Dear friends,
Greetings from ‘Nesamudan’. Hold on! Don’t hit the delete button yet – this is not a spam mail. Welcome to the my Email Magazine: ‘Nesamudan’. You received this email because I assume you love reading my Email Magazine. Happy reading!
Venkatesh R
Email: venkatesh.nesamudan@gmail.com
27 April 2020
Archives : https://rvenkatesh.substack.com/
How to unsubscribe: If you do not wish to receive any more updates from ‘Nesamudan’, please email me and I shall be prompt in removing your email ID from my mailing list.
P.S: Also you can share your friend's Email ids, who might like Tamil writings.
________________________
தமிழுக்கு வந்துள்ள வணிக வலையிதழ்
****************************************
தமிழ் நாளிதழ்களில், தொழில், வர்த்தகம், பொருளாதாரம் ஆகிய பகுதிகள் பல ஆண்டுகளாக இடம்பெற்று வந்துள்ளன. பொருளாதார செய்திகளை வழங்குவதற்கு என்றே பல நிபுணர்கள் தமிழில் உருவாகியுள்ளார்கள். அவர்களுடைய எழுத்துகள், தனிநூல்களாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, முதலீட்டு ஆலோசனைகளில் இவர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
ஆனால், நாளிதழ்களில் பொருளாதாரத்துக்கான இடம், அதிகபட்சம் ஒரு பக்கம். அதுவும் ஒரு முக்கிய துறை, அதில் நடப்பவற்றையும் மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என்பதை நாளிதழ்கள் ஒரு கடமையாகச் செய்துவருகின்றன.
ஆனால், ‘பிங்க் பேப்பர்ஸ்’ என்று அழைக்கப்படும் ஆங்கிலப் பொருளாதார நாளிதழ்கள், இந்திய மொழிகளை இத்தனை ஆண்டுகளாக அவ்வளவாக கண்டுகொண்டதில்லை. வலைத்தளங்களில் பிங்க் பேப்பர்கள் கோலோச்சும் காலம் வந்த பிறகும், அவை இந்திய மொழிகளில் வணிக, பொருளாதாரச் செய்திகளைக் கொடுக்க முன்வரவில்லை.
இத்தனைக்கும் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள, பல மொழி பேசுவோர் தான் முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, பொருளாதார ஆர்வலர்களும் கூட.
அவர்களுக்கு உள்ளூர் மொழியில் செய்திகளையும் தகவல்களையும் அலசல்களையும் கொடுத்தால், பொருளாதாரப் புரிதல் மேம்படும் என்பதோடு, அதன்மூலம், புதிதான வாசகர்களும் கிடைப்பார்கள் என்ற எண்ணம் ஏன் இவர்களுக்குத் தோன்றவில்லை என்று தெரியவில்லை. ஆங்கிலமே போதும் என்ற எண்ணம் போலும்.
சமீப ஆண்டுகளாக, அதில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியிலும் குஜராத்தியிலும் வணிக, பொருளாதாரச் செய்திகளை வலைத்தளங்களில் வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்குத் தேவைப்படும் ஒரு ‘கிரிட்டிகல் மாஸ்’ என்று சொல்லப்படும் போதுமான வாசகர் எண்ணிக்கை உருவாகியிருக்கிறது போலும்.
மணிகன்ட்ரோல் மற்றும் எகனாமிக் டைம்ஸ் வலைத்தளம் இந்தியிலும் குஜராத்தியிலும் படிக்கக் கிடைக்கின்றன. பிசினஸ் ஸ்டாண்டர்டும், தி பைனான்சியல் எக்ஸ்பிரசும் இந்தியில் படிக்க கிடைக்கிறது. மின்ட் நாளிதழ் இன்னும் எந்த இந்திய மொழியிலும் வழங்கப்படவில்லை.
முதன்முறையாக, வணிக, வர்த்தக, பொருளாதாரச் செய்திகளைத் தமிழில் வழங்குகிறது தி ஹிந்து பிசினஸ்லைன் (https://www.thehindubusinessline.com/tamil/) நாளிதழ்.
படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒருசிலர் மட்டுமே இதன் பின்னே இருந்து பணியாற்றுகிறார்கள் என்று தெரிகிறது. எடிட்டர் என்று ஒருவர் இல்லை போலும்.
மொழிச் சிக்கல்கள் தென்பட்டாலும் படிக்க சீராக இருக்கிறது. தமிழ் வாசகர்களுக்குப் பொருளாதாரத்தில் ஆர்வம் உண்டு, அவர்களும் இவற்றை விரும்பிப் படிப்பார்கள் என்று பிசினஸ்லைன் புரிந்துகொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதில் வலையேற்றப்படும் செய்திகளின் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை.
வாசகர்களின் ஆதரவைப் பொறுத்து படிப்படியாக இந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கிறேன்.
இதற்கு முன்னே, ‘தின வணிகம்’ என்றொரு நாளிதழ் மதுரையில் இருந்து வெளிவந்துகொண்டிருந்தது. ஒருமுறை அவர்களுடைய அலுவலகத்துக்குப் போய் பார்த்திருக்கிறேன். சின்ன டீம் தான். ஆனால், ஈடுபாட்டோடு, தமிழில் வர்த்தகம், பொருளாதாரம், பங்குச் சந்தைச் செய்திகளை அவ்வளவு நறுக்கென்று தருவார்கள். இப்போது அந்த இதழ் வெளிவருகிறதா என்று தெரியவில்லை. இணையத்திலும் படிக்கக் கிடைக்கவில்லை.
தமிழில் வணிக, பொருளாதாரச் செய்திகளைப் படிக்கும் மக்களின் எண்ணிக்கை பெருகுமானால், நிச்சயம், பிங்க் பேப்பர்கள் தமிழ்ப் பதிப்பையும் கொண்டுவரத் தயக்கம் காட்டாது. நம்ம ஊரில் பொருளாதாரம் என்றாலே அது பங்குச் சந்தை தான். அதிலும் எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம் என்ற சுலபமான ஆலோசனைகள் மட்டுமே வேண்டும் என்ற நிலை தான் இருக்கிறது.
உண்மையில் பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெடுக்கு வெளியே நமது நிதி நிர்வாகம், வரி, காப்பீடு, சேமிப்பு தொடர்பான ஆயிரம் கேள்விகள் உள்ளன. சந்தேகங்கள் உள்ளன. நுண், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் சம்பந்தப்பட்ட எண்ணற்ற தடுமாற்றங்கள் இருக்கின்றன. பொருளாதாரக் கல்வி எனப்படும் ஃபைனான்சியல் லிட்டரசி அனைத்துத் தரப்பினருக்கும் வயதினருக்கும் நிச்சயம் தேவை. அது ஏதோ ஆண்டுக்கு ஒருமுறை வரி செலுத்துவதில் முடிந்து விடுவதில்லை. தொடர்ச்சியான கல்வி அது.
அதற்கு தாய்மொழியில் வணிக நாளிதழ்கள் வந்தால் தான் பெரும் முன்னேற்றம் ஏற்படும். தி ஹிந்துபிசினஸ்லைன் நாளிதழின் தமிழ் முயற்சி மேன்மேலும் பரவவேண்டும். என் விருப்பமான நாளிதழ் ‘மின்ட்.’ ஆய்வுபூர்வமான கட்டுரைகளும் அலசல்களும் தான் இதன் ஹைலைட். இதன் வலைத்தளத்தில் தமிழ் பகுதி தொடங்கப்பட்டு, அதில் இந்தக் கட்டுரைகள் தமிழில் படிக்கக் கிடைக்குமானால், தமிழ் வாசகர்கள் நிச்சயம் இதைக் கொண்டாடுவார்கள்.
-------------------------------
தள்ளிப் போகும் ஆசை
**************************
இணையத்தில் எனக்கு இருக்கும் பொழுதுபோக்குகளில் ஒன்று, நாய்களின் வீடியோக்களைப் பார்ப்பது. செல்லப் பிராணிகளிலேயே போதை தருவது, நாய்கள் தான். கல்மிஷமற்ற தூய அன்பை வெளிப்படுத்தும் ஜீவன்கள் அவை. யூடியூப் முழுக்க நாய்களின் வீடியோக்கள் தான். குழந்தைகளோடு பழகுவது, பெரியவர்களோடு கொஞ்சுவது, ஏக்கத்தை வெளிப்படுத்துவது, சின்ன சின்ன வேலைகளைக் கூட புரிந்துகொண்டு செய்வது என்று ஆயிரக்கணக்கான வீடியோக்கள் உள்ளன.
