என்று தோன்றியது.
இப்போது பல்கலைக்கழகம் போய், இப்படி ஒரு சான்றிதழுக்கு யார் ஏற்பு முத்திரை குத்திக் கொடுப்பார்கள் என்று கேட்கவேண்டும். முதலில், அப்படி ஒரு தேவை இருக்கிறதா என்றே கேட்கவேண்டும். இதற்கெல்லாம் கொஞ்சம் ஸ்ட்ரீட் ஸ்மார்ட் என்று சொல்வார்களே, அப்படிப்பட்டவர் வேண்டும். புகுந்து புறப்படுபவர்.
பாபூ, எங்கே இருக்கிறாய்?
முகம் நன்றாக நினைவில் இருந்தது. எப்போதும் புன்னகை. முகம் நிறைய தழும்புகள். அரைக்கை சட்டை. அதில் புடைத்துக்கொண்டு தெரிவது தோள்கள் தான். அகண்ட மார்புக்கு ஏற்ற தோள்கள். தொளதொளா பேன்ட். அதை இறுக்கிப் பிடிக்க, பெல்ட் போல் அரைஞ்சாண் கயிறு. செருப்பு தான். தென்மண்டல மேலாளர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கடைசிவரை ஷூ போடதவன் பாபு. ஒரு கட்டத்தில், பாபுவை வேறு ஒரு துறைக்கு உதவியாளனான அனுப்பிவிட்டார் மேலாளர். எண்ணி பதினைந்தே நாட்கள். மீண்டும் தன்னுடைய துறைக்கே அழைத்துக்கொண்டுவிட்டார். எல்லாம், பாபுவின் சேவையின் தேவை தான்!
கைபேசி அழைத்தது. வாசுதேவன் தான் அழைத்தான். சென்னை வந்தவுடன், பாபுவைத் தேடி, அந்தச் சமயத்தில் என்னோடு வேலை பார்த்தவர்களிடம் எல்லாம் சொல்லி வைத்திருதேன்.
“நீங்க சொல்றது சந்தோஷ் பாபுவைத் தானே சார்.”
சட்டென்று துள்ளிக் குதித்தேன். “ஆமாம், எங்கே இருக்கார் தெரியுமா வாசு?”
“நம்ம ஆபீஸ்ல இப்போ அவர் இல்ல.”
“ஓ! அப்படியா?”
“ஆமாம் சார். பெரிய அளவு ஃப்ராடு பண்ணி மாட்டிக்கிட்டார். சஸ்பெண்ட் பண்ணினாங்க. இன்டர்னல் என்கொயரி நடந்து, அவரை வீட்டுக்கு அனுப்பிச்சுட்டாங்க.”
“ஓ! அவ்வளவு நடந்துபோச்சா?”
“என்ன காசுங்கறீங்க. ஜி.எம்.மே பயப்படுவார். அவர் மாதிரியே கையெழுத்து போட்டதெல்லாம் பின்னாடி தான் தெரியவந்துது. எதுக்கும் துணிஞ்சவன்.”
எனக்கு என்னவோ இந்தக் கடைசி வரியில் உடன்பாடு இல்லை. போலிக் கையெழுத்து போடுபவன் தான். அதை ஒரு விளையாட்டு மாதிரியே செய்து காண்பிப்பான். ஒருமுறை என்னை மாதிரியே கோழிக்கிறுக்கல் அச்சுஅசலாகப் போட்டுக் காண்பித்துவிட்டான். வெலவெலத்து போய், என் கையெழுத்தையே நான் மாற்றிக்கொண்டேன் என்பது வரலாறு.
“சரி, எங்கே இருக்கார்னு கண்டுபிடிக்க முடியுமா?”
“எதுக்கு சார் அவனை தேடறீங்க?”
“ஒரு வேலை ஆகணும்ப்பா. மைக்ரேஷன் சர்டிபிகேட் அட்டஸ்டேஷன் வாங்கணும்...”
“நீங்களே போயிடுங்களேன் சார். என்னாத்துக்கு அப்படிப்பட்ட ஒருத்தன் கிட்ட போய் மாட்டிக்கணும்?”
