Dear friends,
Greetings from ‘Nesamudan’. Hold on! Don’t hit the delete button yet – this is not a spam mail. Welcome to the my Email Magazine: ‘Nesamudan’.You received this email because I assume you love reading my Email Magazine. Happy reading!
Venkatesh R
Email: venkatesh.nesamudan@gmail.com
05 May 2020
Archives : https://rvenkatesh.substack.com/
How to unsubscribe: If you do not wish to receive any more updates from ‘Nesamudan’, please email me and I shall be prompt in removing your email ID from my mailing list.
P.S: Also you can share your friend's Email ids, who might like Tamil writings.
____________________________
ரேபிட் டெஸ்ட் சொதப்பியது ஏன்?
**************************************
இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்பு, சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட் வருகிறது. 4 லட்சம் கிட்டுகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. வந்தவுடன், விரைவாக பரிசோதனைகள் நடைபெறும் என்று தமிழக அரசு சொன்னது.
பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு 24 ஆயிரம் கிட்டுகள் வந்துசேர்ந்தன. அவற்றைக் கொண்டு பரிசோதனைகள் தொடங்கப்பட்ட இரண்டாவது நாளே, இராஜஸ்தான் பிரச்னையை எழுப்பியது. அதாவது, ரேபிட் டெஸ்ட் முடிவுகள் 5 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரைதான் நம்பகத்தன்மையோடு இருக்கின்றன.
தவறாக ரிசல்ட் காட்டுகிறது என்றன பல மாநிலங்கள். உடனே, இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம், ரேபிட் பரிசோதனைக் கிட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டது. எல்லா மாநிலங்களையும் அந்தக் கிட்டுகளை சீனாவுக்கே திருப்பி அனுப்பவும் சொல்லிவிட்டது.
வழக்கம்போல், தொலைக்காட்சிகளில் ஒரே கூச்சல். மாநில அரசுக்கு இதைக் கூட வாங்கத் துப்பில்லையா என்று கேட்டு தங்கள் மேதாவிலாசத்தைக் காண்பித்தார்கள்.
வழக்கம்போல், என்னால் இதை அவ்வளவு எளிதாக கடந்துபோக முடியவில்லை. ஒரு பரிசோதனை எப்படி தப்பாக முடியும்? எனக்குத் தெரிந்த மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்களைக் கலந்து பேசத் தொடங்கினேன். அவர்கள் சொன்னதில் இருந்து நான் புரிந்துகொண்டது இதுதான்:
அதாவது, ஒரு கிருமி தாக்குதல் நடந்த பிறகு, மூன்றுவிதமான ஆன்டிபாடிகள் (நோய் எதிர்ப்புப் பொருட்கள்) பல்வேறு கால இடைவெளியில் உருவாகும்.
அவற்றுக்கு IgM, IgA, IgM என்று பெயர். இவற்றில் IgM என்ற ஆன்டிபாடி 7 நாட்கள் முதல் 21 நாட்களில் உருவாகிவிடும். நோயாளியின் ரத்த மாதிரியை பரிசோதித்தால், இந்த ஆன்டிபாடி தெரியவரும். அப்படியானால், அவருக்கு கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. இதை நம்பியே ஆன்டிபாடி பரிசோதனையான ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் ஆர்டர் செய்யப்பட்டன.
உண்மையில், 21 நாட்களில் அல்ல, IgM என்பது 6 வாரங்களில் (அதாவது ஒன்றரை மாதங்கள் கழித்துத் தான்) தோன்றும் என்ற இன்னொரு தரப்பு மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். நோய் எதிர்ப்புப் பொருள் உருவாவதற்கு முன்னதாகவே ரேபிட் டெஸ்ட் கிட்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கியதே, ரிசல்டுகள் தப்பாக ஆனதற்குக் காரணம். கிட்டுகளில் குறையில்லை, அதன் உள்ளார்ந்த அறிவியலைப் புரிந்துகொண்டிருந்தால் இந்தத் தப்பு நேர்ந்திருக்காது.