பார்க்க பார்க்க அலுக்கவே அலுக்காது. நம் சக மனிதர் எப்படியெல்லாம் நம் மீது அன்பும், கரிசனமும், ஈடுபாடும் காட்டவேண்டும் என்று ப்ரியப்படுகிறோமோ, அவை அனைத்தையும் செய்து ஆச்சரியப்படுத்துபவை நாய்கள். வாயற்ற ஜீவன்களான நாய்கள், உணர்வுபூர்வமானவை. வெறுமனே படுத்துக்கொண்டிருந்தால் கூட அவ்வளவு அழகு. அவற்றின் பார்வை சொல்லும் செய்திகளோ அலாதி.
அதுவும் விதவிதமான வெளிநாட்டு நாய்களைப் பார்க்கும்போது, உள்ளம் கொள்ளை போவது நிச்சயம்.
ஒரு முறை, இத்தகைய என் ஆர்வத்தைப் பற்றி ஒரு நண்பரிடம் தெரிவித்தபோது, “முதல்ல இப்படித்தான் ஆரம்பிக்கும். கடைசியில் நீங்களும் ஒரு நாயை வளர்க்க ஆரம்பிச்சுடுவீங்க.” என்றார்.
ஆசைதான். ஆனால், யதார்த்தம் ஒவ்வொருமுறையும் கட்டிப் போட்டு விடுகிறது. முன்னர் நான் இருந்த அடுக்ககத்தில், வீட்டுக்குள் நாய் வளர்க்க தடை இருந்தது.
இப்போது இருக்கும் அடுக்ககத்தில் அதற்குப் பிரச்னை இல்லை. ஆனால், வேறு பிரச்னை. காலையில் வீட்டை விட்டு எல்லோரும் கிளம்பிவிட்டால், மாலை வரை யார் நாயைப் பார்த்துக்கொள்வது?
ஒரு மனிதரை வீட்டுக்குள் தனியே விட்டுப் போவதைப் போன்ற கொடுமையல்லவா இது? அதுவும் வாய் திறந்து தன்னுடைய தேவைகளைச் சொல்லத் தெரியாத ஜீவனை வீட்டில் விட்டுவிட்டு எப்படி வெளியே போகமுடியும்? மிகப்பெரிய வன்முறையல்லவா இது? அதைவிட, அந்த நாய்க்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிட்டால்? என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை. நம்முடைய ஆசைக்காக இன்னொரு ஜீவனை துன்பப்படுத்துவது என்ன நியாயம்?
இதனாலேயே, என் ஆசைக்கும், என் குடும்பத்தார் ஆசைக்கும் தடை போட்டுவைத்துள்ளேன்.
ஆனால், ஒரு விஷயம் மட்டும் உண்மை. நான் நினைத்தது உடனே நடப்பதில்லை. ஆனால், நாள் கடந்தேனும் அது நடைபெற்றிருக்கிறது. இப்போதைக்கு நாய் வளர்க்க எனக்குப் பிராப்தமில்லை. ஆனால், அதற்கு என்று ஒரு நாள் கண்டிப்பாக வரும்.
உண்மையில், நாய் வளர்ப்பவர்கள், ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
-----------------------
அமிழ்து பெண் (சிறுகதை)
*****************
”இது எப்படிப்பா சாத்தியம்? ஒரு ஜோசியர் பொருத்தம் சூப்பரா இருக்குன்னு சொல்றதை இன்னொருத்தர் பொருத்தமே இல்லைன்னு சொல்ல முடியுமா?” ராஜீயின் குரல் கம்மத் தொடங்கியது அப்போதுதான். நீலகண்டனால் பேசமுடியவில்லை. நியாயமான கேள்வி. பதில் சொல்ல முடியாத கேள்வி.
