Dear friends,
Greetings from ‘Nesamudan’. Hold on! Don’t hit the delete button yet – this is not a spam mail. Welcome to the my Email Magazine: ‘Nesamudan’.
You received this email because I assume you love reading my Email Magazine. Happy reading!
Venkatesh R
Email: venkatesh.nesamudan@gmail.com
25 April 2020
Archives : https://rvenkatesh.substack.com/
How to unsubscribe: If you do not wish to receive any more updates from ‘Nesamudan’, please email me and I shall be prompt in removing your email ID from my mailing list.
P.S: Also you can share your friend's Email ids, who might like Tamil writings.
________________________
எழுதக் காத்திருக்கும் வரலாறுகள்!
***************************************
எனக்கு ஆவணப்படுத்துவதில் நிறைய விருப்பம் உண்டு. ஒரு குறிப்பிட்ட சம்பவம், அல்லது முயற்சி நடைபெற்ற போது, எண்ணற்ற இடர்கள் இருந்திருக்கும். புதுமைகள் இருந்திருக்கும். புதிய பாதை புலப்பட்டிருக்கும். அந்தத் திட்டங்களில் பங்கேற்றவர்களுக்குத்தான் அதன் அத்தனை விவரமும் தெரியும். வெளியே நாம் பார்க்கும் எண்ணற்ற விஷயங்கள் இதுபோன்ற கடுமையான முயற்சிகளின் பலனாகவே உதித்துள்ளன. அவற்றைச் சம்பந்தப்பட்டவர்கள் ஆவணப்படுத்தி வைக்கவேண்டும். அப்போதுதான் அதன் பின்னே சென்றுள்ள மனித உழைப்பின், மனவலிகளின், ஈடுபாட்டின் முழுப் பரிமாணமும் புரியும்.
உதாரணமாக, சென்னையெங்கும் பறக்கும் எம்.ஆர்.டி.எஸ். என் கனவுத் திட்டம். கல்கி அலுவலக வாயிலில் பல நாட்கள் நின்று, அந்தப் பகுதியில் இரயில்வே தடம் பதிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறேன். மனித உழைப்பின், திட்டமிடலின், நவீன தொழில்நுட்பத்தின், உச்சமான முயற்சிகளில் ஒன்றாகவே இதனைக் கருதுவேன். முதலில், மிக மிக உயரமான தூண்கள் எழுப்பப்பட்டன. பின்னர் தூண்களுக்கு இடையே இருப்புப் பாதை அமைத்தார்கள்.
அதன் பின்னர், மின்சார இணைப்பு. ஒரு கட்டத்தில் சோதனை ஓட்டம். பல மாதங்கள் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சி.எம்.பி.டி.யில் இருந்து ஆலந்தூர் வரை இணைக்கும் இருப்புப் பாதை இது. கல்கியில் என் அறைக்கு வெளியே தான் இருப்புப் பாதை ஓடியது. ஒவ்வொரு முறை சோதனை ஓட்டம் நடைபெறும்போதும்,
அந்த இரயிலை அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருப்பேன். தரைக்கு மேல், இரண்டரை மாடி உயரம். அதாவது கிட்டத்தட்ட 30 அடி உயரத்தில், சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், அந்தரத்தில் இரயில் ஓடிக்கொண்டிருந்தது. எப்பேர்ப்பட்ட மனித சாதனை இது.
இதேபோல், ஆலந்தூர் இரயில் நிலையத்தைப் பார்த்தீர்கள் என்றால் இன்னொரு ஆச்சரியம் தென்படும். இரண்டு அடுக்குகளில் இரண்டு செட் இரயில்கள் ஓடும்.
பூமிக்கு அடியில் உள்ள இரயில் நிலையங்கள் இன்னொரு அதிசயம். லண்டனிலும் ஐரோப்பாவின் ஒருசில நாடுகளிலும் தான் டியூப் என்ற இரயிலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதெல்லாம் சென்னைக்கே வந்துவிட்டது.