இப்போது, கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆன நிலையில், அதே பரிசோதனை கிட்டுகளைப் பயன்படுத்தினால், ரிசல்டுகள் தெளிவாக இருக்கும். ‘இப்போது அதைப் பயன்படுத்தாமல், நிறுத்திவைத்திருப்பதில் அர்த்தமே இல்லை’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
மாநில அரசுகளும், ஐ.சி.எம்.ஆர்.ம் மீண்டும், ரேபிட் பரிசோதனைகளை மீண்டும் பயன்படுத்திப் பார்க்கவேண்டும். ஒருவேளை, இப்போது அவை சரியான ரிசல்டுகளைக் கொடுக்கத் தொடங்கினால், நோய்த் தொற்றை விரைவில் கண்டறியலாமே?
---------------------------------
கரோனா : இரண்டு எதிரெதிர் பார்வைகள்
******************************************
1. கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு மருத்துவர்கள், கரோனா பற்றி தெரிவித்துவரும் ஒரு கருத்து புதுமையாக இருக்கிறது. அதாவது, ஒருவரது உடலில், கரோனா கிருமிகள் இருக்கலாம். ஆனால், அது நோயாக வெளிப்படவில்லை என்றால் பிரச்னை இல்லை. கிருமி இருப்பதாலேயே அவர் நோயாளி என்று சொல்லக்கூடாது. தற்போது கூட நம்முடைய உடம்பில் ஏராளமான கிருமிகள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. அவையெல்லாம் சமர்த்தாக அங்கே உட்கார்ந்திருக்கின்றன. ஒன்றும் பிரச்னை இல்லை என்கிறார்கள். கிருமியை ஒரு வெடி போன்று கருதிக்கொண்டால், அது உடல் எனும் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால், அங்கே அது நமுத்துப் போய்விடும். அது வெடித்துவிடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை என்று ஒரு மருத்துவர் வித்தியாசமான உதாரணம் கொடுத்தார்.
இதற்கு இணையாக இன்னொரு மருத்துவ ஆய்வாளர் வேறொரு உதாரணம் கொடுத்தார். பாலகுமாரனின் ‘மெரிக்குரிப் பூக்கள்’ நாவலில் ஒரு கத்தி வரும். அதன் பெயர் ஞாபகமில்லை. அதை வயிற்றில் குத்தினால், அத்தனை பாகங்களையும் கிழித்துக்கொண்டு வெளியே வரும். அதுபோல், கரோனா என்பதும் சுற்றிச் சுழற்றியடிக்கும் நோய். உடலுக்குள் போய்விட்டால், எங்கே எந்தப் பகுதி வீக்காக இருக்கிறதோ, அங்கே தன் கைவரிசையைக் காட்டிவிடும். ஜாக்கிரதை என்றார்.
இரண்டையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
2. இந்திய அரசு ஏன் இன்னும் இரண்டாவது ஸ்டிமுலஸ் பேக்கேஜை வழங்கவில்லை, ஏன் தாமதம் என்று கேட்கப்படுகிறது. மக்கள் கையில் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று வைக்கப்படும் அழுத்தம் என்பது எதிர்க்கட்சிகளின் சதி. எல்லா நாடுமா இப்படிச் செய்திருக்கிறது? ரஷ்யா என்ன செய்திருக்கிறது என்று கேட்டுச் சொல்லுங்களேன். எல்லோரும் அமெரிக்காவையும் ஜெர்மனியையும் மட்டும் உதாரணம் காட்டுகிறீர்களே? என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது.
இதற்கு இணையாக எதிர்வாதம் ஒன்று பேசப்படுகிறது. 1991 புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்த பின்னர், அரசு அதிகாரிகள் மனத்தில் பெரிய மாறுதல் ஏற்பட்டுவிட்டது. 1991க்குப் பின்னர் இரண்டு தலைமுறை புதிய ஆட்சிப் பணி அதிகாரிகள் வந்துவிட்டனர். இவர்கள் எல்லோரும் புதிய பொருளாதாரச் சிந்தனைகளில் ஆழங்கால் பட்டு நிற்பவர்கள். இவர்களால், பழைய சோஷலிச மனநிலைக்குப் போக முடியாது. ‘அரசாங்கம்தான் அனைத்தையும் செய்ய வேண்டும்,’ ‘மக்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு,’ ‘மக்கள் நல அரசாங்கம்’ என்பதெல்லாம் பழைய சோஷலிச கருத்துகள். இன்றைய கரோனா காலத்தில் சோஷலிச பாணி மனநிலை தான் அவசியம். ஆனால், இவர்கள் அனைவரும் முற்றிலும் வேறொரு பாணி சிந்தனைகளால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களிடம் போய், நேரடி பண உதவியோ, மானியமோ, நலத்திட்டங்களோ எப்படி எதிர்பார்க்க முடியும் என்று கேட்கப்படுகிறது.