சமையலறை வாசலில் நீலகண்டன் நின்றிருந்தான். அலைபேசியில் அந்தத் தகவல் வந்திருந்தது. ‘எங்கள் ஜோதிடர் ஜாதகம் பொருந்தவில்லை என்று சொல்லிவிட்டார். உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் அமைய என் வாழ்த்துகள்’ என்ற செய்தியை அனுப்பியிருந்தார், பையனின் அப்பா.
படித்துக் காண்பித்த இரண்டாவது நொடி, ராஜீ இந்தக் கேள்வியைக் கேட்டாள்.
“அப்படின்னா, வேறேதோ எதிர்பார்த்துட்டு, அது பொருந்தலங்கறதுக்காக, ஜாதகத்து மேல பழி போடறாங்களா?”
ராஜீ, சப்பாத்தி மாவை பிசைந்துகொண்டிருந்தாள்.
“இருக்கலாம்.” என்றான் நீலகண்டன்.
இது ஆறாவது ஜாதகமோ, ஏழாவதோ. ஒவ்வொருமுறையும் இந்தத் தப்பு நேர்ந்துவிடுகிறது. யாராவது சொல்லி, ஜாதகம் வரும். அதை உடனடியாக ஜோசியரிடம் காண்பிக்க, ப்ரீத்தியின் ஜாதகத்தோடு பொருத்தம் பார்க்கப்படும். மிக நன்றாக பொருந்துகிறது என்பார் குடும்ப ஜோதிடர். ‘நிச்சயம் நடந்துடும். ரொம்ப நல்லா பொருந்தியிருக்கு’ என்று நம்பிக்கை வார்த்தை சொல்வார்.
அதன் பிறகு, பிள்ளை வீட்டாரிடம் தெரிவித்து, அவர்களையும் ஜாதகப் பொருத்தம் பார்க்கச் சொல்வான் நீலகண்டன். அதற்குள், ப்ரீத்தியின் போட்டோக்களும் பையோடேட்டாவும் பிள்ளை வீட்டுக்குப் போய்விடும். இரண்டு நாள், மூன்று நாள், ஒருசில சமயங்களில் ஒரு வாரம் கழித்துக் கூட ஏதேனும் ஒரு காரணம் வரும், நிராகரிப்புக்கு. ‘உயரம் குறைவு.’ ‘நாங்கள் வேலைக்குப் போகாத பெண்ணாகப் பார்க்கிறோம். உங்கள் மகள் வேலையை விட்டுவிடுவாளா?' ‘நாங்க சென்ட்ரல் கவர்மென்ட் ஜாப்ல இருக்கிற பொண்ணா பார்க்கிறோம்’ என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்படும்.
“அப்படின்னா, ப்ரீத்திக்கு கல்யாண வேளை வரலையா? எப்படி எடுத்துக்கணும் இதை?”
சட்டென்று நினைவு கலைந்தான் நீலகண்டன். ராஜீயைச் சமாதானப்படுத்தும் விதமாக ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று மட்டும் மனத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. சமீப மாதங்களில், ப்ரீத்தியின் கல்யாணம் மனச் சோர்வை அளித்துக்கொண்டே வந்தது.
“பையனுக்கு அதிர்ஷ்டம் இல்லன்னு எடுத்துக்கோ ராஜீ. இதைவிட பெட்டரான பையன் கிடைப்பான், பாரு...”
நீலகண்டனை ஆழமாக பார்த்தாள். நிலைமையை லகுவாக்க முயற்சி செய்கிறான் என்பது அவளுக்குப் புரியாமல் இல்லை. ஆனால், அவளுக்கு தொடர்ந்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலே இல்லை. சப்பாத்தி இடுவதில் மனமே ஈடுபடவில்லை. சப்பாத்தி மாவை மூடிவைத்துவிட்டு வெளியே வந்தாள்.
பால்கனி கதவு திறந்திருந்தது. அங்கிருந்த சேரில் போய் உட்கார்ந்துகொண்டாள். தூரத்தில் சாலைகளில் ஓடும் வாகனங்கள் ஒளியை வாரி இறைத்துக்கொண்டிருந்தன.
