Dear friends,
Greetings from ‘Nesamudan’. Hold on! Don’t hit the delete button yet – this is not a spam mail. Welcome to the my Email Magazine: ‘Nesamudan’.
You received this email because I assume you love reading my Email Magazine. Happy reading!
Venkatesh R
Email: venkatesh.nesamudan@gmail.com
21 April 2020
Archives : https://rvenkatesh.substack.com/
How to unsubscribe: If you do not wish to receive any more updates from ‘Nesamudan’, please email me and I shall be prompt in removing your email ID from my mailing list.
P.S: Also you can share your friend's Email ids, who might like Tamil writings.
இவ்விதழில்:
1. படைப்புகளைக் கொண்டாடலாமா?
2. இயற்கை இட்ட கட்டளை
3. தர்மம் (சிறுகதை)
_______________
படைப்புகளைக் கொண்டாடலாமா?
****************************************
சினிமா பத்திரிகையாளர்கள், கட்டுரை ஆசிரியர்கள் மத்தியில் சமீபத்தில் ஒரு பழக்கத்தைப் பார்க்கிறேன். குறிப்பிட்ட ஒரு படம் வெளிவந்து ஐம்பதாவது ஆண்டு, இருபத்தைந்தாவது ஆண்டு, பதினைந்தாவது ஆண்டு, பத்தாவது ஆண்டு என்று விரிவாக கட்டுரைகள் எழுதிக் கொண்டாடுகிறார்கள். முதலில் கொஞ்சம் கெளரவமான படங்களில் தொடங்கிய இந்தப் போக்கு, தற்போது, மிகச் சாதாரண கமர்ஷியல் படங்கள் வரை வந்துவிட்டது. அதைவிடக் கொடுமை, அதை பார்க்கும் விதம்.
இன்றும் அவற்றை பழைய கதாநாயக கொண்டாட்ட மனோபாவத்துடனே அணுகுகிறார்கள். காலமாற்றம், புதிய அணுகுமுறைகளையும் பார்வைகளையும் தராசுகளையும் கொடுத்திருக்க வேண்டாமா? கொடுக்கவில்லை. அது அவர்கள் பாடு. நான் சினிமா பத்திரிகையாளன் இல்லை. அதனால், எனக்கு அதைப் பற்றி அதிகம் பேசுவதற்கு நியாயமில்லை.
ஆனால், சினிமாவுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், ஏன் இலக்கியத்துக்குக் கொடுக்கப்படவில்லை? சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’, ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ ஆகியவை வெளிவந்து எத்தனை ஆண்டுகள் ஆயின? அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக்கோடு’, ‘மானசரோவர்’, ‘தண்ணீர்’? நகுலனின் ‘நினைவுப் பாதை’? தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’? காசியபனின் ‘அசடு’? க.நா.சு. மொழிபெயர்த்த ‘தேவமலர்’? சுஜாதாவின் ‘ஜன்னல் மலர்’?
மாலனின் ‘ஜனகணமன’? ஆதவனின் ‘காகித மலர்கள்’? கிருத்திகாவின் ‘வாசவேஸ்வரம்’? சா. கந்தசாமியின் ‘அவன் ஆனது’, ‘சாயாவனம்’? விட்டல்ராவின் ‘நதிமூலம்’, போக்கிடம்’?
சிறுகதைத் தொகுப்புகளும் கவிதைத் தொகுப்புகளும் கூட ஞாபகம் வருகின்றன. ‘குயிலின் சுருதி’ (ந.பிச்சமூர்த்தி), ‘அன்று வேறு கிழமை’ (ஞானக்கூத்தன்), ‘புதுக்குரல்கள்’ (தொகுப்பு), ‘உதயநிழல்’ (எஸ். வைதீஸ்வரன்), ‘வேலி மீறி கிளை’ (நாரணோ ஜெயராமன்), ‘அவரவர் கைமணல்’ (ஆனந்த், தேவதச்சன்);
‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ (சிறுகதைத் தொகுதி), வெயிலோடு போய் (ச. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்), மதினிமார்கள் கதை (கோணங்கி சிறுகதைகள்),
மீராவின் அன்னம் பதிப்பகம் வெளியிட்ட ‘நவகவிதை வரிசை’...
