Dear friends,
Greetings from ‘Nesamudan’. Hold on! Don’t hit the delete button yet – this is not a spam mail. Welcome to the my Email Magazine: ‘Nesamudan’.
You received this email because I assume you love reading my Email Magazine. Happy reading!
Venkatesh R
Email: venkatesh.nesamudan@gmail.com
23 April 2020
Archives : https://rvenkatesh.substack.com/
How to unsubscribe: If you do not wish to receive any more updates from ‘Nesamudan’, please email me and I shall be prompt in removing your email ID from my mailing list.
P.S: Also you can share your friend's Email ids, who might like Tamil writings.
_______________
ஆசானுக்கு ஆசான்
**********************
சென்ற இதழில், ‘படைப்புகளைக் கொண்டாடலாமா?’ கட்டுரையில் தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும் என் அன்புக்குரிய ஆசானுக்கு ஆசானுமான இந்திரா பார்த்தசாரதியை விட்டுவிட்டேன். மிகப் பெரிய தவறு. மன்னிக்க.
_______________
மொழிவளம் அறிய ஓர் உத்தி!
********************************
மாணவர்களுக்கு எழுதும்போது, எனக்கு எப்போதும் ஒரு பயம் உண்டு. அவர்களுக்குப் புரிந்த மொழியில் தான் செய்திகளையோ தகவல்களையோ சொல்கிறோமா என்பதுதான் முதல் கேள்வி. இதற்கு இன்றுவரை என்னால் விடை சொல்ல முடிந்ததே இல்லை.
ஒவ்வொரு தலைமுறையிலும் நம் தமிழ் மொழியைப் படிக்கும் மாணவர்கள் எந்த அளவுக்கு மொழித் திறன் பெற்றிருக்கிறார்கள் என்பதற்கான எந்த ஓர் ஆய்வும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
எங்கள் தினமலர் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ இதழை ஒரு பள்ளியில் அறிமுகப்படுத்தியபோது நிகழ்ந்த ஒரு சுவையான அனுபவத்தை எங்கள் விற்பனைத் துறை நண்பர்கள் பகிர்ந்துகொண்டார்கள். அந்தப் பள்ளியின் பொறுப்பாளர் ஒரு வேலையைச் செய்தார். 8ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனையும், மாணவியையும் அழைத்து, எங்கள் இதழைக் கையில் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவர்கள் தடுமாறத் தொடங்கினர். அது தனியார் பள்ளி. எட்டாம் வகுப்பு வரை தமிழ் படித்துள்ள மாணவர்கள், பாடப் புத்தகத்துக்கு வெளியே வாசிப்பை வளர்த்துக்கொள்ளவில்லை என்பது முதல் செய்தி. அப்படியே வாசிக்கக் கிடைக்கும் எதையும் சரளமான வாசிக்கவும் தெரியவில்லை. மொழிப்பயிற்சி இன்மை.
என் கேள்வி வேறாக இருந்தது. ஒருவேளை நாங்கள் எழுதும் மொழி, அந்த மாணவர்களுக்குப் புரியவில்லையோ? இந்தக் கேள்விக்கு வருவதற்கு முன்பு இன்னொரு பிரச்னையையும் தமிழில் நான் பார்க்கிறேன். அதாவது, பல அறிவியல் துறைசார்ந்த கருத்துகளை எழுதும்போது, ஓர் உத்தி பின்பற்றப்படுகிறது.
தமிழில் இதையெல்லாம் சொல்வது கடினம் என்ற மனப்பான்மை செயற்படுகிறது. அல்லது, கருத்தை விளக்குவதற்குப் பதில், அதன் சாராம்சத்தை மட்டும் சொல்லிவிட்டு, நகர்ந்துவிடுவது.
அதனால் தான் பல சமயங்களில், தமிழில் எழுதப்படும் அறிவியல் எழுத்தை மட்டுமே படித்தால் போதும் என்று சொல்ல முடிவதில்லை. ஆங்கிலத்தில் ஒரு விஷயத்தை முற்றிலும் விளக்குவதுபோல், தெளிவுபடுத்துவது போல், தமிழில் பெரும்பாலும் செய்யப்படுவதில்லை. ஒருவேளை நாம் விளக்கிச் சொல்லி, அது புரியாமல் போய்விட்டால் என்ன செய்வது? அல்லது, இது ‘போர்’ அடிக்கிறது என்று விலகிப் போய்விட்டால் என்ன செய்வது? அதனால், ‘சுவாரசியம்’ என்ற அம்சத்தை மட்டும் முன்னிலைப்படுத்தினால் போதும் என்று கருதப்படுகிறோ என்ற எண்ணம் எனக்குள் எழாமல் இல்லை.
இவற்றை முற்றிலும் உடைக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ‘பட்டம்’ இதழில் வேலை செய்கிறோம். புரியாது என்று எதையும் ஒதுக்கக்கூடாது.