இரண்டையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
---------------------------
புதிய கோணத்தில் சந்திரபாபு
**********************************
எழுத்தாளர் காலச்சக்கிரம் நரசிம்மா, ஃபேஸ்புக்கில், நடிகர் சந்திரபாபு பற்றிய தொடரை எழுதி முடித்துள்ளார். ‘சகலகலா பாபு’ என்பது தொடரின் தலைப்பு. பல வகையில் முக்கியமான தொடர் இது.
பொதுவாக தனிநபர் குறித்த வரலாறுகளில், மிகை உணர்ச்சி இருக்கும். நாயக தோற்றத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக சின்னச் சின்ன விஷயங்களையும் நாடகத்தனத்தோடு வழங்கும் முறை உண்டு. சகலகலா பாபுவில் அந்த இடறல்கள் ஏதும் இல்லை. மாறாக, இதில் கவனிக்க வேண்டிய பல செய்திகளும் உள்ளன.
சந்திரபாபு பற்றி இதுவரை நான் படித்த பல வரலாறுகளில், அவரை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக புகுத்தப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட செய்திகள் அனைத்தையும் காலச்சக்கிரம் நரசிம்மா உடைத்துவிடுகிறார்.
இங்கேதான் வரலாறு எழுதுகிறவருடைய பார்வை முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு பிரபலம் மறைந்தவுடன் எழுதப்படும் வரலாறுக்கும் 40, 50 ஆண்டுகள் கழித்து எழுதப்படும் வரலாறுக்கும் வித்தியாசம் ஏற்படுவது இந்தப் பார்வை, கோணத்தினால் தான். அதேபோல், கூடுதல் தகவல்களையும் தரவுகளையும் சேகரித்துக்கொண்டு எழுதும்போது, முற்றிலும் வித்தியாசமான தோற்றம் கிடைக்கக்கூடும்.
சகலகலா பாபுவிலும் இதுதான் நடந்திருக்கிறது.
சந்திரபாபுவை எந்தவகையிலும் குறைத்து மதிப்பிடவில்லை. அதேசமயத்தில், அவரை உயர்த்திப் பிடிக்கும் நோக்கமும் இல்லை. மாறாக, அவரை இயல்பான மனிதராகப் பார்க்கும் பார்வை இந்த ஆசிரியருக்குக் கிடைத்திருக்கிறது. காரணம், இவருக்குக் கிடைத்திருக்கும் கூடுதல் தரவுகள், தகவல்கள்.
இரண்டு, மூன்று செய்திகளைப் பார்ப்போம். சந்திரபாபு, திருமணத்துக்குப் பின்னர் முதல் இரவன்றே, அவரது மனைவி, தன் காதலைப் பற்றித் தெரிவிக்க, அன்றே அவளை அழைத்துக்கொண்டு போய் அவரது காதலனோடு சேர்த்துவைத்தார் என்பது ஒரு அர்பன் மித். அது இல்லை என்பதை இங்கே தெளிவாக இத்தொடரில் எழுதியுள்ளார்.
சந்திரபாபுவின் துடுக்குத்தனமான பேச்சுகளை இதுவரையான வரலாற்று ஆசிரியர்கள், அவரது நேர்மை, துணிவின் அடையாளாமாகவே சித்திரித்து வந்துள்ளனர். அவரது மேதமையின் வெளிப்பாடு என்று போற்றியுள்ளனர். ஆனால், நரசிம்மா அதைச் செய்யவில்லை. அவரது இணக்கமின்மை, இதரரோடு பழகும்போது வெளிப்படும் நிராகரிக்கும் தன்மை ஆகியவற்றைத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார். அதனால், அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் என்னென்ன என்பதையும் பட்டியல் இடுகிறார்.
