Dear friends,
Greetings from ‘Nesamudan’. Hold on! Don’t hit the delete button yet – this is not a spam mail. Welcome to the my Email Magazine: ‘Nesamudan’.
You received this email because I assume you love reading my Email Magazine. Happy reading!
Venkatesh R
Email: venkatesh.nesamudan@gmail.com
19 April 2020
Archives : https://rvenkatesh.substack.com/
How to unsubscribe: If you do not wish to receive any more updates from ‘Nesamudan’, please email me and I shall be prompt in removing your email ID from my mailing list.
P.S: Also you can share your friend's Email ids, who might like Tamil writings.
இவ்விதழில்:
1. முகமூடிகள் ஒழிய...
2. கண்ணில் வாய்ப்பு காட்டும் கரோனா
3. அம்மா, இது தப்பு! (சிறுகதை)
_______________
முகமூடிகள் ஒழிய...
***********************
al naamani: Muttu kodukkar venkadesh
Kaviyarasan Arasan: SPL seruppadi to gopi&venkatesh
தமிழா தமிழா தமிழா: வந்துட்டான் ஜால்ரா மாமா தினமலர் பத்திரிகையில் ஆமா வேலை செய்யும் வெங்கடேஷ் நாயே நீ ஒரு ஊர் மாமா எடப்பாடிக்கு மாமா வேலை செய்யும் நாய்
Kulandaivelu Ramanujam: வெங்கடேஷ் ஒரு மண்ணு
இணையத்தில் உள்ள என்னுடைய பொழுதுபோக்குகளில் ஒன்று, யூடியூப் சேனலில் கமென்ட் பகுதியைப் படிப்பது. அதுவும் நான் பங்குபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும் கருத்துகளை ஊன்றிப் படிப்பேன். இது பத்திரிகை ஆபீஸில் இருந்து வந்த புத்தி. வாசகரின் ஒவ்வொரு கடிதத்தையும் படிக்கும் பயிற்சி அது.
எத்தனையோ லட்சம் வாசகர்கள் படிக்கிறார்கள். அவர்களில் ஒருசில நூறு பேர்கள் மட்டுமே கடிதம் எழுதுவார்கள். ஒருசிலருக்கு இது ஒரு பழக்கமாக இருக்கலாம். தப்பில்லை. இன்னும் சிலர் உண்மையாக ஒருசில பகுதிகளோ, கட்டுரை, கதைகளோ ஏற்படுத்தும் தாக்கத்தினால், கடிதம் எழுதுவார்கள். இதுதான் உண்மையான ஃபீட்பேக் பொறிமுறை. அதில் இருந்து கற்றுக்கொண்டு, திருத்திக்கொண்டது ஏராளம்.
ஆனால், இணையம், குறிப்பாக யூடியூப்பும் டிவிட்டரும் பொதுக் கழிவறைகள். நேற்று (17.04.2020) புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘நேர்படப் பேசு’ நிகழ்ச்சியில் நான் தெரிவித்த கருத்துகளுக்கு, இணைய நேயர்களின் பொன்மொழிகள் தான் மேலே கொடுக்கப்பட்டவை. நாடாளுமன்றத் தேர்தலின் போது, என்னை இணைய நேயர்கள் கொண்டாடி மகிழ்வித்தார்கள். தமிழில் இவ்வளவு அற்புதமான வசவுச் சொற்கள் உண்டென்று, யூடியூபில் தான் தெரிந்து கொண்டேன்.
இவர்களைத் தொடர்ச்சியாக நான் கவனித்து வருகிறேன். பல்வேறு தொகுதிகளாக இந்த நேயர்களை வகைப்படுத்திக் கொள்ளலாம்.
1. இணையத்தில் தொலைக்காட்சி விவாதங்களைப் பார்ப்போர் அனைவரும் கருத்துகளை எழுதுவதில்லை. இதில் பொதுவான நேயர்களும் உள்ளனர்.
2. கருத்துகளை எழுதுவோர், அரசியல் கட்சி சார்புடையவர்கள்.