சென்னை எம்.ஆர்.டி.எஸ். கட்டுமானத்தைச் செய்தவர்களிடம் நிச்சயம், ஆயிரம் கதைகள் இருக்கவேண்டும். தடைகளைச் சந்தித்திருக்கவேண்டும். இருப்புப் பாதை வளைந்து வளைந்து போகும். வளைவுகளை உருவாக்குவதில் ஒரு தொழில்நுட்பம் இருந்திருக்க வேண்டும். பிரம்மாண்டம் என்றால் இதுதான். இதைப் பற்றி ஏதேனும் ஒரு ஆவணம் இருக்கிறதா? திட்டத்தைத் தொடங்கியது முதல், இறுதிக்கட்டம் வரை சம்பந்தப்பட்ட நபர்கள் ஏதேனும் எழுதிவைத்திருக்கிறார்களா?
ஒன்றுமே இல்லை.
ஊடகங்கள் அனைத்தும் எழுதிய ஒரு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல். சுரேஷ் கல்மாடி கைதுசெய்யப்பட்டது தெரிந்திருக்கலாம். 2010 அக்டோபர் 3 முதல் 14 வரை புது தில்லியில் நடைபெற்றது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த போட்டிகளில் ஆயிரம் குளறுபடிகள். ஊழல்கள்.
என் நினைவு சரியாக இருக்குமேயானால், போட்டிகள் தொடங்குவதற்கு சரியாக பதினைந்து நாட்களுக்கு முன்பு, சுரேஷ் கல்மாடி, நிர்வாகப் பணிகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். எந்தப் பணிகளும் நிறைவுபெறவே இல்லை. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நேரடியாக இதைத் தன் கண்காணிப்பில் எடுத்துக்கொண்டார். விறுவிறுவென்று அத்தனை பணிகளையும் முடுக்கிவிட்டார். இரவும் பகலும் வேலை. சரியாக அக்டோபர் 3ஆம் தேதி தொடக்கவிழா நடைபெற்றபோது அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
நடைபெறவே நடைபெறாது என்று யூகிக்கப்பட்ட போட்டிகள் இது. ஆனால், வெற்றிகரமாக நடைபெற்றது. அப்போது பத்திரிகைகளில் வெளியான இதுதொடர்பான செய்திகள் அனைத்தையும் நான் பத்திரப்படுத்தி வைத்தேன். தேசிய பெருமிதத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒரு நாவல் இதற்குள் இருக்கிறது.
யாருமே இதனை ஆவணப்படுத்தி வைக்கவில்லை.
மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதல் இன்னொரு பெரிய சம்பவம்.
பெரும்பாலான செய்திகள், வாய்மொழி வரலாறாகவே உள்ளன. அதிலும் ஏராளமான குறைபாடுகள். நம் காலத்தில் நடப்பதைக் கூட நாம் ஆவணப்படுத்தவில்லை என்றால் என்ன அர்த்தம்? ஒருசில வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றிலும், எழுதுபவர்களின் மனச்சாய்வு பல சமயங்களில் எரிச்சல்மூட்டுகின்றன. ஆனால், இதைத் தவிர்க்க முடியாது.
இலக்கியத்திலும் இது முக்கியம். பி.எஸ். ராமையா எழுதிய ‘மணிக்கொடி காலம்,’ வல்லிக்கண்ணன் எழுதிய ‘தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்,’ ‘சரஸ்வதி காலம்’ ஆகியவை மிக முக்கியமான ஆவண நூல்கள். இதேபோல் இன்னும் இரண்டு நூல்கள் எழுதப்பட வேண்டும்.