வாசுவின் நல்லெண்ணம் எனக்கு உறைக்காமல் இல்லை. ஆனால், என்னைப் போன்ற கெளரவச் சோம்பேறிகளுக்கு வேலை விரைவாக முடியவேண்டும். இதற்கு செலவிடப்படும் நேரத்தை இன்னும் உபயோகமாக மாற்றலாமே என்ற லாபநோக்கு சிந்தனை வேறு. இதையெல்லாம் நான் செய்வதா என்ற இளக்காரம் வேறு.
உண்மையில் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நான் இதில் இறங்கினால் தோற்றுவிடுவேன் என்று உள்மனது சொன்னது.
இதற்கான ஜாலம், சாமர்த்தியம், நேக்கு எல்லாம் என்னிடம் இல்லை. நான் முதலில் ஒரு குமாஸ்தா. அதன் பின்னர் படிப்படியாக வளர்ந்து மேனேஜர் ஆனவன்.
ஒரு நிர்வாக இயந்திரத்தின் சின்ன பல்சக்கரம். நான் இல்லையென்றால், என் இயந்திரம் ஓடும். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் கையை எதிர்பார்த்தே அலுவலக வாழ்வை ஓட்டியவன்.
“சரிதான் வாசு. கொஞ்சம் முயற்சி செஞ்சு பாரேன். அவன் அட்ரஸ் கிடைச்சா உடனே சொல்லு.”
என் தோல்வியை நான் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஆளைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று மனைவியிடம் சொன்னபோது, அவள் முகத்திலும் விளக்கு எரிந்தது. பாபு புராணத்தை ஏற்கெனவே வீட்டில் சொன்னதன் பலன் இது.
“நம்பர் கிடைச்சுதா, பேசினீங்களா?”
“வந்துடும், வந்துடும்...”
என் தொந்தரவு தாங்காமல், அடுத்த மூன்று நாட்களில், சந்தோஷ் பாபுவின் அலைபேசி எண்ணை வாங்கிக் கொடுத்துவிட்டார் வாசுதேவன். மனசு பரபரத்தது. வாசுக்கு நன்றி கூடச் சொல்லத் தோன்றவில்லை. இனி வேலை முடிந்துவிடும் என்ற துணிச்சலே வந்தது. அலைபேசி எண்ணை அழைத்தேன். ஒன்று, இரண்டு, மூன்று முறை.
“நான் பஸ்ஸுல போய்க்கிட்டு இருக்கேன். ஒரே ரஷ்ஷா இருக்கு. அரை மணியில் கூப்பிடுங்க.”
யார் என்னவென்று கூட கேட்காமல், பதில் சொல்லிவிட்டு, வைத்துவிட்டான் சந்தோஷ் பாபு. அரை மணியை அணுஅணுவாகக் கடத்தினேன். சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு மிஸ்டு கால் வந்தது. பாபுவின் எண் தான்.
“என்ன விஷயம்? யார் நீங்க?”
நான் விரிவாக யார் என்பதையும், கூட பணியாற்றிய விவரத்தையும் சொல்லி, உதவி என்றேன். ஞாபகம் இருப்பதற்கான அறிகுறியே குரலில் தென்படவில்லை.
“சரி, வீட்டுக்கு வரீங்களா? என்ன செய்யணும்? என் அட்ரஸ் இருக்குதா?”
பாபுவே சரசரவென முகவரியைச் சொல்ல, மனசுக்குள் அதை கிறுக்கிக்கொண்டேன். சூளைமேடு பகுதியில் ஒரு தெரு. கையில் என் மகளின் மைக்ரேஷன் சான்றிதழையும் இதர சான்றிதழ்களின் நகல்களையும் எடுத்துக்கொண்டேன். மனைவிடம் சொல்லிவிட்டு, வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டேன்.
மனசு பரபரவென்று இருந்தது. என்ன தொகை கேட்பானோ?
எதைக் கேட்டாலும் கொடுத்துவிடலாம். மனைவியிடமோ மகளிடமோ தோற்றுப் போகக் கூடாது. அப்பாக்கள் சந்திக்கும் மானப் பிரச்னை இது. ஊரில் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் ஒருசில வேலைகள் நடைபெறாமல் போய்விடக் கூடும். அதை ஏற்பது மனசுக்கு மட்டும் கஷ்டம் அல்ல, சுற்றியிருப்பவர்களுக்கும் கஷ்டம் தான். அது விமர்சனமாகவும் கேலியாகவும் வெளிப்படும்.