3. அல்லது, பல்வேறு கட்சிகளின் சமூக ஊடகப் பிரிவின் கூலிகள்.
இவர்கள் தான் டிவிட்டர் கருத்துக் கணிப்புகளிலும் (polls) வோட்டு போடுபவர்கள்.
இவர்கள் அனைவருக்கும் செளகரியமாக இருப்பதற்குக் காரணம், இணையம் தரும் அனானிமிட்டி. யார் இந்தக் கருத்துக்குச் சொந்தக்காரர் என்பதை அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடித்துவிட முடியாது. அதனால், தங்கள் கட்சி சார்பு கருத்தாளர்களைப் பாராட்டியும், இதர கட்சி அல்லது நடுநிலையாளர்களை வாய்க்கு வந்ததைத் திட்டியும் தீர்க்கிறார்கள்.
இதன் நோக்கம், இரண்டு. ஒன்று, இப்படி திட்டு வாங்க வேண்டுமா என்று பயந்துகொண்டு, எந்தக் கட்சிக்கு பலம் உள்ளதோ அவர்களுக்கு ஆதரவாகப் பேசுவது.
இன்னொன்று, வசவுச் சொற்களால் வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு, விவாதங்களிலேயே கலந்துகொள்ளாமல் விலகிவிடுவது. இரண்டுமே, கருத்துரிமையை மறுக்கும், முடக்கும் கோரமான முயற்சிகள். நான் சிரிக்கப் பழகிக்கொண்டுவிட்டேன்.
இதில் கூலிக்குக் கூவுபவர்கள் பற்றி ஒன்றும் பிரச்னை இல்லை. அவர்களை எவருமே மதிக்க மாட்டார்கள். ஆனால், கட்சி சார்ந்து கருத்து சொல்வோர் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை நிதானமாகப் புரிந்துகொள்வது அவசியம். ஐநூறு கமென்ட்கள் வந்தால், அதில் ஐந்து விமர்சனங்கள் / கருத்துகளேனும் ஆக்கப்பூர்வமாக இருக்கும். அந்த ஆசைக்குத் தான், யூடியூப் விமர்சனங்களை வாசிக்கிறேன்.
ஒரு விஷயம் மட்டும் உண்மை. என்றைக்கு இந்த பயனர்களை, மேலும் சட்ட ஆளுகைக்குள் கொண்டுவருகிறோமோ, அன்று ஒரு கட்டுப்பாடு வரும். ஒழுங்கு வரும். தமிழக அரசு தான் இது தொடர்பாக ஒரு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. சமூக வலைத்தள ஐடிக்களோடு, அவர்களுடைய ஆதார் எண்ணும் இணைக்கப்பட வேண்டும் என்று அரசு கோரியிருக்கிறது.
உங்களுக்கு உண்மையிலேயே ஒரு கருத்து இருக்குமானால், அதை வெளிப்படையாக உங்கள் பெயர், முகவரியோடு சொல்லிவிட்டுப் போங்களேன். உங்கள் கருத்துக்கான பின்விளைவு என்ன இருக்குமோ ஏன் அஞ்சவேண்டும்? இது ஜனநாயக நாடுதானே? கருத்து என்பது போர்வாள் அதை வெளிப்படையாக கையில் எடுங்களேன்.
ஒவ்வொரு இடத்திலும், பொறுப்பேற்க வைக்க வேண்டும். பத்திரிகைகள் என்றால், பதிப்பாளர், ஆசிரியர், அச்சகத்தார், எழுத்தாளர் என்று பொறுப்பு உண்டு.
தொலைக்காட்சி என்றாலும் ஆசிரியரே பொறுப்பாளர். சமூக வலைத்தளம் என்று வரும்போது, அதை ஏன் பொதுக் கழிவறையாக வைத்திருக்க வேண்டும்? நமது ஐ.டி. சட்டங்கள் இதில் இன்னும் கடுமை காட்டவேண்டும்.