தமிழ் நவீன கவிதையின் முக்கிய இதழாகத் திகழ்ந்தது ‘ழ.’ தமிழில் இன்று போற்றப்படும் பல கவிஞர்கள் இதில் பங்களித்திருக்கிறார்கள். பல அறிமுகமாகியிருக்கிறார்கள். ஆத்மாநாம் ஆசிரியராக இருந்து நடத்திய இவ்விதழ், பத்தாண்டுகள் வரை வெளிவந்தது. இன்றும் பல கவிதை இதழ்களுக்கான முன்னோடியாக கொண்டாடப்படுகிறது. அழகியசிங்கர் ‘ழ கவிதைகள்’ தொகுதி வெளியிட்டுள்ளார். விமலாதித்த மாமல்லனின் உதவியோடு, அனைத்து ழ இதழ்களும் கிண்டிலில் வரவுள்ளதாகவும் தெரிந்துகொண்டேன்.
இந்த இதழுக்குப் பின்னே இருந்து இயங்கியவர்களில் முக்கியமானவர், ‘ழ’ ராஜகோபாலன். இவர் பெயர், துணை ஆசிரியர் என்றே இவ்விதழில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆத்மாநாமுக்கு உதவியவர்களில் ஞானக்கூத்தன், ஆனந்த், காளி-தாஸ் ஆகியோர் அடங்குவார்கள். ராஜகோபாலனும் ஆனந்தும் சேர்ந்து ‘ழ’ காலக்கட்டத்தைப் பதிவுசெய்து வைக்க வேண்டும்.
இதேபோல், மாலன் நடத்திய ‘திசைகள்’ இதழ். இன்று பத்திரிகை, சினிமா, ஓவியம், புகைப்படம் என்று பல துறைகளில் பிரபலமாக இருக்கும் பல முன்னணி கலைஞர்கள் உருவான இடம் ‘திசைகள்.’ இவ்விதழுக்கு ஒரு பண்பாட்டு வரலாறு இருக்கிறது. அதனை மாலன் விரிவாக எழுதி வழங்கவேண்டும்.
நான் எழுத வேண்டியதும் ஒன்று இருக்கிறது. தமிழில், தற்காலத்தில் வெளியான ஒரு முழுமையான தகவல் களஞ்சியம் என்றால், அது விகடன் பிரசுரம் வெளியிட்ட ‘பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம்’ தான். 3,600 பக்கங்கள், 25,000 கட்டுரைகளுக்கு மேல். இதற்கு ஆசிரியராக இருந்தவர் டாக்டர் சுதா சேஷய்யன்.
நான் இத்திட்டத்துக்குத் துணைத் தலைவராக இருந்தேன். இந்த அனுபவம் என் மனத்தில் பசுமையாக இருக்கிறது. இதையும் எழுதிவைக்க வேண்டும்.
----------------------------------------
தகவலும் தகவலுக்குப் பின்னேயுள்ள அரசியலும்
*********************************************************
கரோனா பற்றி எழுதக்கூடாது என்று நினைத்துக்கொள்வேன். ஏதேனும் ஒன்று நடந்து என்னை எழுதவைத்துவிடுகிறது. கடந்த சில நாட்கள், மீண்டும் மீண்டும் நான் கேட்கும் வரிகள் இவை. ‘தமிழக அரசு சொல்லும் நம்பர்கள் பற்றி எங்களுக்குத் தெரியாதா?’ ‘இந்திய அரசு எப்படி தகவல் கொடுக்கும் என்று தெரியாதா?’ என்பவைதான் அவை.
அதாவது தமிழக அரசும், இந்திய அரசும், கரோனா நோய்த் தொற்று தொடர்பாக வெளியிடும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் நம்பகமானவை அல்ல என்பது பல இடதுசாரி, பத்திரிகையாள நண்பர்களின் எண்ணம். உடனே அதைக் கேலிசெய்யும் விதமாக, அவமானப்படுத்தும் விதமாக இந்த வரிகளை எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.
‘அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும், அரசாங்கம் விட்டுவிடுமா?’ என்றொருவர் தெரிவித்தார். முகத்தில் நக்கல் சிரிப்பு தவழ. இந்த லாஜிக்கில்லாத கூற்றை பலர் ரசிக்கிறார்கள் என்பதுதான் இதில் வேதனை.
எப்படி லாஜிக் இல்லை என்கிறேன்?