தனிப்பட்ட சிறுகதைகளும் ஞாபகம் வருகின்றன. ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ (அம்பை), ‘நான்காம் ஆசிரமம்’ (ஆர்.சுடாமணி), ‘பிரும்மம்’, ‘மீன்’(பிரபஞ்சன்), ‘அக்னிப் பிரவேசம்’ (ஜெயகாந்தன்) போன்றவை வெளிவந்து இன்றோடு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்?
நான் பல பெயர்களை விட்டுவிட்டேன் என்று என் மீது கோபம் கொள்ளாதீர்கள். இதை எழுதும்போது, இந்தப் பெயர்கள் ஞாபகம் வந்தன. இன்னும் நிதானமாக பட்டியலிட்டால், பல எழுத்தாளர்களும் படைப்புகளும் இடம்பெறக்கூடும். இவையெல்லாம் நான் அறிந்து, பலரும் போற்றிப் புகழ்ந்தவை.
கடந்த 70 ஆண்டுகளில், தமிழில் எழுத வந்த ஒவ்வொரு படைப்பாளியும் இந்த ஆசிரியர்களையும் படைப்புகளையும் நிச்சயம் படித்திருப்பார்கள். அதனால், தாக்கம் அடைந்திருப்பார்கள். வாசகர்கள் ஒரு பக்கம் கொண்டாடினார்கள் என்றால், எழுத்தாளர்களுக்கே வழிகாட்டும் படைப்புகளாக மிளிர்ந்தவை இவை. இவற்றின் பாதிப்பு அதன் பின்னர் வந்த தலைமுறை தோறும் நிச்சயம் பிரதிபலித்திருக்கும்.
வண்ணநிலவன் போன்று என்னால் ஒரு காதல் கதை எழுத முடிந்துவிட்டால், நான் எழுதுவதையே நிறுத்திவிடுவேன்.
ஒவ்வொரு படைப்பையும் இன்றைய புரிதலையும் பார்வையையும் அணுகுமுறைகளையும் நிறுத்துக்கோலாகக் கொண்டு, எடை போட்டு எழுத வேண்டும். இவை கொண்டாடப்பட வேண்டியதற்கான காரணத்தையும் சொல்லவேண்டும். ஒவ்வொரு தலைமுறை எழுத்தாளர்களும் அதை வேறுவேறு கோணங்களில் அணுகியிருப்பார்கள். புதிய அர்த்தங்கள் கிடைத்திருக்கக் கூடும். இவற்றையெல்லாம் எழுதி மெச்ச வேண்டும்.
70களில் இருந்த கிறிஸ்துவ இலக்கிய சங்கம் இதுபோன்ற முயற்சியைச் செய்திருக்கிறது. ஆதவனின் ‘காகித மலர்கள்’ நாவல் பற்றிய ஒரு அமர்வு நடைபெற்றுள்ளது. அதில், தி.க.சி. வாசித்த விரிவான கட்டுரை கருத்தாழம் மிக்கது. சமீபத்தில், நண்பர் கவிஞர் கல்யாணராமன் பேசிக்கொண்டு இருந்தார்.
செல்லம்மாள் கல்லூரியின் சார்பில், தி.ஜா.வின் சிறுகதைகள் தொடர்பாக ஒரு கட்டுரைத் திரட்டை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், நான் ஒரு கட்டுரை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மனம் உவந்து ஏற்றுக்கொண்டேன்.