ஒப்பீடுகளின் மூலம், எடுத்துக்காட்டுகளின் மூலம், அறிமுகமான விஷயத்தைக் கொண்டு, அறிமுகமாகாத அம்சங்களை எடுத்துச் சொல்வது என்ற உத்தியின் மூலம் என்றெல்லாம் விதவிதமாக முயற்சி மேற்கொள்கிறோம்.
முதல் பிரச்னைக்கு வந்துவிடுகிறேன். மாணவர்களின் சொல்வளம் என்ன? தெரியவில்லை. சிங்கப்பூரின் கல்வித்துறை அமைப்பான ‘சிண்டா’விலும், மலேசியக் கல்வித் துறையிலும் முன்னர் ஒரு அணுகுமுறை பின்பற்றப்பட்டது. ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள், தமிழில் எத்தனைச் சொற்களை நிச்சயம் பயின்றிருக்க வேண்டும் என்று வரையறை செய்துள்ளார்கள். அவை என்னென்ன சொற்கள் என்பதையும் அவர்களுடைய பாடத்திட்டத்தோடு வெளியிட்டிருப்பார்கள்.
ஆங்கிலத்தில் இதற்கு ‘கிரேடிங்’ என்று பெயர். ஆங்கில மொழிக்கு இத்தகைய வரையறை உண்டு. அவ்விரு நாடுகளும் அதை தமிழ்மொழிக்கும் பயன்படுத்தி வந்தன. சமீப ஆண்டுகளில், இவ்விரு அமைப்புகளையும் அதிகம் தொடர்வதில்லை. அதனால், தற்போதைய நிலை தெரியாது.
இந்த அணுகுமுறை மிகவும் பயனுடையது. பாடப் புத்தகம் எழுதுகிற ஆசிரியர்கள் கூட, இந்தச் சொற்களுக்கு மேல் பயன்படுத்த மாட்டார்கள். தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் இத்தகைய ஒரு தரப்படுத்துதலைப் பின்பற்றுகிறதா என்று தொடர்ந்து கவனித்து வருகிறேன். எனக்குக் குழப்பமே மிஞ்சுகிறது. இப்படியொரு சொற்பட்டியல் இருப்பதாகவும் தெரியவில்லை.
‘சொற்குவை’ என்றொரு திட்டத்தை தமிழக அரசு செயற்படுத்திவருகிறது. ஒவ்வொரு முறையும் புதிய தமிழ்ச் சொற்கள் அறிமுகம் செய்யப்பட்டன என்று பத்திரிகைச் செய்திகளில் பார்க்கிறேன். உண்மையில், இவர்கள் தான் மொழித் தரப்படுத்துதலையும் செய்யவேண்டும். அகராதியியல் அறிஞர்களைக் கொண்டது இக்குழு.
நாங்கள் ஒரு சின்ன திட்டத்தை செய்யத் தொடங்கினோம். இது ‘ரிவர்ஸ் இஞ்சினியரிங்’ மாதிரியான வேலை. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள பிடிஎப் நூல் கோப்புகளைத் தரவிறக்கி, கூகுள் டாக்ஸ் வழியாக, ஒவ்வொரு வகுப்புக்கான சொற்தொகுப்புகள் செய்யமுடியுமா என்று முயற்சி செய்துவருகிறோம்.
ஒரு சொல் எத்தனை முறை பயன்படுகிறது? புதிய சொற்கள் உண்டா? அவை எந்தெந்த வகுப்புகளில் அறிமுகம் ஆகின்றன என்றெல்லாம் பார்ப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறோம். இது வெறும் புள்ளியியல் உத்திதான். குவான்டிடேடிவ் தான். குவாலிடேட்டிவ் அல்ல. ஆனால், இதற்கே நாக்கு தள்ளுகிறது.
இப்படி ஒரு தொகுப்பை செய்ய முடிந்துவிட்டால், கையடக்க அகராதி கொண்டுவந்துவிடலாம். அதேபோல், இவற்றைவிட பெரிய சொற்களைப் பயன்படுத்தாமல், இந்த எல்லைக்குள்ளேயே எழுதலாம். மாணவர்களது மொழிவளம் என்ற பிரச்னையைத் தீர்ப்பதற்கு இது ஒரு வாசலைத் திறந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
---------------------------------------------
நிதி ஆதாரத்தை உயர்த்த முடியுமா?
***************************************
கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலையில், நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலோர் ரூபாயை அச்சடித்து இறக்கவேண்டும், அப்போதுதான் அனைவர் பசியையும் போக்கமுடியும் என்று தெரிவிக்கின்றனர்.
ரூபாய் அச்சடிப்பது என்று எதைச் சொல்கிறார்கள்?