இன்றைக்கு கரோனா நோய்த் தொற்று அதிகமாகவோ குறைவாகவோ, எப்படி இருந்தாலும் அப்படி தெரிவித்துவிடுவதுதான் மாநில அரசுகளுக்கு சேஃப். இதைத் தெரியாதவர்கள் அல்லர் மாநில முதல்வர்கள். இதனால், தேர்தல் வெற்றியோ தோல்வியோ கிடைக்கப் போவதில்லை. நான்கு நாட்கள் கட்டுப்பட்டு, ஐந்தாவது மீண்டும் எண்ணிக்கை உயர்ந்தாலும், அதை அப்படியே வெளியிடுவதுதான் இன்னும் உத்தமம்.
கட்டுப்படுத்திவிட்டோம் என்று பொய்யாகச் சொல்லி பெருமைப்படுவதனால் என்ன லாபம்? நோய்த் தொற்று பெருகினால், மீண்டும் அவஸ்தைப்படப் போவது மாநில அரசுதானே?
இன்னொன்று, நோய்த்தொற்று எண்ணிக்கை மறைக்கப்பட்டதாகவே வைத்துக்கொண்டாலும், மரண எண்ணிக்கையை மாற்றிக் காட்ட முடியுமா? 22 பேருக்கு மேல் மரணம் அடைந்திருந்தால், இன்றைய சமூக ஊடக காலத்தில், அவை வெளியே தெரியாமல் போயிருக்குமா?
நோய்த் தொற்றையும் எப்படி மறைக்க முடியும்? இந்த 31 நாள்களில், நோய்த் தொற்று இருந்திருக்குமானால், பாதிக்கப்பட்ட அனைவரும், அரசு மருத்துவமனைகளில் வந்து சாரிசாரியாகக் குவிந்திருக்க வேண்டுமே? எந்தச் செய்தி ஊடகத்திலும் இப்படி ஓர் அலை வீசுவதாகச் செய்தி இல்லை.
இதைப் போன்ற விவரங்களைச் சொல்லும்போது யோக்கியவான்கள் ஒரு குயுக்தியைப் பயன்படுத்துவார்கள். இரண்டு வரியை லாஜிக்காகச் சொல்லிவிட்டு, இரண்டு பிழைகளை நடுவில் சேர்த்துவிடுவார்கள். எல்லாமே லாஜிக் போல் தென்படும். அல்லது ஒரு புள்ளியில் நின்று கேள்வி எழுப்பினால், அதைவிட்டுவிட்டு வேறு மாநில, வேறு பிரச்னை என்று தாவிப் போய்விடுவார்கள்.
அரிசியையும் உமியையும் நாம் தான் பிரித்துப் பார்க்க புரிந்துகொள்ள வேண்டும். தகவலையும் தகவலுக்குப் பின்னே செயற்படும் அரசியலையும் புரிந்துகொள்வது நம் கடமையே.
------------------------
பந்தம் (சிறுகதை)
*******
காலையிலிருந்தே அந்தக் காகம் கரைந்துகொண்டிருந்தது. பால்கனியின் கட்டைச் சுவரில் தவ்வித் தவ்வி அழைப்புஒலி. துணி உலர்த்தும் கயிறில் கொஞ்சம் தள்ளாட்டம். பின்னர் சின்னதாக அமைதி. பால்கனியை ஒட்டி உள்ளே ஹாலை நோக்கிப் பார்த்து, பின்னர் கீழ்க்கம்பியில் மூக்கைத் தீட்டிக்கொள்ளல். தீப்தி இரண்டு மூன்று முறை ஹாலை கடக்கும்போதெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
“காக்காவுக்குப் பசி வந்துடுச்சு. சாதம் வெக்கணும்” என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்குச் சென்றாள். இன்றைக்கு இனிமேல் தான் அம்மா சமைக்க ஆரம்பிப்பாள். இரண்டு நாள் மருத்துவமனை அலுப்புக்குப் பின்னர் எல்லாமே புதிதாக இருந்தது. நேற்று இரவு மீதமிருந்த சாதத்தைத் திறந்துபார்த்தாள். நன்றாக இருந்தது. ஒரு கைப்பிடி எடுத்து தட்டில் வைத்து, ஹாலுக்கு வந்தாள். காகம் இப்போது பால்கனி தரையில் தவ்விக்கொண்டிருந்தது. தீப்தி வருவதைப் பார்த்து, மீண்டும் கட்டைச் சுவருக்கு இடம்பெயர்ந்தது. தீப்தி, சாதத்தைக் கட்டைச் சுவரில் கொட்டி வைத்துவிட்டு நகர்ந்தாள்.