சமூக வலைத்தள ஐடிக்களோடு ஆதார் இணைக்கப்பட வேண்டும். எப்படி உங்கள் வங்கி பாஸ்வேர்டு ஒரு ஓ.டி.பி. எண் மூலம், சரி பார்க்கப்படுகிறதோ, அதேபோல், சமூக வலைத்தள ஐடிக்களையும் வெரிஃபை செய்துவிட்டால் போதும்.
வாட்ஸ் அப் செய்திகளை எழுதி அனுப்பும்போதும், பிற செய்திகளைப் ஃபார்வேர்டு செய்யும்போது, அதை முதன்முதலில் உருவாக்கிய எண்ணையும் கூடவே ‘டேக்’ செய்து அனுப்பிவிட்டால் போதும்.
கருத்துகள் என்பவை சமூகத்தை ஆக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். சட்ட ரீதியாக இதை நெறிப்படுத்தினால் மட்டுமே, போலிகள் ஒழிந்து, உண்மை கருத்துகள் வலம் வரும்.
---------------------------
கண்ணில் வாய்ப்பு காட்டும் கரோனா
*******************************************
கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசும்போது, நான் ஒரு செய்தியை வலியுறுத்துவேன். வேலைக்குப் போகாதீர்கள். நீங்களே சுயதொழில் வல்லுநராக மாறுங்கள் என்பேன். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் போய் படித்துவிட்டு வரும் மாணவர்களைத் தொடர்ந்து சந்தித்துள்ளேன். எல்லோர் மனத்திலும் நான்கைந்து ஸ்டார்ட் அப் ஐடியாக்கள் இருக்கும்.
தொழில்நுட்பம், இசை, ஓவியம், ஃபேஷன், டிசைனிங் என்று எந்தத் துறையாக இருந்தாலும், அதில் ஒரு குறிப்பிட்ட தேவையைக் கணித்து, அதைத் தீர்ப்பதற்கான முயற்சியாக தங்கள் பிசினஸ் ஐடியாவை உருவாக்கியிருப்பார்கள். அதை நடைமுறைப்படுத்துவதற்கான மாதிரிகளை உருவாக்குவார்கள். மூலதனம் கோருவார்கள். இத்தகைய பிரகாசமான ஐடியாக்களைத் தேடும் ஆரம்பநிலை முதலீட்டாளர்கள் நிறைய பேர் உண்டு. அவர்களும் இவர்களுக்கு நிதி உதவி அளித்து, அவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றி வைப்பார்கள்.
கரோனாவுக்குப் பின்னர், இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் ஏராளமான வாய்ப்பு கனிந்திருக்கிறது. உலகம் முற்றிலும் மாறிவிட்டது. புதிய பழகுமுறைகள், பொதுவெளி நடைமுறைகள், பயங்கள் ஆகியவை தோன்றியுள்ளன. நிரந்தரமாகவே நமது வாழ்க்கைமுறையில் பல அம்சங்கள் மாறிவிடக் கூடும்.
ஒரு ஆய்வு அறிக்கையைப் படித்துக்கொண்டிருந்தேன். இனிமேல் கமர்ஷியல் ஆபீஸ் ஸ்பேஸுக்கான தேவை முற்றிலும் குறைந்துபோய்விடும் என்று சொல்கிறது அந்த அறிக்கை. இந்த இரண்டு மாதங்களில், தொலைதூரத்தில் இருந்தே பணி செய்வது எப்படி, ஒரு அலுவலகத்தில் எந்தெந்த பிரிவுகள் இதுபோல் வொர்க் ஃப்ரம் ஹோம் செய்தால் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு விட்டார்கள்.
காலை ஒன்பது முதல் மாலை ஐந்து மணிவரை தான் வேலை பார்க்கவேண்டும், வீட்டில் போய் வேலை பார்ப்பார்களா? என்னுடைய தனிப்பட்ட நேரம் என்னாவது? இதற்கெல்லாம் நீ சம்பளம் கொடுக்கிறாயா? என்றெல்லாம் முரண்டு பிடித்த பழமைவிரும்பிகள் கூட, தற்போது ‘சூம்’ மீட்டிங்குகளில் பங்குகொள்கிறார்கள்.