பல்வேறு ஊர்களில் இலக்கிய கூட்டங்கள் நடைபெறுகின்றன. ஒரு குறிப்பிட்ட படைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு மாலைநேரத்தில் விவாதிக்கலாமே. மூன்று நான்கு பேர் அதைச் சுற்றியே தமது கட்டுரைகளை அமைத்துக்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
----------------
இயற்கை இட்ட கட்டளை
******************************
இதைச் சொன்னால் என்னைப் பலரும் பழம் பஞ்சாங்கம் என்று நினைக்கக் கூடும். ஆனால், என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. 21 +19 = 40 நாட்கள் ஊரடங்கு என்பது கிட்டத்தட்ட ஒரு மண்டலத்துக்கு நிகர். தமிழகத்தில் டாஸ்மாக் மூடியும் இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. இதுநடுவே, ஒருசில ஊர்களில், சாராய ஊறல்களை அழித்த சம்பவங்கள் நடைபெற்றன. குக்கரில் சாராயம் காய்ச்சி பிடிபட்டவர்கள் உண்டு. ஐந்தாறு பேர் போதைக்காக ஏதோ ஆசிட்டை குடித்து செத்துப் போனதும் உண்டு. வீட்டில் இருந்தபடியே சாராயம் காய்ச்சுவது எப்படி என்ற யூடியூப் வீடியோக்களும் வளைய வந்தன.
ஆனால், பெரும்பான்மையான மதுப் பிரியர்கள் அடக்கமாகவே இருந்துவிட்டார்கள். வீட்டைவிட்டு வெளியே போகவில்லை. கள்ளச்சந்தையில் வாங்கிக் குடிக்கும் அளவுக்குக் கையில் பணம் இல்லையென்பதும் உண்மைதான். ஆனாலும், ஏகதேசம், மதுப் பழக்கம் 90 சதவிகிதத்துக்கு மேல் ஒழிந்துவிட்டது.
ஊரடங்கின் உத்தமமான பலன்களில் இதுவும் ஒன்று.
தமிழ்நாட்டு அரசாங்கம், இதையே முகாந்திரமாக வைத்து, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடிவிடலாம். பெண்கள் எல்லோரும் நிச்சயம் அ.இ.அ.தி.மு.க. அரசைக் கொண்டாடுவார்கள்.
கேரளத்தில் போதைப் பிரியர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், மது வழங்கலாம் என்று அந்த அரசாங்கம் முடிவெடுத்தது. கேரள உயர்நீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது. அந்தச் சமயத்தில், தமிழகத்திலும் ‘ஆஹா, பார் என்ன அற்புதமான திட்டம்’ என்று கொண்டாடினார்கள். அதை ஏன் நாம் தமிழகத்திலும் பின்பற்றக்கூடாது என்று எழுதினார்கள்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குகொண்ட அரசுத் துறையில் பணியாற்றிய முன்னாள் மருத்துவர் சொன்னது தான் என்னை மகிழ்ச்சிகொள்ள வைத்தது.
“அவர்கள் குடிநோயாளிகள். அவர்களை அதில் இருந்து மீட்பதற்குத் தான் மருத்துவர்கள் உதவ வேண்டுமேயன்றி, மது குடிக்க பரிந்துரை செய்வது என்பது இழிவான செயல்” என்றார்.
இதேபோல் இதர போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர்களும் ஓரளவுக்குக் கட்டுக்குள் இருக்கிறார்கள். போதை பாக்கு, நாக்குக்குக் கீழே அதக்கிக்கொள்ளும் ஒருவிதமான பொடி, பீடா கடைகள் போன்ற பல விஷயங்கள் தற்போது பெரும்பாலும் இல்லை. தாராளமாக கிடைப்பதைத் தடுத்தாலே, படிப்படியாக பழக்கம் மறைந்துவிடும் என்பதற்கு 40 நாட்கள் ஊரடங்கே சாட்சி.
பலர் ஒருமாதிரி நிலையற்று, தடுமாற்றத்துடன் அலைவதைப் பார்க்க முடிகிறது. அவர்களால் தங்கள் பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் திண்டாடுகிறார்கள் என்பதும் தெரிகிறது. ஆனால், அவர்களை திருத்தி, மீட்பதற்கான சந்தர்ப்பம் இதைத் தவிர வேறொன்று அமையப் போவதில்லை. இவர்கள் நாளடைவில் சரியாகிவிடுவார்கள். அல்லது அதிகபட்சம் மனநோய் சிகிச்சைக்கு ஆட்படுவார்கள். எப்படி இருந்தாலும் மீட்சி சாத்தியம்.