ப்ரீத்தி, தன் அறையில் ஏதோ வீடியோ பார்த்துக் கொண்டிருந்தாள். நீலகண்டனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ராஜீயை பால்கனியில் விட்டுவிட்டு உள்ளே போவது அப்போது சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை.
“ராஜீ, ரொம்ப மனச வருத்திக்காதே. இதெல்லாம் சகஜம்தான்ம்மா.”
“எதுப்பா சகஜம்? காரணமே இல்லாம வேண்டாம்னு சொல்றதா?”
அவளது கேள்வியின் வேகம் அசர அடித்தது. அடிபட்ட பந்தின் வேகம்.
“இவன் சொந்தக்காரப் பையன். ஜாதகமும் பொருந்திருக்குன்னு நான் ரொம்ப எதிர்பார்த்துட்டேன். முடிஞ்சுடும்னே நினைச்சேன். தப்பா போச்சு.”
அவள் முகத்தையே பார்க்க முடியவில்லை. நிராகரிப்பின் வலி. முள் குத்தினாற்போல், துடித்துக்கொண்டே இருந்தாள். ஒருவித அவமானம். படிப்பு, முன்னேற்றம், வேலை, வசதி என்று வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை திறன்களையும் பார்த்துப் பார்த்து செய்துகொடுத்துள்ள ஒரு பெண்ணை, ஒரு குடும்பத்தால் நிராகரிக்க முடியுமா?
முடியும் என்றால், அது என்ன தகுதி? அது என்ன எதிர்பார்ப்பு?
நீலகண்டனால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. சொல்லவும் முடியவில்லை.
மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் மனநிலையோ, எதிர்பார்ப்புகளோ புரியாமல் போவது கூடப் பிரச்னை இல்லை. ராஜீ, ஒவ்வொரு நிராகரிப்பையும் தனக்கு நேரும் அவமானமாக, ப்ரீத்திக்கு ஏற்படும் புறக்கணிப்பாக கருதுவதை எப்படி நிறுத்துவது என்று அவருக்குத் தெரியவில்லை.
‘ஒன்றைவிட இன்னொன்று பெட்டராக இருப்பது போல் தோன்றுவது’ மனித சுபாவம். இது சந்தை தானே? பெண் தேடும் சந்தை. காலம் காலமாக இதில் வலி மறைக்கப்பட்டிருக்கிறது. ராஜீக்கு இதையெல்லாம் சொன்னால், இன்னும் வருத்தமும் கோபமுமே கொப்பளிக்கும்.
“ப்ரீத்திக்கு என்ன குறை? ஒரு வார்த்தை சொல்ல முடியுமா?”
நீலகண்டன் நின்றுகொண்டே இருந்தான். சாலை விளக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக நகர்ந்துகொண்டிருந்தன. ராஜீ கையைக் கட்டிக்கொண்டு, தூரத்து வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
பதிலே சொல்லமுடியாத கேள்வி. தப்பு வேறெங்கோ இருக்கிறது. அது அணுகுமுறையிலா? அல்லது பிள்ளை வீட்டாரிடம் எடுத்துச் சொல்வதிலா? யாரெல்லாம் இதில் முடிவெடுப்பார்கள்? பிள்ளையே ப்ரீத்தியை வேண்டாம் என்று சொல்லியிருப்பானோ? அல்லது அவனது குடும்பத்தார்? என்ன சொல்லியிருப்பார்கள்?
மீண்டும், பையனது அப்பா அனுப்பிய வாட்ஸ் அப் செய்தியை படித்துப் பார்த்தார். வேண்டாம் என்பதை நாசூக்காகச் சொல்லியிருக்கிறார். வேண்டாம் என்ற முடிவுக்குப் பின்னே என்னென்ன விஷயங்கள் போயிருக்கும்?
”நம்ம ஜோசியர் கூடத்தானேப்பா பார்த்தார். எல்லாம் நல்லா பொருந்தியிருக்குன்னுதானே சொன்னார்.”
ராஜீ மருகுகிறாள். உண்மையை, யதார்த்தத்தை ஏற்கமுடியவில்லை. எத்தனை கேள்விகள்போட்டு பிரித்து புரிந்துகொள்ள முயன்றாலும், ‘வேண்டாம்’ என்ற பதிலுக்கு பின்னே இருட்டுத் திரை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அதை விலக்கிப் பார்க்கவே முடியாது.