வெளியே போய் சாப்பிட்டால் தான் ஆயிற்று என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தவர்கள், வீட்டுச் சமையலில் ஆரோக்கியம் காண்கிறார்கள்.
ஆயுள் காப்பீட்டை எகத்தாளமாகப் பேசிய முதலீட்டு ஆலோசகர்கள் கூட, தற்போது, உங்கள் முதலீடுகளில் கணிசமான பகுதியை ஆயுள் காப்பீட்டுக்கு ஒதுக்குங்கள் என்று சொல்கிறார்கள்.
சட்ட ஆலோசனை அலுவலகங்களில் விவாதம் அனல் பறக்கிறது. பெருமழை வெள்ளம், பூகம்பம் போன்று இதுவும் எதிர்பாராத பேரிடர் தானே? அலுவலகத்தைத் தான் நாங்கள் பயன்படுத்தவில்லையே, எதற்கு வாடகை கொடுக்கவேண்டும்? என்று ஒரு பக்கமும், வாடகை ஒப்பந்தத்தில் ‘பாண்டமிக்’ என்ற சொல் இருக்கிறதா பாருங்கள். இல்லையென்றால், நீங்கள் வாடகை செலுத்தியே ஆகவேண்டும் என்று கட்டட முதலாளிகளும் முட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.
கரோனா நமது ஆடம்பரங்களையும் பகட்டுகளையும் மேட்டிமைத்தனத்தையும் கலைத்துப் போட்டுவிட்டது. கண்ணில் பயத்தைக் காண்பித்துவிட்டது.
உண்மையில் இதுதான் இளைஞர்களுக்கான அற்புதமான நேரம். புதிய சூழ்நிலையையும் யதார்த்தத்தையும் புரிந்துகொண்டு இதற்கேற்ப, அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில், புதிய சேவைகளையும் கருவிகளையும் தொழில்நுட்ப வசதிகளையும் உருவாக்கினால், உலகம் கண்டேன், கண்டேன் என்று அள்ளிக்கொள்ளும்.
என் நண்பர் ஒருவர் பல ஆண்டுகளாக, ரெக்சின் தொழில் செய்துகொண்டிருந்தார். இன்று கூப்பிட்டவர், தான் முக கவசம் தயாரிக்கவும் தொடங்கிவிட்டதாகவும், நாளொன்றுக்கு 5 ஆயிரம் மாஸ்குகள் தயாரித்துத் தரமுடியும் என்று சொன்னபோது, மகிழ்ச்சியாக இருந்தது. புதிய சூழலுக்கு தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் முயற்சி இது.
அடுத்த சில மாதங்களில் இன்னும் இதுபோன்று புதுப் புதுத் தேவைகள் தெரியவரும். தகுதியான திட்டங்களுக்கு, வங்கிகளும் இனிமேல் தொழிற்கடன்களை வாரி வழங்கும். இரண்டையும் பயன்படுத்திக்கொள்வது நமது இளைஞர்கள் கையில் தான் இருக்கிறது.
-------------------------------------
அம்மா, இது தப்பு! (சிறுகதை)
********************
பாவாடை, தாவணி போட்டே பழக்கம் இல்லை. இடுப்புப் பக்கம் வெளியே தெரியக்கூடாது என்று அம்மா சொன்னாலும் சொன்னாள், திண்டாடிப் போனாள் சுகாசினி. தாவணி தோளில் நிற்காமல் ஒரு பக்கம் வழுக்குவது போன்றே தோன்றியது. இதுநடுவே, பாவாடை அணிந்து நடப்பதும் சிரமமாக இருந்தது. பஸ்ஸை விட்டு இறங்கி, அம்மா விறுவிறுவென்று முன்னே நடந்துகொண்டிருந்தாள். அம்மா வேகத்துக்கு ஈடுகொடுத்துக் கொண்டு பின்னே சுகாசினியால் ஓட முடியவில்லை.