வழக்கம்போல், ‘கள்ளச்சாராயம் பெருகி ஓடும், மரணங்கள் அதிகரிக்கும். அதற்குப் பதில் அரசாங்கமே மதுக்கடைகளைத் திறந்துவிடலாம்’ என்றொரு பூச்சாண்டி காட்டப்படுகிறது. அப்படி ஒரு சூழல் வந்தால், அதைக் காவல்துறை காலில் போட்டு நசுக்கட்டும்.
இதேபோல் வைக்கப்படும் இன்னொரு வாதம், தனிமனித சுதந்திரம். அடுத்தது, குடி தமிழர் பண்பாடு. அதை எப்படி விலக்கச் சொல்லலாம்? என்பது.
இவையெல்லாம், அவரவர் வீட்டுப் பெண்கள் சிந்தும் கண்ணீரின் முன்பு, கால்தூசிக்குச் சமானமில்லை.
ஒரே ஒரு விஷயம் தான். டாஸ்மாக்கினால் கிட்டத்தட்ட 30 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அதை விட்டுவிடவேண்டுமா? பல்வேறு நலத்திட்டங்களுக்கு பணம் இல்லாமல் போய்விடுமே?
டாக்மாக்கை ஒழித்துவிட்டலே, மக்கள் நலம் பெற்றுவிடுவார்கள். அவர்களுக்கு என்று தனியே இனிமேல் நலப் பணிகளே தேவை இல்லை. சொந்தக் காலில் நிற்பார்களே. அரசாங்கத்திடம் கையேந்தி நிற்கவேண்டிய அவசியமே ஏற்படாமல் போய்விடும்.
தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு இயற்கை இட்டுள்ள கட்டளை இது. இதைச் சிரமேற்கொண்டு செய்வது, அரசாங்கத்தின் பொறுப்பு.
-----------------------------------
தர்மம் (சிறுகதை)
********
மருந்துக்கும் துளி காற்று இல்லை. இலைகளோ, கிளைகளோ அசைவேனா என்றன. விசிறியை கைமாற்றி கைமாற்றி வீசினாலும், சேஷசாயிக்குக் கைவலித்ததே தவிர, காற்று உடம்பில் பட்ட மாதிரியே இல்லை. மூன்று மணிநேரமாக கரண்ட் இல்லை. புழுக்கம். திண்ணையில் திரும்பித் திரும்பிப் படுத்துக்கொண்டான்.
கொசு வேறு காதருகே வந்து வந்து எரிச்சல்மூட்டிவிட்டுப் போனது. நாளை காலைவரை தூங்கமுடியாமலேயே போய்விடலாம்.
மணி இரண்டிருக்கலாம். படுத்துக்கொண்டபோதே 11க்கு மேல் ஆகிவிட்டது. வெற்றிலை, பாக்கு, தேங்காய் எல்லாம் போட்டு, 150 பைகளைத் தயார்செய்து முடிக்கவே அவ்வளவு நேரமானது. எதிரே மாட்டுக்கொட்டகையில் மாடுகள், கால் மாற்றி நிற்பதும், கனைப்பதும் லேசாக கேட்டுக்கொண்டே இருந்தன.
காற்று இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, கொசுக்களேனும் இல்லாமல் இருந்திருக்கலாம். போர்வையைப் போர்த்திக்கொள்ளவும் முடியவில்லை. நல்ல சித்தரை மாசத்தில் வந்து மாட்டிக்கொண்டதன் பலன்.
சேஷசாயி எழுந்து உட்கார்ந்துகொண்டான். சுற்றிலும் இருட்டு. என்ன செய்வது என்று தெரியவில்லை. சீக்கிரம் விடிந்துவிட்டால் போதும் என்றிருந்தது.