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மூன்றாம் நாள், நிதி அமைச்சர் 1.7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதிச் சலுகைகளை வழங்கினார். இதில், விவசாயிகளுக்கும் இதர தரப்பினருக்கும் நேரடியாக பணத்தை வங்கிக் கணக்கில் வழங்கும் உத்தியும் பின்பற்றப்பட்டது. தற்போது, ஊரடங்கு மேலும் மே 3 வரை நீடிக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், நமது பொதுமக்களின் அன்றாட வாழ்வில் எந்தச் சிக்கலும் ஏற்படாமல் இருக்க, கூடுதல் நிதி உதவி தேவை. அதேபோல், ஊரடங்கால் இயங்காமல் போன, நுண், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மீண்டும் உத்வேகம் பெற வேண்டும். அவற்றுக்கான மூலதனம் வேண்டும்.
தற்போது நாம் செய்துள்ள உதவித் தொகைகள் அனைத்தையும் கூட்டிப் பார்த்தால், நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி என்னும் ஜி.டி.பி.யில் 0.7 சதவீதம் மட்டுமே செலவிட்டிருக்கிறோம். இது மிக மிகக் குறைவு. ரகுராம் ராஜன், அபிஜித் பானர்ஜி, ஒய்.வி.ரெட்டி, அரவிந்த் சுப்பிரமணியன், சுபாஷ் சந்திர கார்க் போன்ற மூத்த பொருளாதார நிபுணர்கள், நிதி உதவியை பன்மடங்கு உயர்த்த வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.
இந்திய மக்களை மீட்டெடுப்பதற்கு, ஐந்து லட்சம் கோடி ரூபாய் முதல் பத்து லட்சம் கோடி ரூபாய் வரை, தேவைப்படும் என்பது இவர்களது மதிப்பீடு. அதாவது நமது மொத்த ஜி.டி.பி.யில் 2.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தற்போது பல்வேறு மாநில அரசுகள் வழங்கி வரும் அரசி, பருப்பு, மளிகை சாமான்கள், இலவச எரிவாயு ஆகியவற்றோடு அடுத்த மூன்று மாதங்களுக்கு, மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட வேண்டும் என்பது நிபுணர்களின் பரிந்துரை.
ஒவ்வொரு நாடும் இதுபோன்ற மீட்புப் பணியில் இன்னும் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக்கொண்டிருக்கின்றன. உதாரணமாக அமெரிக்கா தனது ஜி.டி.பி.யில் 10 சதவீதம் தொகையை, அதாவது 2 டிரில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. ஜப்பானோ அதன் ஜி.டி.பி.யில் 20 சதவீதம், அதாவது 101 டிரில்லியன் ‘யென்’னை பயன்படுத்தவுள்ளது. 1.1 டிரில்லியன் யூரோக்களை, அதாவது தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்தைச் செலவழிக்கிறது ஜெர்மனி.
சரி, ஐந்து லட்சம் கோடியோ, பத்து லட்சம் கோடியோ, அதை எங்கிருந்து கொண்டுவருவது?
இந்தக் கேள்விக்கு பல்வேறு விடைகள் சொல்லப்படுகின்றன.
முதலில், தற்போதைக்கு முக்கியமல்லாத செலவினங்களைக் குறைத்தால் பல கோடி ரூபாய் மிச்சமாகும். இரண்டு, வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் இருந்து முறையாகவே கடன்கள் வாங்கலாம். ஒருசில வரிகளை உயர்த்தி, ஒருசில மானியங்களைக் குறைத்தால், இன்னும் கொஞ்சம் பணம் வரும். இன்னொரு வழிமுறை, கூடுதல் பணத்தை அச்சிடுவது.
இந்தக் கடைசி ஆலோசனை, அனைத்து பொருளாதார நிபுணர்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. இன்றைக்கு இருக்கும் தேவைக்கேற்ப நம்மால் 1.5 லட்சம் கோடி முதல் 3 லட்சம் கோடி ரூபாய் வரை புதிய பணத்தை அச்சடிக்க முடியும். ஆனால், இதன் பின்விளைவுகள் என்ன?
இதனால், அனைவரிடம் பணம் போய்ச் சேரும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், பொருட்களின் எண்ணிக்கையோ, அதன் உற்பத்தியோ பெருகப் போவதில்லை. கரோனாவால் ஏற்பட்டுள்ள தேக்கத்தால், புதிய உற்பத்தி தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அப்படியென்றால், இருப்பில் உள்ள பொருட்களை வாங்குவதற்கே, நாம் கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருக்கும். இதனால், விலைவாசி உயரும், பணவீக்கம் அதிகமாகும். இலக்கை மீறி நிதிப் பற்றாக்குறை அளவு அதிகமாகிவிடும்.