காகம், சாதத்தின் அருகே போய் பார்த்துவிட்டு, மீண்டும் கரையத் தொடங்கியது. சாதத்தில் அதன் மூக்கு படவில்லை.
தீப்திக்கு ஆச்சரியமாக இருந்தது. “இதுக்குக் கூட புது சாதம் தான் வேணும்னு கேக்குது பாரும்மா,” என்றாள் அம்மாவிடம்.
“யார் தாத்தாவோட ஃபேவரிட் காக்காவா?” ரோகிணி.
சமையலறையில் இருந்து ரோகிணியும் எட்டிப் பார்த்தாள். காகம் இப்போது பால்கனி தரையில் நகர்ந்துகொண்டிருந்தது. சின்னச் சின்ன தவ்வுகள். இலக்கற்ற பார்வை.
வழக்கமான காகம் தான். கழுத்தில் பூத்த சாம்பல் நடுவே லேசான சிவப்பு தென்படும். வித்தியாசமான அழகு. அம்மா போன்றே.
ஒரு நாள் அப்பாதான் சொன்னார், “அம்மாவுக்கு கழுத்துல கொஞ்சம் ரெட்டா இருக்கும். இந்தக் காக்காவுக்கும் அதேமாதிரி இருக்கேன் பாரேன் ரோகிணி.” அம்மா மறைந்து மூன்றாவது மாதம் அது. உண்மையில் அது சிவப்புதானா அல்லது பார்வைக்கு அப்படி தெரிகிறதா என்று தெரியவில்லை. ஆனால், தூரத்தில் இருந்து பார்த்தபோது, கழத்து கேசத்தில் சின்னதான சிவப்புகோலம்.
ஒவ்வொரு நாளும் சரியாக பதினோரு மணிக்கு வந்துவிடும். அப்பா சாமி கும்பிட்டுவிட்டு, சாதத் தட்டுடன் பால்கனிக்கு வருவார். அவர் வருகிறார் என்று பிற காகங்கள் பறக்கத் தொடங்கும். இந்தச் சிவப்பு கழுத்துக் காகம் மட்டும் கொஞ்சம் கூட அசைந்துகொடுக்காது. அப்பா, பால்கனிச் சுவரில் சாதத்தை வைக்கும் வரை பார்த்துக்கொண்டே இருக்கும். அவர் கொஞ்சம் நகர்ந்தவுடன், சாதத்தைக் கொத்தத் தொடங்கும்.
ஒரு நாள் காலையிலேயே மிக வித்தியாசமான குரலில் காகம் அழைத்தது. தீப்தி தான் தாத்தாவிடம் போய், ஆச்சரியமாக இதைச் சொன்னாள். “வித்தியாசமான குரல்ல கூப்பிடுது தாத்தா...”
ஹாலுக்கு வந்து பார்த்தவர், காகம் அங்கும் இங்கும் தாவுவதையும் குதிப்பதையும் கவனித்தார்.
“ஏன் குரல் வித்தியாசமா இருக்கு தாத்தா?”
“தெரியல. தண்ணி தாகமா இருக்கோ என்னவோ. வெயில் காலம் இல்லையா?” என்றவர், தன்னுடைய அறைக்குப் போய் ஓர் அழகான நீள்சதுரை பிளாஸ்டிக் பெட்டியை எடுத்துவந்தார். அதன் ஒரு பக்கத்தில் சின்னத் துளைகள் போட்டு, பால்கனி துணி உலர்த்தும் கம்பியுடன் இழுத்துக் கட்டினார். அதில் தண்ணீர் விட்டு வைத்தார். மிகச் சரியாக சிவப்புக் கழுத்துக் காகம் தண்ணீர் குடிக்கத் தொடங்கியது.