எப்படியிருந்தாலும் எல்லோரும் எழுந்துவிடுவார்கள். புழக்கடையில் போய் குளித்துவிட்டு, தயாரானால், 9 மணிக்கெல்லாம் பூணூல் போட்டுவிடுவார்கள்.
பதினொன்றுக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு, கிளம்பிவிட வேண்டும். மெட்ராஸ் தான் சொர்க்கம்.
நாளை காலையேகூட கிளம்பி வந்திருக்கலாம். அம்மா தான் இன்றைக்கே போய், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் செய் என்று அனுப்பிவிட்டாள்.
விடிகாலையிலேயே பூக்கடையில் பஸ் பிடித்து, விழுப்புரம் வந்தபோது, 10 மணி கூட ஆகவில்லை. பரிமளரங்கன் மாமா வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார்.
அவரது உயரத்துக்கும் தோற்றத்துக்கும் நிச்சயம் ராணுவத்தில் சேர்ந்திருந்தால், பெரிய அதிகாரியாக ஆகியிருக்க வேண்டும். அதனாலேயே அவரது மிலிட்டரி மாமா என்று வீட்டில் எல்லோரும் அழைத்தோம். ஆனால், நிஜத்தில் அவருக்கும் மிலிட்டரிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. வாழ்க்கை முழுவதும் அடுத்தவர் சொத்துகளை அபகரித்தே ஆண்டுவந்தவர்.
இதையும் அவர் முன்பு எவரும் சொன்னதில்லை. பின்னே பேசிக்கொள்வார்கள். நிலம், விவசாயம், வீடுகள், மாடு, தோப்பு, வாடகை என்று மனிதர் சுற்றிசுற்றி வருவார். மெட்ராஸ் வந்தால் தங்குவது சேஷசாயி வீட்டில் தான். வரும்போது மறக்காமல், வேர்க்கடலை, மஞ்சள், புளி எல்லாம் கொண்டுவந்துவிடுவார். அவர் மீது எத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும், இத்தகைய அன்பு உபயங்கள் அனைவர் வாயையும் அடைத்துவிடும்.
“என்னடா எழுந்துட்டே. இன்னும் ரொம்ப நேரம் இருக்கு, தூங்கு.”
இருட்டில் குரல் வந்த திசையைப் பார்த்தான் சேஷசாயி. மாமா, எதிர்பக்க திண்ணையில் இருந்தார். ரங்கநாதர் மாதிரி, ஒரு கையைத் தலைக்கு முட்டுக்கொடுத்து படித்திருப்பது, கோட்டுச் சித்திரம் போல் தெரிந்தது.
“ஒரே கொசு மாமா. தூங்கவே முடியல.”
“ஓடோமாஸ் போட்டுக்கோ. இத்தா... கொசு கிட்டவே அண்டாது.”
அவர் ஒரு குழாயைத் தூக்கியெறிவது தெரிந்தது. கண்கள் இருட்டுக்குள் பழகத் தொடங்கியிருந்தன. பக்கத்தில் வந்து விழுந்தது ஓடோமாஸ். பாது பிதுக்கி, பாதி நசுங்கி இருந்தது அந்தக் குழாய். மூடியைத் திறந்து கொஞ்சம் பிதுக்கி, கால்களில் முதலில் தடவிக்கொண்டான். அதன் மணம், சுகந்தமாக இருந்தது. ஆனால், கொசுவுக்கு இதுதான் எச்சரிக்கை போலும். அருகே வரவே பயப்படுமாமே?
“என்ன வாசிக்கிறேன்னு சொன்னே?”
“ப்ளஸ் ஒன் மாமா. சயின்ஸ் குரூப்.”
“மேலே என்ன படிப்பே?”
“இஞ்சினியரிங் போகலாம், மெடிசினும் போகலாம்.”
“என்ன மார்க் வாங்கியிருக்கே?”