இதற்கு மாற்றுக்கருத்தும் சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் 2008 பொருளாதாரத் தேக்கத்தின் போது, அந்த நாட்டு அரசு, மக்களுக்கு இரண்டு முறை 900 டாலர்களை வழங்கியது. அதனால், ஒருசில ஆண்டுகளுக்கு பணவீக்கம் அதிகமாகத்தான் இருந்தது. ஆனால், படிப்படியாக உபரியாக உள்ள பணம், உறிஞ்சப்பட்டதன் மூலம், வளர்ச்சி நிலையை எட்ட முடிந்தது. அதேபோல், இங்கேயும் செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்படுகிறது.
பணத்தை அச்சடிப்பது வழங்குவது என்றால் என்ன பொருள்?
கடந்த ஒரு மாதமாக, மத்திய, மாநில அரசாங்கத்தின் கடன் பத்திரங்களை, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவு விற்றுவிட்டுப் போய்விட்டார்கள். இவற்றின் மதிப்பு குறைந்துபோய் கிடக்கின்றன. இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி, அரசாங்க கடன் பத்திரங்களை சந்தையில் வாங்கிச் சேர்ப்பதன் மூலம், இந்திய அரசுக்குக் கூடுதல் பணம் போய்ச் சேரும். இதைக் கொண்டு, அரசாங்கம், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் நிதியை வங்கிகள் மூலம் வெளியிடலாம்.
அடிப்படையில் பணம் என்பது மேன்மேலும் உருவாக்கக் கூடியதுதான். இப்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, புதிய பணத்தை நாமும் உருவாக்கலாம்.
இதே சமயம், எவ்வளவு தூரம் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறோம் என்பதும் முக்கியமானது. செலவுகளைக் குறைத்தும் நம்மால் புதிய பணத்தை உருவாக்க முடியும். இரண்டு வகையான நிதி நடவடிக்கைகளின் மூலமும் நாம் நம் இலக்கை அடையலாம். மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம்.
--------------------------
சிரிப்பு (சிறுகதை)
********
விசில் அடித்துவிட்டால் போதும். குக்கரை அணைத்துவிட்டு, அப்படியே வைத்துவிட்டுப் போய்விடலாம். தலையை சீவிக்கொண்டு கிளம்புவதற்குச் சரியாக இருக்கும். வீட்டைப் பெருக்கவேண்டும். மதியம் வந்துகூடச் செய்துகொள்ளலாம். ஒன்றும் அவசரமில்லை. பாத்திரங்களைக் கழுவி எடுத்துவைக்கும்போது, ஓரமாக இருந்த சின்ன கண்ணாடியைப் பார்த்துக்கொண்டாள். வெள்ளை முடி, எனக்கு வண்ணம் தீட்டேன் என்று அழைத்தது. நேரம் இல்லை.
நடுவில் கொஞ்சம் நாட்கள் யாரோ சொன்னார்கள் என்று மருதாணி பூசிக்கொண்டபோது, செம்பட்டையானத் தொடங்கிவிட்டது. இதற்கு பாதி வெள்ளை, பாதி கருப்பாக இருந்தாலே தேவலை என்று தோன்றிவிட்டது.
அப்பா சமையலறைக்குள் வந்தார். மெலிதான நடை. அடிமேல் அடிவைத்து. இடுப்பில் வேட்டியைப் பாதியாக மடித்துக்கொண்டிருந்தார். பூஜையறை கதவுகளைத் திறந்துகொண்டு, நெற்றியில் விபூதியையும் குங்குமத்தையும் வைத்துக்கொண்டார். கைகளைக் கூப்பி, நான்கைந்து நிமிடங்கள் நின்றுகொண்டிருந்தார். பல ஆண்டுப் பழக்கம். வீட்டை விற்றால் போதும் என்று கேட்பாரோ? மகளுக்குத் திருமணம் ஆகவேண்டும் என்று? இறுதிக் காலமேனும் நிம்மதியாக இருக்கவேண்டும் என்று? யாரிடமும் சண்டை போடாமல் இருக்கவேண்டுமென்று?
“இட்லி வெக்கட்டுங்களாப்பா?”
“வேணாம்மா. இன்னொரு காபி மட்டும் குடு. வயிறு ஃபுல்லா இருக்கு. ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீசுக்குப் போயிட்டு வந்துடலாம்.”
வற்புறுத்திக் குடிக்க வைக்கலாம். கேட்டுக்கொள்வார். ஆனால், வயிறு நிறைந்திருக்கும் போலிருக்கிறது. நேற்று வங்கியில் போட்ட காசோலை, பணமாகிவிட்டது. அதில் இருந்து ஒருவித நிம்மதியை அவரிடம் பார்க்க முடிந்தது.