எம்.ஜி.ஆர். தான் சந்திரபாபுவின் சரிவுக்குக் காரணம், அவரைப் பழிவாங்கினார் என்ற சித்திரமும் தொடர்ச்சியாக எழுதப்பட்டு வந்தது. உண்மை போன்றே எழுதப்பட்ட வந்த இந்த அனுமானத்தை, தெளிவாக நிராகரித்திருக்கிறார் நரசிம்மா. இந்த இடத்தில் தான் ஜெயலலிதாவோடு, நரசிம்மாவுக்கு இருந்த அறிமுகம் பெரிதும் உதவி, புதிய வரலாற்றைக் கொடுக்கிறது. ‘அடிமைப் பெண்’ திரைப்படத்தில் சந்திரபாபு நடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவரே ஜெயலலிதா தான். அதன் மூலம், எம்.ஜி.ஆரிடம் மீண்டும் சுமுகமாகி, ‘மாடி வீட்டு ஏழை’ படத்துக்கான கால்ஷீட்டை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பை ஜெயலலிதா சந்திரபாபுவுக்கு ஏற்படுத்தித் தந்தார் என்று தெளிவுபடுத்துகிறார் நரசிம்மா.
சந்திரபாபு மாமனிதர் தான். விசித்திரமான என்று சொல்லக்கூடிய Eccentric தான். மற்ற வரலாற்றாசிரியர்கள் இந்த விசித்திரத்தையே உச்சிமுகர்ந்து கொண்டாடும் போது, அதை இயல்பாக அணுகியிருக்கிறார் நரசிம்மா. அதைப் போதையூட்டும் கவர்ச்சியாக மாற்ற முற்படவில்லை.
என்னைக் கவர்ந்த ஒரு பகுதி, குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மடியில் போய் சந்திரபாபு உட்கார்ந்து கொண்ட தருணம் தான். ஒரு எக்சென்டிரிக்கால் தான் அதைச் செய்யமுடியும்.
இதற்கு முந்தைய பல கட்டுக்கதைகளை விலக்கி, தன் கோணத்தில் சந்திரபாபுவைப் படைத்துத் தந்துள்ள காலச்சக்கிரம் நரசிம்மாவுக்கு வாழ்த்துகள்.
-------------------
திரை படுகுழி
***************
இந்தக் கரோனா காலத்தில் வாசிப்பு எண்ணிக்கை உயர்ந்திருக்கிறதோ, இல்லையோ காட்சி ஊடகங்களின் நுகர்வோர் எண்ணிக்கையும் பயன்படுத்தும் நேரமும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, இந்த விவரத்தைச் சொன்னார். அதாவது, செய்தி சானல்களின் நுகர்வோர் நேரம் சுமார் 23 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. வானொலியின் பயனாளர் நேரமும் உயர்ந்துள்ளது.
இதேபோல், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், வழக்கமான யூடியூப் சானல்களைப் பார்ப்போரின் நேரமும் உயர்ந்திருக்கிறது. ஓ.டி.டி. பிளாட்ஃபார்ம்களில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. வீட்டில் உட்கார்ந்துகொண்டு என்ன செய்வது என்று தெரியாமல், பலரும் பல்வேறு திரைகளின் முன் நேரத்தைக் கொல்கின்றனர்.
தொலைக்காட்சித் திரை, கணினித் திரை, அலைபேசித் திரை, டேப்லெட் திரை என்று எல்லாமே திரைகள் (மறைப்புகள்) தான். தங்களுக்கு முன்பு ஏதோ ஒன்று சலனமுற்றுக்கொண்டே இருக்கவேண்டும். இதுதான் வாய்ப்பு என்று ஒவ்வொரு திரையும் தங்களுடைய உள்ளடக்கத்தை அதிகப்படுத்தி, நேயர்களையும் பயனர்களையும் அதிகப்படுத்தி, தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்கின்றன.
உண்மையில், ‘தக்கவைப்பது’ என்பது இத்தகைய ஊடக நிறுவனங்களின் பார்வையில் இருந்து சொல்வது. வாடிக்கையாளர் பார்வையில் இது ‘போதைக்கு அடிமையாவது.’