அம்மா இப்படி உடை அணிபவளும் அல்ல. நல்ல லட்சணமாக இருப்பாள். நன்றாக தலைவாரிப் பின்னிக்கொண்டு, நல்ல புடைவை உடுத்திக்கொள்வாள். பவுடர் போட்டுக்கொண்டு, குங்குமத்துக்குப் பதில் கண்ணுக்கே தெரியாமல் சின்ன ஸ்டிக்கர் பொட்டு ஒடிக்கொள்வாள். இன்றைக்கு எல்லாமே நேர்எதிர். இவ்வளவு திராபையான புடைவை அம்மாவிடம் இருக்கும் என்றே இன்றுதான் சுகாசினிக்குத் தெரியவந்தது. கையிலும் கழுத்தில் போட்டிருந்த ஒன்றிரண்டு தங்க நகைகளையும் வீட்டில் கழட்டி வைத்துவிட்டு வந்துவிட்டாள் போலிருக்கிறது.
பஸ்சிலும் அதிகம் பேசவில்லை. இந்த பாலிடெக்னிக்கில் சீட் கிடைத்தால் போதும், எதிர்காலம் நன்றாக அமைந்துவிடும். நல்ல பெரிய கம்பெனில் வேலை கிடைத்துவிடும். அதையும் இந்த பாலிடெக்னிக்கே ஏற்பாடு செய்துகொடுத்துவிடும் என்றெல்லாம் வீட்டில் இருந்து ரயிலடிக்கு வரும்வரை சொல்லிக்கொண்டே வந்தாள்.
ஜெனிபர், ஹரிணி, பத்மா எல்லோரு பிளஸ் ஒன் சேர்ந்துவிட்டார்கள். ஃபீசும் கட்டிவிட்டார்கள். அம்மா ஃபாரம் வாங்கியதோடு சரி, இன்னும் பள்ளியில் கொடுக்கவில்லை. என்னவோ, பாலிடெக்னிக்கில் சேர்த்துவிட வேண்டும் என்று முயற்சி செய்தாள்.
“சீக்கிரம் வாடி.”
“நடக்க முடியலம்மா. பாவாட தடுக்குது.”
அம்மா பார்வையில் தெரிந்த விரோதம் பயமாக இருந்தது. இன்னும் எவ்வளவு தூரம் நடக்கவேண்டுமோ? இந்தப் பாலிடெக்னிக்கின் விண்ணப்பத்தை மட்டும் அம்மா பூர்த்தி செய்து, கொடுத்துவிட்டு வந்தாள். இன்று நோட்டீஸ் போர்டில், தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களைப் போடுவார்கள், போய் பார்க்கவேண்டும் என்று காலையில் இருந்தே அம்மா பரபரத்துக்கொண்டிருந்தார்.
அம்மா, தெருமுனையில் திரும்பி நின்றாள். இதுநாள் வரை, வீட்டில் பாவாடை சட்டை தான். அல்லது முக்கால் பேன்ட். தாவணி மாதிரியான இம்சை உலகத்திலேயே இல்லை.
அருகில் போனபோது, அந்தத் தெருவின் முனையில், பாலிடெக்னிக் வாசல் தெரிந்தது. அப்பாடா என்று இருந்தது.
“டெய்லி இப்படித்தான் வரணும். சீட் கிடைச்சுடும். ரயில் பிடிச்சு சென்ட்ரல் வந்து இறங்கி, பஸ் பிடிச்சு இங்கே வரணும், ஞாபகம் வெச்சுக்கோ...” அம்மா சொல்லிக்கொண்டே முன்னாள் நடந்தாள். அம்மா முகத்தில் அப்படியொரு எண்ணெய். வழக்காம இருக்கும் தோள் பை இல்லை. சுகாசினியின் சான்றிதழ்களை ஒரு ஃபைலில் வைத்து, அதை ஒரு மஞ்சள் பையில் எடுத்துவந்திருந்தாள். வித்தியாசமாக இருந்தது.
“நோட்டீஸ் போர்டு எங்கே இருக்கும்பா?”