விரைந்து காபியைப் போட்டு, டம்பளரை அவரது அறைக்கு எடுத்துப் போனபோது, அவர் பனியன் போட்டுக்கொண்டிருந்தார். உடல் மெலிந்து கையை உயர்த்தவே சிரமப்படுவது தெரிந்தது. இப்படி இருந்தவர் அல்ல இவர். அம்மா இருந்தபோது, வாசலுக்கும் சமையலறைக்கும் ஓடிக்கொண்டே இருப்பார். அம்மாவும் இவரை விரட்டிக்கொண்டே இருப்பாள்.
அதுவும் பெண் பார்க்கும் படலங்கள் எத்தனை நடந்திருக்கின்றன இந்த ஹாலில்? ஒவ்வொரு பையனும் வீட்டுக்குள் இரண்டு படிக்கட்டுகள் இறங்கித்தான் வந்து உட்கார வேண்டும். உட்காரும்போதே மேலே உத்திரத்தைப் பார்ப்பார்கள். மின்விசிறி கை இடிக்குமோ என்று கொஞ்சம் அஞ்சுவார்கள்.
“அதெல்லாம் இடிக்காது சார். அந்தக் காலத்துலேயே 14 அடி சீலிங் வெச்சு கட்டினேன்.”
“ஏன் இடிச்சுக் கட்டவேண்டியதுதானே சார்?” சம்பந்தம் பேசவரும் ஒவ்வொரு குடும்பமும் இந்தக் கேள்வியை எழுப்பும்.
“பொண்ணை வீட்டுல வெச்சுக்கிட்டு, வீட்டைத் தொடமுடியுமா? இது பெரிசா செலவ இழுத்துவிட்டுமே. கல்யாணம் முடியட்டும். அடுத்த மாசமே வீட்டை இடிச்சுக் கட்டிட வேண்டியதுதான்.”
அவரது உற்சாகம் கண்டு வருவோர் ஆச்சரியப்படுவார்கள். நல்ல நீள அகலமான வீடு. ஹாலோடு சேர்ந்து ஐந்து அறைகள். பின்பக்கம் கிணறு. எல்லாமே சாலையை விட இரண்டரை அடி கீழே. பின்பக்கம், டாய்லட் செல்பவர்கள், குனிந்துகொண்டு தான் செல்லவேண்டும். டாய்லட் தளம் மட்டும் உயர்த்தப்பட்டிருக்கும்.
“இந்த பெரிய மழை வந்துது இல்ல. அப்போ வீட்டுக்குள்ள தண்ணீ வந்துடுச்சு. அதனால், டாய்லட்டை மட்டும் இடிச்சு, திருப்பியும் உசத்திக் கட்டினோம்.”
வீட்டைச் சுற்றிப் பார்க்கும் எவருக்கும் ஒரு விஷயத்தைத் தெளிவாக உணர்ந்துகொள்வார்கள். இரண்டு படியேறி, வாசலுக்கு வரும்போது, சாலை ஜேஜே என்று இருக்கும். இந்தப் பக்கம் போனால், தாம்பரம். எதிர்ப்புறம், கிண்டி. நடுவே இருக்கும் புழுதிவாக்கம், உள்ளகரம். நகரங்களுக்கு நடுவே இப்படியொரு பள்ளம்.
இங்கே இருக்கும் அத்தனை வீடுகளும் சாலையோடு மல்லுக்கு நிற்பவைதான்.
“ஆதார், பான், ரேஷன் அட்டை எல்லாம் எடுத்துக்கிட்டீங்களாப்பா?”
தோள்பையைக் காண்பித்தார். நேற்று இரவே எடுத்துவைத்துவிட்டார். புழக்கடை கதவைத் தாழிட்டுவிட்டு, முன்வாசலுக்குள் வருவதற்குள் அப்பா, வெளியே நின்றிருந்தார். கதவைப் பூட்டும்போது மேலே பிள்ளையார்பட்டி விநாயகர் கொஞ்சம் அசைந்துகொடுத்தார். அதற்குமேலே, 1978 என்ற எண்ணும், ‘சிவனருள்’ என்ற பெயரும் கடைசியாக அடித்த சுண்ணாம்பில் மறைந்துபோயிருந்தன.
காலம் தான் எப்படி மாறிப்போய்விட்டது. இந்த வீட்டுக்கு வந்தபோது, சாலைக்கும் வீட்டுக்கும் நான்கடி உயரம். நான்கு படிக்கட்டுகள் ஏறித்தான் வீட்டுக்குள் வரமுடியும். பக்கத்தில் வீடுகளே இல்லை. அடுத்து வந்த ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் நிலைமை தலைகீழ். தனிவீடுகள் படிப்படியாக அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆயின. அந்தக் குடியிருப்புகளும் மறைந்து புதுக்கட்டடங்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. காலத்தால் நிலைத்துப்போனது ‘சிவனருள்’ போன்ற வீடுகள் தான்.