எப்போதும் சேஷசாயி அஞ்சும் கேள்வி இது. எதைச் சொன்னாலும் பெரியவர்களுக்கு அதெல்லாம் போதவே போதாது. “எழுபத்தஞ்சு பர்சண்டுக்கு மேல வாங்கியிருக்கேன் மாமா.”
“ஓ! நம்ம செளமி என்ன வாங்கினான் தெரியுமா? கேட்டீயோ?”
செளமி என்பது செளமியநாராயணன். என்னைவிட சற்றே பெரியவன். மிலிட்டரி மாமாவின் மூன்றாவது மகன். மாலையில் அவனோடுதான் வெளியே சுற்றிக்கொண்டிருந்தேன். விழுப்புரம் கடைவீதியில். டிவிஎஸ் 50 நன்றாக ஓட்டினான். என்னென்னவோ பேசிக்கொண்டு இருந்தோம். அதில் பெண்கள் நிறைய இடம்பெற்றார்கள். படிப்பை மட்டும் கேட்கவில்லை.
“கேக்கல மாமா...”
“தலைவர், ப்ளஸ் டூவை மூணு வருஷமா உட்கார்ந்து உட்கார்ந்து எழுதறார். அவனும் சயின்ஸ் குரூப் தான். அவ்வளவு கஷ்டமா அந்தப் பாடம்?”
இதுவும் பதில் சொல்ல சிரமமான கேள்வி. எல்லா பாடங்களும் அத்துபடி என்று சொல்லமுடியாது. ஆனால், புரியும்படி சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் இருந்தால், தப்பித்துக்கொள்ளலாம்.
மாமா எழுந்து உட்கார்ந்துகொண்டு இருந்தார். அவருக்குப் பக்கத்தில் இன்னும் இருவர் படுத்திருப்பது தெரிந்தது. எல்லோரும் உறவினர்கள். எப்படித்தான் இந்தப் புழுக்கத்திலும் தூங்குகிறார்களோ?
மாமா வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டு திண்ணையை விட்டு இறங்கினார். வாசல் அருகே போய் கையை உயரே தூக்கிக்கொண்டு, சோம்பல் முறித்தார்.
“பெரியவனும் இவனப் போலத்தான். ப்ளஸ் டூவே முடிக்கல. பஸ் கண்டக்டரா சேர்த்துவிட்டேன்.”
இது மூத்த அண்ணா, புருஷோத்தமன். தனியார் பேருந்து நிறுவனம் ஒன்றில், அவர் வேலை பார்ப்பது தெரியும். அவரது மகனுக்குத் தான் நாளைக்கு பூணூல்.
பிள்ளைக்கு பத்ரீஷ் என்று பெயர் வைத்திருந்தார் அந்தண்ணா. பத்ரிநாராயணன் என்ற பெயரின் ஸ்டைலிஷ் சுருக்கம் அது.
“தூங்கறியா...இல்ல, இப்படி நடந்து போயிட்டு வரலாமா?”
சட்டென திண்ணையை விட்டு இறங்கினான் சேஷசாயி. நாலு முழ வேட்டியை இடுப்பில் இறுக்கிக்கொண்டு, மாமா அருகில் போய் நின்றான். மாமா, சாலைக்கு வந்துவிட்டார்.
ஊரே தூங்கிக்கொண்டு இருந்தது. சாலையோரம் இரண்டு பக்கமும் கழிவுநீர் ஓடுவதற்கு பாதை. நடுநடுவே, சச்சதுர மேடை கட்டி குடிநீர் குழாய்கள். ஒருமாதிரி திட்டம் இருந்தார் போலும் இருந்தது. அதில் அழகும் இருந்தது.
மாமா முன்னே நடக்க ஆரம்பித்தார். காலாற. அமைதியாக. இது தனக்கு யோசனைக்கான நேரம் என்பது போல் இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் உயரமான தென்னைகள். வாயால் ஊதுவது போல் காற்று.
“உங்கம்மா, பெரியம்மா எல்லா இந்த வீட்டுலதான் பொறந்தா, தெரியுமா?”