வாசலில் நின்றிருந்த காவலரிடம் கேட்டாள் அம்மா.
“அட்மிஷனா?”
“ஆமாம்.”
“லெஃப்டு திரும்பி போங்க. அங்கே ஆபீஸ் ரூம் வாசல்ல நோட்டீஸ் போர்டு இருக்கும்.”
அம்மா பரபரவென நடக்க ஆரம்பித்தாள். சுற்றி மரங்கள் அடர்ந்த விரிந்த மைதானம். அசாத்தியமான அமைதி குடிகொண்டிருந்தது. அத்தனையிலும் ஓர் அப்பழுக்கற்ற நறுவிசு. கொஞ்ச தூரத்தில், அந்த பாலிடெக்னிக் கல்லூரியின் பெயரைத் தாங்கியிருந்த ஆன்மிக குருவின் மார்பளவு சிலை. அவர் சிரிப்பில் கனிவும் கண்டிப்பும் தெரிந்தது.
அலுவலக அறையை அம்மா அடுத்த மூன்றே நிமிடங்களில் அடைந்துவிட்டார். அங்கே பத்து, பன்னிரெண்டு பெண்கள், பெற்றோரோடு நின்றிருந்தனர். வெளியே தெரிந்த வெயில், அலுவலகத்தின் வாசலில் அதிகம் தெரியவில்லை.
எல்லோரையும் லேசாக விலக்கிவிட்டு, அம்மா, நோட்டீஸ் போர்டு அருகே போய் நின்றார். அறிவிப்பு பலகை, கண்ணாடிப் பெட்டிக்குள், சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது. ஒருசில கணங்கள். மேலே இருந்து கீழே பார்வையை ஓட்டியவர், சுகாசினியைத் திரும்பிப் பார்த்தார். அம்மா முகத்தில் இறுக்கம் சூழ்வதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
“நீ பாரு. உன் பேரு இருக்கான்னு பாரு...”
சுகாசினிக்கு திடுக்கென்று இருந்தது. பெயர் இல்லையா? ஐயோ!
உண்மையில் அவள் பெயர் பட்டியலில் இல்லை. அம்மா மேலும் கீழுமாக பார்த்தவர், ஒரு கணம் திகைத்துப் போனார். கண்ணில் நீர் முட்டிக்கொண்டது.
சுகாசினிக்கு அம்மா முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது.
“எரும மாடு. பாரு...என்ன மார்க்கெல்லாம் வந்திருக்குன்னு..”
பட்டியலில் இடம்பெற்ற பெண்களின் பெயர்கள் அருகே, அவர்கள் எஸ்.எஸ்.எல்.சி.யில் பெற்ற மதிப்பெண்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. எல்லாமே 491, 490, 489... என்று இருந்தன. 435க்கு எங்கே சீட் கிடைக்கும்?
அம்மா, சுகாசினி முகத்தையே பார்க்கவில்லை. நான் இதற்கு என்ன செய்யமுடியும் என்று கேட்கவேண்டும் என்று தோன்றியது. அவ்வளவு தான் படிக்க முடிந்தது.
அம்மா அலுவலக ஜன்னல் கம்பியருகே போய் நின்றுகொண்டாள். உள்ளே இருக்கையில் அமர்ந்திருந்த பெண், அம்மாவை கவனிக்கவே இல்லை. உள்ளே யாருடனோ பேசிக்கொண்டு இருந்தாள். சற்றுநேரம் கழித்து முகத்தைத் திருப்பியவர், ‘என்ன வேண்டும்’ என்பதுபோல் தலையசைத்தார்.
“என் பொண்ணு பேரு லிஸ்டுல இல்ல. செகண்டு லிஸ்டு ஏதும் போடுவீங்களா?”
“இல்ல மேடம். ஒரே லிஸ்டு தான்.”
“யாராவது விட்டுட்டுப் போனா, அடுத்தடுத்து வர்றவங்களை கொடுப்பீங்க இல்ல...”
“அதெல்லாம் சிஸ்டர் தான் முடிவு பண்ணுவாங்க.”