மனது போன வேகத்தில் ஆட்டோ போகவில்லை. சென்னை இன்னும் சிக்கலாகவும் நெரிசலாகவும் ஆகிவிட்டது. இதில் வந்து மீண்டும் குடித்தனம் ஆரம்பிக்கவேண்டும் என்றபோது கொஞ்சம் அச்சமாக இருந்தது. பழைய நகரம் தான். ஆனால், ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் இது புதிய முகத்தைப் போர்த்திக்கொள்வது போல் தோன்றியது.
எல்லா இடங்களிலும் நவீன கடைகள். மால்கள். வண்ணவண்ண விளக்குகள் அச்சமூட்டின. மனசுக்குள் ஒட்டிக்கொண்டிருந்த சென்னை இதுவல்ல என்ற நிஜம் உறைத்துக்கொண்டே இருந்தது. இதோ ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோ கூட, அலைபேசி வழியே அழைத்தது தான்.
சூளைமேடு பகுதியை நெருங்கி, மேப் காட்டிய திசையிலேயே ஆட்டோ ஓடி நின்றது ஒரு சின்ன தெரு. இறங்கி, கைப்பேசியில் காட்டிய தொகையைக் கொடுத்துவிட்டு, மீண்டும் முகவரியைப் பார்த்தேன். சரியான இடத்துக்கு வந்துவிட்டோம் என்று நம்பிக்கை பிறந்தது.
அடுத்தடுத்து ஒட்டிய வீடுகள். கொஞ்சம் வாசல் விளக்குகள் ஒளி பாய்ச்சியும் இருட்டை ஒன்றும் செய்யமுடியவில்லை. டெய்லர் கடை, கூல் டிரிங்ஸ் கடை வாசல்களில் நான்கைந்து பேர் நின்றுகொண்டிருந்தார்கள்.
வீட்டு எண்ணைப் பார்த்துக்கொண்டே இருந்தபோது தான், “என்ன ஸ்டீபன். என்னைத் தான் தேடிக்கிட்டி வந்தியா?” தோளில் விழுந்த கை உற்சாகம் தந்தது.
ஆளே மாறிப் போயிருந்தார். நெற்றிமேடு, முன்வழுக்கையோடு போய் முடிந்திருந்தது. மீசையும் காதோரம் இருந்த கேசமும் வயதைத் தெரிவித்தன. பாபு முன்னே நடக்க, இரண்டு வீடுகள் தள்ளி ஒரு வீட்டின் வாசலில் போய் நின்றுகொண்டார். நான்கைந்து பைக்குகள். இரண்டு மூன்று சைக்கிள்கள்.
“இது நம்ம வூடு தான். எல்லாம் கொடக்கூலிக்கு விட்டிருக்கேன். என் வொய்ஃப் கோயிலுக்குப் போயிருக்கு. வந்துடட்டும். உள்ளே போகலாம். என்ன விஷயம், சொல்லுங்க ஸ்டீபன்?”
அந்த இடமே பொருத்தமற்றுத் தான் தோன்றியது. போவோர் வருவோர் சைக்கிள், பைக்குகள் என்று ஓடிக்கொண்டே இருந்தன. ஆனால், வேலை முடியவேண்டுமே. கடகடவென வந்த வேலையை ஒப்பித்தேன். நீங்கள் தான் உதவ வேண்டும் என்பதையும் தெரிவித்தேன். பாபுவின் தோற்றத்தை இவ்வளவு நெருக்கத்தில் பார்த்தபோது, அதுவும் இத்தனை ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் பார்த்தபோது, வேறு மாதிரி தோன்றியது. வயது வேறுவிதமான முதிர்ச்சியையும் பக்குவத்தையும் பாபுவுக்கு வழங்கியிருந்தது. இவர் பழைய பாபு இல்லை என்பதை மனது சட்டென உணர்ந்துகொண்டது. தான் எவ்வளவு அபத்தமான ஒரு வேலைக்காக வந்து நின்றிருக்கிறோம் என்ற உணர்வே தலைதூக்கியது.