“அண்ணாமலைகிட்டே பேசினேன் பரிமளா. பதினோரு மணிக்குத் தான் டயம் கொடுத்திருக்காங்க. லாயர் வந்துடுவாரு. பேசிட்டேன்.”
முன்பதிவு செய்திருந்த ஊபர் ஆட்டோ, அருகே வருவதைக் காண்பித்தது அலைபேசி. இன்னும் மூன்று நிமிடங்கள் இருந்தன. ஏனோ இந்த வீட்டை மீண்டும் ஒரு முறை சுற்றிப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. இப்போதுதான் இது தாழ்ந்துபோய் தெரிகிறது. சின்ன வயது முதல் இது உயரமான கட்டடம் தான். நினைவு தெரிந்த நாள் முதல் இதை நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்தே பழக்கம். மனத்துக்குள் ஞாபகமுள்ள உயரம், நிஜத்தில் இல்லை.
ஒவ்வொரு ஐந்தாண்டும் சாலைகள் உயர்ந்தன. பதவியேற்ற ஒவ்வொரு கவுன்சிலரும், எம்.எல்.ஏ.வும், எம்.பி.யும் சாலையைத் தான் உயர்த்தினார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த பகுதியை, பெருநகர சென்னையின் எல்லைக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். ஆம், இப்போது உள்ளகரமும் சென்னை தான். நாங்கள் எல்லோரும் பெருநகர சென்னைவாசிகள். நகரத்தின் பள்ளவாசிகள்.
சாலையில் வெயில்நதி ஓடிக்கொண்டிருந்தது. இருசக்கர வாகனங்கள் மட்டும் ஒன்றிரண்டு. அலுவலகங்கள் எல்லோரும் கிளம்பிவிட்டார்கள். இனி மாலையில் தான் சாலை வேகம் பிடிக்கும். எதிர்வீட்டு மாமி பார்த்துக்கொண்டிருந்தார். இன்னும் இரண்டு மூன்று வாசல்களில் முகம் தெரிந்தன. அப்பா இருக்கும்போது எவரும் வந்து பேசமாட்டார்கள். பயம். சண்முகம் என்ற பெயர் பலருக்குத் தெரியாது. ‘சண்டைக்கார செட்டியார்’ ரொம்ப பிரபலம்.
ஒவ்வொருமுறை சாலை உயர்த்தப்படும்போதும், மோதக்கூடிய முதல் மனிதர் அப்பாதான். எதையாவது காரணம் காட்டி வழக்கு போடுவார். அரசாங்கத்துக்கு பெட்டிஷன் போடுவார். அதிகாரிகளோடு போய் மல்லுக்கு நிற்பார். ஆனால், அரசாங்கத்துக்கு முன்னால் தனிமனிதர் எம்மாத்திரம்? அவர் கண்முன்னாலேயே வீடு பள்ளமாக, சாலை உயரமானது. சம்பாதித்தது சண்டைக்காரர் என்ற அடைமொழி மட்டும்.
ஆட்டோ ஏறி உட்கார்ந்துகொண்டபோது, அப்பாவும், வீட்டை ஒருமுறை திரும்பிப் பார்ப்பது தெரிந்தது. வாடகைக்கு வேறு வீடு பார்த்தாயிற்று. பத்திரம் பதிவு செய்தவுடன், அடுத்த வாரத்துக்குள் வீட்டை காலி செய்துகொடுத்துவிட வேண்டும். அது ஒரு பெரிய வேலை போல் தான் தோன்றியது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், எடுத்துக்கொண்டு போக அப்படியொன்றும் பாத்திரம், பண்டங்கள் இருப்பது போல் தோன்றவில்லை. அதிகபட்சம், ஒரு டெம்போ தேவைப்படுமோ என்னவோ?
எல்லாமே தேவையற்றுத் தான் தோன்றின.
பத்திரப் பதிவு அலுவலக வாசலில் ஒரே கூட்டம். பல சமயங்களில் இந்தச் சாலை வழியே போனபோதெல்லாம், இதேபோன்ற கூட்டம் இருந்ததுண்டு. எவ்வளவு சீக்கிரம் இங்கே வந்து பதிவுசெய்துகொடுத்துவிட்டு ஓடிவிட மாட்டோமா என்று தோன்றும். ஆனால், வாங்கத்தான் ஆளில்லை. வீடு பார்க்க வந்த ஒவ்வொருவர் பார்வையிலும், இந்த வீட்டின் மகத்துவம் தெரிந்ததில்லை.
இங்கேதான் இரண்டு தலைமுறை வாழ்ந்திருக்கிறது. பல்கிப் பெருகியிருக்கிறது. இதன் கிணற்றில் இன்னும் நீர் சுரக்கிறது. வாயில் வைத்தால், அப்படியொரு இனிப்பு இனிக்கும். ஆனால், தெரிந்தது, அதன் பள்ளம் தான். “இடிச்சுட்டுத் தான் கட்டணும். அப்படியே குடிவர முடியாது போலிருக்கே.”