மேலும் பேசுவதற்கு ஏதுமில்லை, கேள்வி மேல் கேள்வி கேட்காதே என்பது போலிருந்தது, அந்தப் பெண்ணின் பதில்கள்.
“சிஸ்டரை மீட் பண்ண முடியுமா?”
“அந்தப் பக்கம் உள்ளே போங்க. ரூமுக்கு வருவாங்க.”
சுகாசினியைப் பிடித்துக்கொண்டு, அந்த அலுவலகப் பெண் சொன்ன திசையில் வேகமாக நடந்தாள்.
அங்கே இவர்களுக்கு முன்பாக நான்கைந்து பெண்கள், பெற்றோருடன் நின்றுகொண்டிருந்தனர். முற்றம் போன்ற விரிவான இடம். அந்தப் பக்கம் இருந்த அறையில் தான் சிஸ்டர் என்று சொல்லப்படும் ஆசிரமத் தலைவர் இருக்க வேண்டும்.
“சிஸ்டர் வந்துட்டாங்களா?”
கொஞ்சம் வினோதமாக அம்மாவின் முகத்தைப் பார்த்த அந்தப் பெண்,
“எனக்கென்ன தெரியும்? நானும் உங்களப் போலத் தான் வெயிட் பண்றேன்.”
“நோட்டீஸ் போர்டுல பெயர் இல்லையா?”
உதட்டைப் பிதுக்கினாள் அந்தப் பெண். அவளது அருகே இருந்த சின்னப் பெண், அவளது மகளாக இருக்கவேண்டும். நின்றிருந்த அத்தனை அப்பா, அம்மாக்கள் முகத்திலும் களை இல்லை. சீட் மறுக்கப்பட்டவர்கள். சுகாசினிக்கு எந்தப் பெண் முகமும் அறிமுகமில்லை. எல்லோரும் அப்பா, அம்மாவுக்கு பயந்துகொண்டு தள்ளி நின்றிருந்தார்கள்.
அம்மா லேசாக கால் மாற்றி நின்றுகொண்டாள். காலில் அம்மா வழக்கமாக போடும் காலணி இல்லை. திடீரென்று ஒருவித வறுமைத் தோற்றத்தை அம்மா வரவழைத்துக் கொண்டிருப்பதாகவே தோன்றியது. எதற்கு இந்த வேஷம் என்று கேட்கவேண்டும் என்று வாய்வரை வந்துவிட்டது. அடக்கிக்கொண்டாள் சுகாசினி.
பல சமயங்களில் அம்மா சில முடிவுகளை எடுக்கிறாள். ஏன், எதற்கு என்று புரியவே மாட்டேன் என்கிறது.
திடீரென்று சலசலப்பு. எதிரே இருந்த அறையில் இரண்டு மூன்று சிஸ்டர்கள் உள்ளே வருவது போவதுமாக இருந்தார்கள். குரல் உயராத அடக்கமான பேச்சு மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. யாரோ ஒருவர் கேள்வி எழுப்ப, பதில்கள் அதைவிட அடக்கமாக சொல்லப்பட்டன. சற்றுநேரத்தில் அதுவும் நின்று போனது.
இரண்டு சிஸ்டர்கள் வெளியே வந்து நிற்க, முதிய மாது ஒருவர் வெளியே வந்தார். தலை மழித்து, கழுத்துவரை காவி உடை தரித்து, நிதானமாக பேசிக்கொண்டே வந்தார். இல்லை, உத்தரவுகளைக் கொடுத்துக்கொண்டே வந்தார். அந்த இடமே லேசாக உற்சாகம் கொள்ளத் தொடங்கிவிட்டது.
“என்ன நிக்கறாங்க?” பக்கத்தில் இருந்த சிஸ்டர்களைப் பார்த்து முதிய மாது கேட்க,
“பாலிடெக்னிக் அட்மிஷனுக்கு வந்திருக்காங்க...”