“ஏன் சார்? ஜாதகத்துல்ல என்ன பிரச்னைன்னு பையனோட அப்பாவைக் கூப்பிட்டுக் கேக்கறீங்களா?”
“சரி, நாளைக்குக் காலையில கேக்கறேன்.”
“கேட்டு என்ன பிரயோஜனம்? வேண்டாம்னு சொல்றதுக்கு காரணம் தெரிஞ்சாலும் ஒண்ணுதான், தெரியாட்டியும் ஒண்ணும்தான்.”
நீலகண்டன் அமைதியானான். ரொம்ப நேரமாக நிற்கமுடியவில்லை. பால்கனி கதவு அருகே தரையில் அமர்ந்துகொண்டான். ராஜீ வெளியே சாலைகளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
விடுவிக்க முடியாத முடிச்சை அவிழ்க்கப் பார்க்கிறாள் ராஜீ.
“நான் என்ன சொல்றேன்? ஜாதகம் வந்தவுடனே பார்த்துட்டு பொருந்தலைன்னு சொல்ல வேண்டியதுதானே. ஏன் ஒரு வாரம் அதை வெச்சுக்கிட்டு இருப்பானேன்? ஏன் இன்னிக்கு தெரிஞ்சது அன்னிக்குத் தெரியாதா?”
இதற்கு என்ன பதில் சொல்வது?
“அப்ப வேறேதோ யோசிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்காங்கன்னு தானே அர்த்தம்?”
உண்மையில் நீலகண்டனுக்கு ராஜீயை வீட்டுக்குள் அழைத்து வந்துவிட்டால் போதும் என்று தோன்றியது. யோசிக்க யோசிக்க சுயபச்சாதாபம் தான் அதிகமாகும்.
“சரி, உள்ள வாம்மா. நம்ம வேலையைப் பார்ப்போம். எதுக்கு இதைப் பத்தியே யோசிச்சுக்கிட்டு இருக்கே.”
ராஜீ திரும்பிப் பார்த்தாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன.
“வேண்டாம்ங்கறது எவ்வளவு பெரிய பதில் தெரியுமா?” பேசும்போதே குரல் உடைந்துவிட்டது. நீலகண்டனால் அவளது அழுகையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. எழுந்து போய் ராஜீயை அணைத்துக்கொண்டான். அவனது வேட்டியில் முகம் புதைத்தவள், முதுகு குலுங்கத் தொடங்கியது.
“நமக்கே இப்படி இருக்கும்போது, ப்ரீத்திக்கு எப்படி இருக்கும்? ஒவ்வொரு தரமும் இந்தப் பையன் போட்டோவப் பாரு, அந்தப் பையன் போடோவப் பாருன்னு காண்பிச்சு, காண்பிச்சு, அவ மனசுல எவ்வளவு ஆசையை வளர்க்கறோம். அது இல்லன்னு ஆச்சுன்னா, அவ மனசு என்ன பாடுபடும்? ஏன் ஒருத்தன் வேண்டாம்னு சொல்றான்னு பதிலே தெரியாம போகும்போது அது எவ்வளவு பெரிய கஷ்டம் தெரியுமா?”
அவள் முதுகு குலுங்கிக்கொண்டே இருந்தது.
“திருப்பித் திருப்பி இந்தத் தப்பைப் பண்ணக்கூடாதுன்னு நினைச்சுப்பேன். ஆனால், இதேதான் நடக்குது. அவ மனசு என்ன ரப்பரா, கல்லா? அதுல எவ்வளவு கற்பனை, எவ்வளவு ஆசைகள் வளர்ந்திருக்கும்? சட்டுன்னு அது அத்தனையையும் போட்டு மிதிச்சுடறோமே? நமக்கெல்லாம் நல்ல கதி கிடைக்குமா? எதை வேணும்னாலும் நசுக்கலாம். கற்பனையைப் போட்டு நசுக்கலாமா? அது எவ்வளவு பெரிய பாவம்?”