அதன் பிறகு, ஒவ்வொரு நாளும், அந்தப் பிளாஸ்டிக் பெட்டியைச் சுத்தப்படுத்தி, புதிய நீரைக் கொட்டி வைக்கத் தொடங்கினார் தாத்தா.
ஒரு நாள் திடீரென்று காலையிலேயே வந்து கரையத் தொடங்கியது. “நேத்து நைட்டு எங்கேயும் டின்னர் கிடைக்கல போலிருக்கு ரோகிணி. டிபன் போடு” என்றார் தாத்தா. வீட்டில் இருந்த பிரெட்டைத் துண்டுதுண்டுகளாக ஆக்கி, பால்கனி சுவரில் பரப்பினாள் ரோகிணி.
அவள் இப்படி நகரவும், காகம் பிரெட் அருகே வந்தது. ஒவ்வொரு துண்டாக எடுத்து, அதைப் பக்கத்தில் இருந்து பிளாஸ்டிக் தண்ணீர் டப்பாவில் போட்டு முக்கியது. பின்னர், கொத்தி கொத்தித் தின்னத் தொடங்கியது. தீப்தி ஆச்சரியப்பட்டாள்.
“செம ஸ்மார்ட்மா. பிரெட் நெஞ்சை அடைக்கும்னு, தண்ணியில் முக்கி சாப்பிடுது பாரேன்.” ரோகிணியும் அந்தக் காகத்தையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆச்சரியமான அன்னியோனியம் படிப்படியாக வளர்ந்தது. காலை நேரம் போக, ஒரு கட்டத்துக்குப் பிறகு, மதியத்திலும் பால்கனிக்கு வரத் தொடங்கியது சிவப்புக் கழுத்து காகம்.
ஒரு நாள் தீப்தி அதை போட்டோவும் வீடியோவும் எடுத்து குடும்ப வாட்ஸ் அப் குழுவில் போட்டு, “தாத்தாவோடு பேசும் பாட்டி” என்று தலைப்பிட்டிருந்தாள். அப்படித்தான் இருந்தது இருவர் தோற்றமும்.
தாத்தா முகத்தைப் பார்ப்பதும் பின்னர் சாவகாசமாக நடப்பதும், பின்னர் தாத்தா அருகே வருவதுமாக இருந்தது. தாத்தா போட்ட ஒருசில வேர்க்கடலை துணுக்குகளை மூக்கால் உடைப்பதும், தள்ளுவதும் என்று அசத்தியது. ஒரு கட்டத்தில், பால்கனியை விட்டு, ஹாலுக்குள்ளும் சர்வ சகஜமாக நடமாடத் தொடங்கியது.
இப்போதெல்லாம், தாத்தாவே காகத்தை எதிர்பார்த்து, பால்கனிக்குப் போய்விடுவார். சற்றுநேரம் தூரத்து வானையும் சாலைப் போக்குவரத்துகளையும் பார்த்துக்கொண்டே இருப்பார். காகம் வராது. ஹாலில் நாற்காலியில் வந்து உட்கார்ந்துகொள்வார். சற்றுநேரத்தில் அந்தக் காகம் வரும். மேலேயும் கீழேயும் குதிக்கும் தவ்வும் கொடிக்கயிறில் ஊஞ்சலாடும். கட்டைச் சுவர் உணவை கொஞ்சம் கொறித்துக்கொள்ளும்.
“சாதத்தை சாப்பிட்டுச்சா தீப்தி?”