உடனே அந்தம்மாள், அனைவரையும் பார்த்து, “நோட்டீஸ் போர்டுல போட்டிருக்கே. அதுப்படி தான் அட்மிஷன். பேர் இருக்கான்னு போய் பாருங்க.”
இரண்டு மூன்று பெற்றோர்கள் முன்னே நகர்ந்தனர்.
“பேர் இல்ல. அதான் உங்களைப் பார்க்கலாம்னு...”
“என்ன பார்த்து என்ன பிரயோஜனம்? மார்க் வாங்கியிருக்கணும். உன் பேர் என்ன?”
முன்னால் நின்றுகொண்டிருந்த சிறு பெண்ணைப் பார்த்துக் கேட்டார் அந்த மாது. அந்தக் குரலும் அதில் தெரிந்த கருணையும் மிக அனுசரணையாக இருந்தது சுகாசினிக்கு.
“அகல்யா.”
“எவ்வளவு மார்க் வாங்கினே?”
“ஃபோர் செவண்டிஃபை.”
“ஏன் மிச்சத்தையெல்லாம் விட்டுட்டே. சாப்பிட்டுட்டியா?”
“வீட்டுல கஷ்டம்.” அந்தப் பெண்ணின் அப்பா போலிருந்தவர் உள்ளே நுழைந்தார்.
“அதுக்காக படிக்காம இருக்க முடியுமா?”
அடுத்திருந்த சிறு பெண் பக்கம் பார்வை நகர்ந்தது.
“நீ எவ்வளவு வாங்கினே?”
“ஃபோர் சிக்ஸ்டி”
அம்மா முன்னே நகர்ந்தாள். அந்த மாதுவின் பார்வையில் படும்படி நெருக்கிக்கொண்டு நின்றாள்.
“உன் பேர் என்ன?”
தன்னைத் தான் கேட்கிறார் என்பதை உடனே சுகாசினியால் புரிந்துகொள்ள முடியவில்லை. அம்மா பரபரத்தாள்.
“அப்பா இல்லாத பொண்ணு. இவளையும் இவ தம்பியையும் நான் தான் ஒண்டியாளா இருந்து பார்த்துக்கறேன். நீங்க தான் மனசு வெச்சு சீட் குடுக்கணும். எங்க வீட்டுக்காரர் இல்லாம... இவங்களை எப்படியாவது மேலே கொண்டுவந்துடணும்னு நான் படற பாடு...”
“என்ன மார்க்?”
“ஃபோர் தர்ட்டிஃபை. அப்பா இல்லாத சோகம்...”
“அப்பா இல்லன்னா படிப்பு வராதா?”
“நான் ஒண்டிக்கட்டையா சம்பாதிச்சுக்கிட்டு, திண்டாடறேன். இவ தலையெடுத்து வேலைக்குப் போனால் தான்...”
அம்மா அழுதுவிடுவாள் போலிருந்தது. அந்த ஆசிரம மாது கவனமே செலுத்தவில்லை. மெல்ல நகர்ந்துபோக ஆரம்பித்துவிட்டார்.
பெற்றோர்கள் இனி அங்கே நிற்பதில் பயனில்லை என்று நகரத் தொடங்கினர். அம்மா, இன்னும் கொஞ்சம் நேரம் நின்றாள். சுகாசினிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
சீட் கிடைக்கவில்லை என்பதைவிட, அம்மாவின் காரணங்கள் தான் ரணம் ஏற்படுத்தின. எதைச் சொல்லி, என்ன சலுகை கேட்பது?
அம்மா வீடு வரும்வரை பஸ்ஸிலும் ரயிலும் திட்டிக்கொண்டே வந்தாள். தனக்குச் சீட் கிடைக்காதது ரொம்பச் சரி என்றே சுகாசினிக்குத் தோன்றியது. ‘அம்மா! நீ செய்வது தப்பு’ என்பதை வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்று மனது பரபரத்தது. அது அம்மாவை மேலும் காயப்படுத்திவிடலாம் என்பதால் மனத்துக்குள் சொல்லிக்கொண்டாள் சுகாசினி.
--------------------------