கல்யாணம் தள்ளிப் போனது போலவே, வீடு விற்பனையும் தள்ளிப் போனது.
அண்ணாமலை நின்றிருந்தார். முகம் நிறைய புன்னகை. தூரத்துச் சொந்தம். ரியல் எஸ்டேட் தொழில். அவரது முயற்சியில் தான் இதோ, ரெஜிஸ்ட்ரேஷன் வரை வந்திருக்கிறது. பக்கத்தில் பார்த்தசாரதி லாயர் நின்றிருந்தார். அப்பாவைப் பார்த்துப் புன்னகைத்தார்.
“டாக்குமெண்ட்டைப் படிச்சுப் பார்த்திட்டீங்க இல்லையா சார்?”
அப்பா தலையை ஆட்டினார். பரிமளாவும் தலையாட்டினாள்.
“செக் கிளியர் ஆயிடுச்சா சார்?” அண்ணாமலை கேட்டார்.
“ஆயிடுச்சுங்க சார்.”
“உள்ளே எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டார் நம்ம லாயர். ஸ்டாம்ப் டூட்டி கட்டி எல்லாம் முடிஞ்சுடுச்சு. இது சும்மா ஃபார்மலிட்டிக்குத்தான். சப் ரெஜிஸ்ட்ரார் முன்னாடி கையெழுத்து போடணும். அப்புறம், பதிவு செஞ்சுடுவாங்க.”
அதாவது கையைவிட்டுப் போய்விடும்.
வீட்டை வாங்கக்கூடிய பார்ட்டி எதிர்ப்புறம் காரில் வந்து இறங்கியது. அம்மா, பிள்ளை, அப்பா என்று மூவர். பிள்ளை காரை, மர நிழலில் நிறுத்த, அம்மாவும் அம்மாவும் வந்தார்கள். அண்ணாமலைக்குத் தெரிந்தவர்கள். தனிவீடு விரும்பிகள். இடித்துக் கட்டிக்கொள்ளும் வசதிமிக்கவர்கள். அந்தம்மாள் முகம் நிறைய சிரிப்போடு அருகே வந்து கையைப் பிடித்துக்கொண்டார்கள். நலம் விசாரித்தார்கள். வெயிலில் தோல் மினுமினுத்தது. அவளது கணவரும் அப்பா கையைப் பிடித்து தலையில் ஒத்திக்கொண்டிருந்தார். பணம் ஒரு வணக்கத்தைக் கொடுக்கிறது. அது போலியாக இருந்தாலும், அழகாகவே இருக்கிறது.
லாயர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்குள் அழைத்தார். நுழைய முடியாத அளவுக்குக் கூட்டம். என்னென்னவோ தேவைகள். சுவரில் இருந்த நோட்டீஸ் போர்டுகளில் பல்வேறு ஆண், பெண் புகைப்படங்கள். பதிவுத் திருமணத்துக்கு எழுதிவைத்திருந்தார்கள். ‘இவர்களது திருமணத்தில் யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால், 30 நாட்களுக்குள் தெரிவிக்கவும்.’ என்ற பொடிசான வாசகங்கள். எல்லாமே சின்னச் சின்ன பெண்கள். ஜாதிவிட்டு ஜாதி மாறி, மதம் விட்டு மதம் மாறித் திருமணத்துக்கான பதிவுகள். அவ்வளவு அழகழகான முகங்கள். எங்கெங்கோ பார்த்து, எப்படியோ காதலித்து, திருமணம் வரை வந்துவிட்டவர்கள். உலகம் எல்லோருக்கும் ஜோடி வைத்திருக்கிறது. அது ஒருசிலருக்கு சீக்கிரம் தெரிந்துவிடுகிறது.
அலுவலகமே நிரம்பி வழிந்தது. கண்ணாடி அறைக்குள் கணினி முன் அமர்ந்து என்னவோ ரசீது போட்டுக்கொண்டு இரண்டு மூன்று பேர். கொஞ்சம் தள்ளி, பத்திரங்களில் முத்திரை இட்டு, கைநாட்டு அல்லது கையெழுத்து வாங்கியபடி ஒருவர். சற்று தள்ளி, சினிமாவில் பார்க்கும் நீதியரசம் மேடை மாதிரியான அமைப்பில் ஒருவர் உட்கார்ந்துகொண்டிருந்தார். அவரது தலைமேல் பிள்ளையார்பட்டி விநாயகர் வீற்றிருந்தார். அதன் கீழே நீலப் பின்னணியில் வெள்ளை எழுத்துகளில், ‘சார் பதிவாளர்’ என்று குறிப்பிட்டிருந்தது.
“உங்க பான் கார்டு கொடுங்க.”