ப்ரீத்தியை நினைத்துக்கொண்டான் நீலகண்டன். அவள் முகத்தையே பார்க்க முடிந்ததில்லை. ஒவ்வொரு நிராகரிப்பையும் ஏற்றுக்கொண்டு, மீண்டும் சகஜமாக வேலைக்குப் போய்க்கொண்டு, தன்னுடைய வருத்தத்தையோ, வேதனையையோ, ஒரு துளியும் காட்டாமல் இருக்கிறாள் ப்ரீத்தி.
“நாம கையில தங்கத்தை வெச்சுக்கிட்டிருக்கோம். அதைச் சரியாக நமக்கு விக்கத் தெரியல. வாங்க வர்றவனுக்கும் அதோட மதிப்பு தெரியல.”
நீலகண்டன் பால்கனி கட்டைச்சுவரைப் பிடித்துக்கொண்டான். ஒரு பெரிய இக்கட்டில் மாட்டிக்கொண்டுவிட்ட சூழ்நிலை. அவ்வளவு விரைவாக வெளியே வரமுடியாத நெருக்கடி. முதலில், ராஜீயைத் தேற்றிவிட்டால் போதும் என்று தோன்றியது.
“உள்ளே வாம்மா. அப்புறம் பேசிக்கலாம். கொஞ்சம் நாளைக்கு ஜாதகத்தையே எடுக்க வேண்டாம். அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றார் நீலகண்டன்.
காற்று கொஞ்சம் கொஞ்சமாக வீசத் தொடங்கியது. சாலை வாகனங்கள் அருகத் தொடங்கியிருந்தன. சாலையையே பார்த்துக்கொண்டிருந்த ராஜீ, வேறெதுவும் பேசவில்லை. அடிபட்ட வலி. மனத்துக்குள் விம்மிக்கொண்டிருந்தது.
“நைட்டு என்னம்மா டிபன்? ஏன் இங்கே உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க? என்ன விஷயம்?”
குரல் கேட்டு நீலகண்டன் திரும்பினான். ப்ரீத்தி காதில் ஹெட்போனுடன் பால்கனி வாசலில் நின்றுகொண்டிருந்தாள்.
“சப்பாத்தி தால் தான் பண்ணியிருக்கேண்டி செல்லம். கொஞ்சம் நேரத்துல குடுக்கறேன். வெயிட் பண்ணு.” ராஜீ சட்டென்று எழுந்துகொண்டாள்.
“இப்பல்லாம் ரொம்ப லேட் பண்றேம்மா. பட்டினியா போட்டே சாவடிக்கிறே. என் புருஷன் வீட்டுக்குப் போய்தான் இனிமே நேரத்துக்குச் சாப்பிடப் போறேன்.”
“கண்டிப்பாடி செல்லம். அங்கே போயே நேரத்துக்குச் சாப்புடு. யாரு வேணான்னா?”
ராஜீ விறுவிறுவென்று சமையலறை பக்கம் நகர்ந்தாள். நீலகண்டனால், மனவலியை அவ்வளவு லேசில் துடைத்துவிட முடியாமல், பால்கனியிலேயே நின்றுகொண்டிருந்தான். உள்ளே அம்மாவும் பெண்ணும் கிண்டலும் சிரிப்புமான பேசிக்கொண்டிருந்தார்கள்.
----------------
திருமணங்களில் பெண்பார்த்தல், பின்னர் புறக்கணித்தல் ஆகியவற்றிலுள்ள வலி, வேதனையைக் காட்டும் படைப்பு. மூன்று கதை மாந்தர்களைக் கொண்டு கச்சிதமாகப் பின்னப்பட்டுள்ள கதை. சிறுகதைக்குரிய ஓர்மைப்பண்பிலிருந்து விலகாத கதையிது. கதை வெளிப்படுத்தும் உணர்விலும் முழுமை காணப்படுகின்றது. வாசகரைத் தொடர்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது. வாழ்த்துகள்!
மூன்றுமே முத்தான சத்தான விஷயங்கள். அதுவும் சிறுகதை, இரண்டு பெண்களைப் பெற்று மணம் முடித்து வைத்த என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பாராட்டுக்கள்.