நேரத்தைக் கொல்வதற்காகத் தொடங்கிய இந்தப் பழக்கம், பாரதூர பின்விளைவுகளைக் கொண்டது. அவர்களால், மீண்டும் எழுத்து, அதன்மூலம், சிந்தனை செய்வது, யோசிப்பது என்பன போன்ற தனிமனித செயல்களில் ஈடுபட முடியுமா என்ற சந்தேகமே எனக்குள் எழுகிறது.
சலனம் ஒன்றுதான் இவர்கள் அனைவரையும் உட்கார வைத்திருக்கிறது. சிந்தனை அல்ல. சலனப் படம் ஓடும்போது, இவர்களுக்குள் வேறொரு கற்பனைக் காட்சி ஓடிக்கொண்டிருக்கலாம். பல வீடுகளில் பார்த்திருக்கிறேன். தொலைக்காட்சிகளில் செய்திகளோ, நாடகங்களோ, பாடல்களோ ஓடிக்கொண்டிக்கும். அதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களின் கவனத்தில் அக்காட்சிகள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் வேறொரு கற்பனையில் இருப்பார்கள். உண்மையில், இது அவர்களுடைய உற்பத்தி சக்தியை வீணடிக்கும் செயல்.
ஆனால், பலரும் தெரியாமல் இத்தகைய திரை போதையெனும் படுகுழியில் விழுந்துவிடுகிறார்கள். அதுவும் மாணவர்களுக்குக் கூடுதலாக ‘கேம்ஸ்’ என்ற ஒன்றும் இருக்கிறது. அது இன்னும் அடிக்டிவ். பல குடும்பங்களில், இந்தப் போதை பற்றிய புரிதல் இருப்பதால், தங்கள் பிள்ளைகளை ரொம்ப கவனமாக பராமரிக்கிறார்கள். பிள்ளைகளுக்கு காலை முதல் மாலை வரை பல்வேறு வீட்டுவேலைகள், ஓவியங்கள், கைவினைப் பொருட்கள் செய்வது, சிந்தனைக்கு உதவும் புதிர்களில் ஈடுபடுத்துவது என்று முனைப்புடன் ஈடுபடுத்துகிறார்கள்.
இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் இந்தப் பிள்ளைகள் பள்ளிக்குப் போகவேண்டும். புத்தகங்களை வாசிக்க வேண்டும். கையால் விடைகளை எழுதவேண்டும். எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வுகள் என்பவை, துரதிருஷ்டவசமாக இன்னும் ‘எழுத்து வடிவத்தில்’ தான் இருக்கின்றன.
பல பெற்றோர்களுக்கு இந்த அபாயம் புரியாமல் தம் பிள்ளைகளை திரை படுகுழியில் சரிந்துபோக அனுமதிக்கிறார்கள். இதை விரைந்து நிறுத்திக்கொள்வது அவசியம். இங்கேதான் ‘செலக்டிவ் வியூவிங்’ என்ற அணுகுமுறை அவசியம். எது எவ்வளவு தேவையோ, அதை நிர்ணயித்துக்கொண்டு, அவ்வளவு நிகழ்ச்சிகளை மட்டும் நுகர்வது என்பது ஒன்றே இந்தப் பிரச்னைக்கு உரிய தீர்வு.
------------------------
சுயபரிசீலனைக்கு உதவிய மலேசிய சிறுகதைகள்
*********************************************************
இந்தக் கரோனா காலத்தில் நான் ஈடுபட்டிருந்த ஒரு வேலை, சுவாரசியமானது. மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர், நண்பர் இராஜேந்திரன் ஒரு வேலையை எனக்குக் கொடுத்தார். அங்குள்ள 14 எழுத்தாளர்களின் சிறுகதைகளை எனக்கு அனுப்பி, அவற்றைப் பற்றி என் அபிப்பிராயங்களைச் சொல்லும்படி கேட்டிருந்தார். நான் ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு, மலேசிய சிறுகதைகளை வாசித்து, ஆண்டு இறுதியில் சிறந்த சிறுகதையைத் தேர்வு செய்து கொடுத்தேன். ‘பந்துவான்’ என்ற தலைப்பில் அது நூலாகவும் வெளிவந்தது.