அவர் சுட்டிக்காட்டிய வீடு, மாமா வீட்டில் இருந்து நான்கு வீடுகள் தள்ளியிருந்தன.
“இதுக்கு அந்தக் காலத்துல ‘குட்டிண்ணா வீடு’ன்னே பேரு. உங்க தாத்தாவை எல்லாரும் ‘குட்டிண்ணான்னு’ கூப்பிடுவா...”
“ஓ!”
இதெல்லாம் இப்போது யாரிடம் இருக்கிறதோ, தெரியவில்லை. தாத்தா தலைமுறையிலேயே மெட்ராஸ் வந்துவிட்டார்கள். ஜார்ஜ் டவுனில் குடியேறி, இரண்டு தலைமுறை வந்துவிட்டது. அம்மாவே ஜார்ஜ் டவுனில் தான் வளர்ந்தவள்.
“இங்க தான், ரெண்டாவதுவனுக்கு கடை வெச்சுக் கொடுத்தேன். உரக் கடை. எல்லாத்தையும் வித்து சுட்டுப்புட்டு, எங்கியோ ஓடிப்பூடுத்து அந்தக் கழுதை..”
இது சத்தியமூர்த்தி அண்ணா. அம்மா, இந்த அண்ணா பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். முதல் முறையாக ஒரு கேரளத்துப் பெண்ணைத் திருமணம் முடித்தவர் சத்தியமூர்த்தி. தைரியமாக வீட்டுக்கும் அழைத்து வந்தாராம். மிலிட்டரி மாமா குதிப்பார், கத்துவார் என்று எல்லோரும் பயந்துகொண்டிருந்த நேரத்தில், அவரைத் தனிக்குடித்தனம் வைத்துக்கொடுத்து ஆசிர்வதித்திருக்கிறார்.
“கடை நல்லா போச்சுன்னு சொன்னாளே அம்மா.”
“நன்னா தான் போச்சு. சேர்வார் சேர்க்கை சரியில்ல. ரேஸ் பைத்தியம் பிடிச்சுடுத்து. எல்லாத்தையும் வித்துசுட்டு எங்கெங்கையோ போய் ரேஸ் விளையாடினான். எத்தனை நாள் தாங்கும், சொல்லு? கடன் கொடுத்தவனெல்லாம் ஒருநாள் கழுத்த பிடிச்சு நெருக்கிட்டான். ஓடிட்டான்.”
மலையாளத்து மன்னி மட்டும் வீட்டோடு இருந்தாள். அவளுக்கு ஒரு பெண். கீர்த்தனா. மிலிட்டரி மாமா தான் அவளையும் வளர்த்துக்கொண்டிருந்தார். பேத்தி பாசம் அதிகம். மடிமீது போட்டு சீராட்டிக்கொண்டே இருப்பார்.
சாலை முனையை அடைந்திருந்தோம். தூரத்தில் பால் கேனை சைக்கிளில் கட்டிக்கொண்டு சிலர் போய்க்கொண்டிருந்தனர். வைக்கோல் ஏற்றிய மாட்டு வண்டி ஒன்று நிதானமாக வந்துகொண்டிருந்தது.
“இங்கே கொஞ்சம் காத்து, ஜிலுஜிலுன்னு வருது மாமா.”
மாமா பதிலே சொல்லவில்லை. தூரத்தில் வளைந்து வளைந்து போன சாலைகளையே பார்த்துக்கொண்டிருந்தார். இரண்டு பக்கமும் லேசாகத் தலையைத் திருப்பியவர்,
“உங்கம்மா உன் மேல உசிரையே வெச்சிருக்கா. நல்லா படி. நல்ல உத்யோகத்துக்குப் போ. உங்கப்பன் ராவும் பகலும் வேலைபார்த்து, ரத்தத்தை வேர்வையா சிந்தறான். அவன் சம்பாதிக்கற ஒவ்வொரு காசும் உடம்புல ஒட்டும்.”