அந்த நீதிமன்ற மனிதர் கேட்டார்.
“நீங்க தானே சாட்சி கையெழுத்து போடப் போறீங்க.”
இது அப்பாவின் சொந்த சொத்து. அவர் கையெழுத்து போட்டால் போதாதா? யோசனையோடு அண்ணாமலை முகத்தைப் பார்த்தபோது, “பான் கார்டு கொண்டுவந்திருக்கீங்க இல்ல.” என்றார்.
ஆமாம் என்பது போல் தலையசைத்துவிட்டு, கைப்பையில் இருந்து பான் கார்டை எடுத்துக் கொடுத்தாள். பதிவாளர் முழு டாக்குமெண்ட்டையும் படித்துவிட்டு, என்னவோ குறிப்பெழுதி பக்கத்தில் கொடுத்தார்.
லாயர் முகத்தில் ஒளி. வேலை முடிந்தது. “கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டா போதும்.”
“நான் எதுக்குக் கையெழுத்து போடணும் சார்.” அண்ணாமலையைப் பார்த்துக் கேட்டாள். லாயரும் அவரையே பார்த்தார்.
“நாள பின்ன நீங்க ஏதும் பிரச்னை பண்ணிடக்கூடாதுன்னு வாங்கறவரு பிரியப்படறார். அதனால் உங்க ஒப்புதலோட தான் வீடு விற்கப்படுதுங்கறதுக்காக கையெழுத்துப் போடச் சொல்றார்.”
ஒவ்வொருவரும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவே ப்ரியப்படுகிறார்கள். சிக்கல் வந்துவிடக் கூடாது. என்ன கேட்டுவிடப் போகிறேன்? என்ன பிரச்னை வரும்? கையைவிட்டுப் போனால் போதும் என்று நினைத்த வீடு.
அப்பா, பத்திரப்பதிவு செய்யும் நபர் காட்டிய இடங்களில் கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்தார். பரிமளாவும் போட்டுக் கொடுத்தாள். கைரேகை வைக்கச் சொன்னார்கள். கையில் மீதமிருந்த மையைத் துடைக்க சின்ன துணி. நீலம் பாரித்துப் போயிருந்தது.
வாங்குபவரும், அவரது மனைவியும் மகனும் கூட உற்சாகமாக கையெழுத்துப் போட்டார்கள். இனிமேல் 2500 ச.அடி. நிலம் இவருடையது. சென்னையின் மையத்தில் அடுத்தடுத்த தலைமுறை இவர் பெயர் சொல்லி வாழ்த்தும். அன்னிக்குக் காலத்திலேயே வாங்கிப் போட்டார் என்று இவரது பேரன்கள் பாராட்டுவார்கள். ஒரு புதிய கொடி, இந்தப் பூமியில் தழைக்கும்.
வாசலுக்கு வந்தவர்கள், பக்கத்து கூல் டிரிங்க்ஸ் கடையில் நின்றார்கள். அண்ணாமலை குளிர்பானம் சொன்னார்.
“ஒண்ணும் அவசரமில்ல சார். இவங்க உடனே வீட்டை இடிச்சு கட்டப் போறதில்ல. மாசக் கடைசிக்குள்ள காலி பண்ணிக் கொடுத்துடங்க.”
மாசம் முடிய இன்னும் இருபது நாட்கள் இருந்தன.
“உங்களுக்கும் ஹாப்பி தானே மேடம்?”
என்ன சொல்வது என்று தெரியவில்லை. வெறுமனே புன்னகைத்தாள். “நானே வேற வீடு முடிச்சுத் தரேன் மேடம். ஏன் கவலைப்படறீங்க. நிறைய புது ப்ளாட்ஸ் வருது.”
“சேச்சே, அதெல்லாம் கவலையில்ல.”
“பின்ன எதுக்கு என்னவோ மாதிரி சிரிக்கறீங்க?”
“என்னை ரொம்ப வருஷமா, பள்ளவீட்டு பரிமளான்னு கூப்பிடுவாங்க. இனிமேல் அவங்கல்லாம் என்ன செய்வாங்கன்னு யோசிச்சேன். அதுதான் சிரிப்பா வந்துச்சு.”
அண்ணாமலைக்கு புரியவில்லை. அவர் எதற்கென்று தெரியாமல் சிரித்தார். பரிமளா இப்போது சிரிப்பதை நிறுத்திக்கொண்டாள்.
-------------------------
பள்ளவீட்டுப் பரிமளாவின் கதை அழகு. என்னுடய பிறந்த பூமியில் என் தாத்தா கட்டி, அப்பா அனுபவித்துப் பேணிக்காத்த வீட்டை நான் விற்ற அனுபவம் அப்படியே பதிவாகியிருக்கிறது. கிணற்று நீர் மட்டும் இனிக்காது. கரிக்கும்... வாழ்த்துக்கள்.