“இதெல்லாம் நான் இப்போ செய்யறதில்லையே பிரதர். ஆபீஸ் உண்டு, வூடு உண்டுன்னு ஜாலியா இருக்கேன்.”
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. என் மனது சொன்னதைத் தான் பாபுவும் சொல்கிறார். நான் என்னையே நொந்துகொண்டேன்.
“கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க பாபு...”
“இல்ல பிரதர். நமக்கு இப்போ இதெல்லாம் தேவையே இல்லையே. பையனை படிக்க வெச்சுட்டேன். சிறுசேரியில் ஒரு ஐடி கம்பெனியில வேலை செய்யறான். டெய்லி பஸ் வந்து அவன பிக்-அப் பண்ணிக்குது. பையனும் தங்கமா இருக்கிறான். நான் பண்ண திருட்டுத்தனத்துக்கு என் புள்ள இவ்வளவு நல்லவனா இருக்கறதே பெரிய விஷயம். நான் ஒண்ணுமே படிக்காதவன். டைப்பிங், ஷார்ட் ஹேண்டை வெச்சுக்கிட்டே ஓட்டிட்டேன். எங்கப்பன் என்னை படிக்கவெக்கல.
வசதி இல்ல. எனக்கும் தான் வசதி இல்ல. ஆனால், என் புள்ளைய படிக்கவெக்கணும்னு ஒரே குறியா இருந்தேன். பண்ணக்கூடாத தப்பெல்லாம் பண்ணேன். இதோ பார், இந்த பைக் என் பையனுடையதுதான். செம்மையா இருக்குது பார்த்தியா. இப்போ எல்லாத்தையும் நிறுத்திட்டேன்.”
பாபு முகத்தில் தெரிந்தது வெற்றிக்களிப்பு. குரலில் சாதித்துவிட்ட துடிப்பு. இந்தச் சமூகம் விடுத்த சவால் ஒன்றை துணிச்சலாக எதிர்கொண்டுவிட்ட நம்பிக்கை.
“என்னா அவமானம், என்னா கேவலம், என்னா அசிங்கம். எல்லாம் ஒண்ணே ஒண்ணுக்குத் தான். ‘நீ எனக்கு என்னா பண்ணேன்’னு நாளைக்கு என் பையன் என்னைப் பார்த்து கேக்கக்கூடாது. என் லைஃபையே எங்கப்பன் ஸ்பாயில் பண்ணிட்டான். என் பையனுக்கு அதை நான் செய்யக்கூடாது.”
“யாராவது தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்களேன். நான் போய் பார்க்கறேன்.”
“யாரையும் தெரியாது பிரதர். நீங்களே போங்க. உங்க பொண்ணுதானே. எவன் என்ன சொல்லிடப் போறான்? நானே என் பையனைத் தோள்ல சுமந்து மேலே தூக்கி நிறுத்திட்டேன். நீங்களெல்லாம் இன்னும் நல்ல உயரமா தூக்கலாம்.”
என் முதுகுப்பக்கம் இருவர் வந்து நிற்பது தெரிந்தது. அவர்களிடம் பாபு தெலுங்கில் பேச, அந்தம்மாள், முகத்தில் புன்னகை ஒளிர முகமன் சொன்னார். பக்கத்தில் நின்றிருந்தவன் மகனாக இருக்கவேண்டும். தெலுங்குபட ஹீரோ மாதிரி அகலமாகவும் அழகாகவும் இருந்தான்.
“சரிங்க, பிரதர். அப்புறம் பார்க்கலாம்.”
பாபு என்னிடம் விடைபெற்றுக்கொண்டு, மகனது தோளைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்குள் போக ஆரம்பித்தார். நான் பாபுவின் தோள்களையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அது சற்றே தளர்ந்திருப்பது போல் இருந்தது.
------------------------------
Nesamudan 10, 17 April 2020
பல பணிகளுக்கிடையே (விவாதமேடை,பட்டம் etc) இந்த இனிய இதழ் வழங்குவதிலும் தங்களது கடும் உழைப்பு மிளிர்கிறது. வாழ்க 👍ப.உத்தண்டராமன் நெய்வேலி வடகுத்து
Nice job congrats please to continue