அம்மா குரல் கேட்டு, அடுத்த அறையில் இருந்த தீப்தி மீண்டும் ஹாலுக்கு வந்தாள். சிவப்புக் கழுத்துக் காகம் துளி சாதத்தையும் தொடவே இல்லை. ஆனால், இடத்தை விட்டு நகராமல், கொடியிலும் கம்பியிலும் கட்டைச் சுவரிலும் தவ்விக் கொண்டே இருந்தது. பார்வை மட்டும் ஹாலை நோக்கியே இருந்ததை தீப்தியால் உணர முடிந்தது. பசிக்கவில்லை போலும்.
“அம்மா, சாதத்தைத் தொடவே இல்லம்மா...”
சமையலறையை விட்டு வெளியே வந்து நின்றுகொண்டாள். அந்தக் காகம், ரோகிணியைப் பார்த்துக்கொண்டிருந்தது. மேலே கீழே சின்னச் சின்ன பறத்தல்கள்.
வழக்கமாக இதர காகங்களையெல்லாம் அழைக்கும். இன்று அந்த மாதிரி அழைப்பும் இல்லை. தானும் வைத்த சோற்றைத் தொடவில்லை.
இரண்டு நாளாக சாதம் வைக்கவில்லை. பால்கனியையே பூட்டி வைத்திருந்தாள் ரோகிணி. தாத்தாவுக்கு ஹெர்னியா ஆபரேஷன். மருத்துவமனையும் வீடுமாக இரண்டு நாட்கள் துன்பமாக கழிந்தன. அன்று காலை தான் டிஸ்சார்ஜ் ஆகி, அனைவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். தாத்தா தன்னுடைய அறையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்க, தீப்தி தான், பால்கனிக் கதவைத் திறந்து வைத்தாள். இதர அறைகளின் ஜன்னல்களையும் திறந்து காற்று வர ஏற்பாடு செய்திருந்தாள்.
சற்று நேரத்துக்கெல்லாம் இந்தக் காகம் வந்தது. இரண்டொரு முறை கரைந்தது. கொஞ்சம் இடைவெளிவிட்டு, ஹாலை நோக்கித் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தது. கால் மாற்றி அமர்வது போல், மீண்டும் இடம்மாற்றி அமர்ந்தது. பால்கனி தரையில் இறங்கி, தத்தித் தத்தி ஹாலை ஒட்டி முன்னே நகர்ந்து நகர்ந்து வந்தது. பின்னர் ஹீனமான குரலில், மற்றொரு அழைப்பு.
“யாரு? காக்கா வந்துடுச்சா?”
ரோகிணி திரும்பிப் பார்த்தாள். அப்பா, தன் அறை வாசலில் நின்றுகொண்டிருந்தார். சற்றே முன்னே நகர்ந்து வந்தார். இரண்டு நாள் தாடி. காகம் முன்னே நகர்ந்து வந்தது. ரோகிணியும் தீபதியும் நகர்ந்துகொண்டார்கள்.
தாத்தாவையே அந்தக் காகம் பார்த்துக்கொண்டிருந்தது. அதன் சின்ன விழிகளில் அத்தனை ஆதுரம். நம்பிக்கை. இரண்டொரு முறை தவ்வியது. தாத்தா அதன் அருகே இன்னும் நகர்ந்தார். காகம் இப்போது பால்கனிக்கு நகர்ந்தது. கம்பியின் மேல் பறந்து உட்கார்ந்தது. கட்டைச் சுவரின் மீது மற்றொரு தவ்வு. தண்ணீர் டப்பாவின் மீது ஒரு தவ்வு. வைத்த சாதத்தை மூக்கால் ஒரு இடறல். குழந்தையின் குதூலகம். எல்லாமே தாத்தாவைப் பார்த்தபடியே.
“அதுக்கு பயங்கர ஹாப்பியா இருக்கு போல இருக்குல்லம்மா..” தீப்தி, ரோகிணி காதில் கிசுகிசுத்தாள். இந்த உறவை எப்படி புரியும்படி சொல்வது என்று ரோகிணிக்கு தெரியவில்லை. அவள், தாத்தாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவர் முகத்தில் நிம்மதி ரேகை தெரிந்தது.
---------------------------