மிலிட்டரி மாமாவும் அப்பாவும் பேசிக்கொண்டதே இல்லை. ஒரு மாதிரி முரட்டுத்தனம். மாமாவை, ‘திருட்டு ராஸ்கல்’ என்றுதான் அழைப்பார் அப்பா. ஆனால், முதன்முறையாக மாமா, அப்பாவைப் புகழ்ந்து பேசுகிறார்.
“நான் கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே, மாமா.”
“அதெல்லாம் ஒண்ணுமில்லடா, கேளு.”
“ஏன் மாமா, எங்கப்பாவுக்கு உங்களைப் பிடிக்கவே மாட்டேங்கறது? நீங்களும் அவரைப் பார்க்க மாட்டேங்கறீங்க?”
மாமா பேசவில்லை. திரும்ப நடக்க ஆரம்பித்துவிட்டார். தான் ஏதோ தப்பாக கேட்டுவிட்டோம் என்று தோன்றியது சேஷசாயிக்கு. உண்மையில், மிலிட்டரி மாமாவை சேஷசாயிக்கு மிகவும் பிடிக்கும். ஒருவிதமான முரட்டு அழகு அவர். மெட்ராஸ் வரும்போதெல்லாம், மாமாவுக்கு சேஷசாயிதான் துணை. பாரிஸ் முனையில் உள்ள லாயர் அலுவலகங்களுக்கு போவார், தம்புச் செட்டித் தெரு, லிங்கிச் செட்டித் தெரு என்று ஒன்றுவிடாமல், நடப்பார்கள். அல்லது சைக்கிள் ரிக்ஷாவில் போவார்கள். அவரது பழக்கங்களும் பேச்சுகளும் வித்தியாசமாக, பெரிய மனுஷத்தனமாக இருக்கும். அப்பாவுக்கு முற்றிலும் நேர் எதிர் மனிதர்.
அந்தக் கவர்ச்சிதான், அவனை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது.
அம்மாவுக்கும் இந்தப் பூணூலுக்கு வரவேண்டும் என்று தான் ஆசை. முடியவில்லை. சேஷசாயி மட்டும் கிளம்பினான். சரியாகச் சொல்லவேண்டுமென்றால், இதுதான் அம்மா, அப்பா இல்லாமல் சேஷசாயி மேற்கொண்ட முதல் பயணம்.
“நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா, மாமா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லடா கண்ணு. தர்மம்னு ஒண்ணு இருக்கு. உங்கப்பன் உழைச்சு சாப்பிடறவன். நான் ஊரை அடிச்சு உலைல போடறவன். உழைக்கிற திமிர் அவனுக்கு இருக்கத்தானே செய்யும்? இதோ பார், உன்னை மாதிரி, வெத்தலை கொடியை அவன் பெத்திருக்கான். நானும் பெத்தேனே... ஒவ்வொண்ணும் மூலைக்கொண்ணா கெடக்கறதுகள். அப்பன் பாவம் பிள்ளைகளைச் சேரும்னு சொல்வா. நான் பெத்த மூணும், தடுமாறி தட்டழியறதுகள். இதெல்லாம் முடிஞ்சு, பேரன், பேத்திகள் தலையெடுக்கும் போதுதான், நிலைமை மாறும். பணம், காசு மட்டுமில்ல, பாவமும் சேர்க்கை தான். ஒரு தலைமுறை பாவத்தைச் சேர்க்கும், அடுத்த தலைமுறை அதுக்கு தண்டனை அனுபவிக்கும், மூணாவது தலைமுறை தான் சீரடையும். அது வரைக்கும் நான் இருப்பேனோ என்னவோ?”
வீட்டு வாசலை நெருங்கியிருந்தார்கள். கரண்ட் இன்னும் வரவில்லை. வீடே இருட்டாகத் தான் இருந்தது. சேஷசாயி என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மீண்டும் திண்ணையில் ஏறிப் படுத்துக்கொண்டான். மாமா வாசலிலேயே வானத்தைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்.
---------------------------
Nice