அந்த நம்பிக்கையில் இம்முறையும், எனக்கு மலேசிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை அனுப்பிவைத்தார். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அவர் செய்திருந்தார்.
எழுத்தாளர்களின் பெயர்களை நீக்கிவிட்டு படைப்புகளை மட்டும் அனுப்பினார்.
முதலில் அனைத்துக் கதைகளையும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன். பின்னர், தனித்தனியாக படித்து, ஒவ்வொன்றைப் பற்றியும் என் அபிப்பிராயங்களை குரல்வழியாக பதிவு செய்து அனுப்பிவைத்தேன்.
இரண்டு, மூன்று நன்மைகள் நடந்தன. முதலாவது, ஆசிரியர் யார் என்ற விவரம் தெரியாது என்பதால், வெளிப்படையாக என் கருத்துகளைச் சொல்ல முடிந்தது.
விருப்புவெறுப்பு தோன்றவில்லை. பெயர் தெரிந்திருந்தாலும், முகம் தெரிந்திருக்கப் போவதில்லை. எந்தவிதமான அறிமுகமும் இல்லை என்பதால், அப்போதும் பாரபட்சமற்ற விமர்சனம் தான் தோன்றியிருக்கும். ஆனாலும், நல்லவற்றைச் சொல்லி, பின்னர், அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளர் தம்மை மேம்படுத்திக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் எவை என்பதையும் விவரித்தேன்.
இரண்டு, நான் சிறுகதைப் பற்றி கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் இன்னும் துலக்கம் பெற்றன. எவையெல்லாம் சிறுகதை இல்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதாவது, என் வரையில். இவையெல்லாம் கடந்த 35 ஆண்டுகளாக என் மனத்தில் திரட்சி பெற்றவை. அந்தத் துலாக்கோல் கொண்டுதான் மலேசிய சிறுகதைகளை எடை போட்டேன்.
என்னை நானே கேட்டுக்கொண்ட கேள்விகள் தான், இந்த முயற்சியில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பலன். நான் நம்பிய பல கருத்துகளை, நானே கேள்வி எழுப்பி, விளக்கம் கொடுத்து, மறுத்து, அதற்கு ஒரு நியாயம் சொல்லி என்று ஆழமான விவாதம் செய்துகொண்டேன். ‘பிரசாரத்தை சிறுகதையாக ஏற்பதில் என்ன தவறு?’ ‘செய்தியோ, தகவலோ சிறுகதை ஆகுமா?’ ‘சிறுகதைக்குள் இருக்கும் நம்பகத்தன்மை என்பது என்ன?’ ‘ஒரு சிறுகதைக்குள் உபரிச் சொற்கள் இருந்தால், என்ன நஷ்டம்?’ ‘கட்டுக்கோப்பே இல்லாமல் எழுதினால், சிறுகதையை ரசிக்க முடியாதா?’ ‘சிறுகதை ஆசிரியர்கள், எளிமையான தீர்வுகளுக்குள் போய் சிக்கிக்கொள்வதேன்?’ என்பன போன்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டு பதில் சொல்லிக் கொண்டேன்.
சிறுகதை குறித்து நான் வைத்திருக்கும் பல கருத்துகள் மேலும் உறுதியாயின; ஒருசிலவற்றை நெகிழ்ச்சியுடன் மாற்றிக்கொண்டேன். தளர்வுகள் கொடுத்துக்கொண்டேன். சிலவற்றைப் புறமொதுக்கினேன்.
மலேசிய எழுத்தாளர்களில் பெரும்பாலோர் ஆசிரியர்கள் என்பதால், அவர்கள் மத்தியில், நல்ல தமிழ் பயன்பாட்டுக்கு ஓர் உந்துதல் இருக்கிறது. அதேசமயம், உள்ளூர் வட்டார வழக்குகள், சொற்கள், பயன்பாடுகள், கதைகளின் நம்பகத்தன்மையை மேலும் கூட்டுவது நிச்சயம்.
என் அபிப்பிராயங்கள், மலேசிய எழுத்தாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக இராஜேந்திரன் தெரிவித்தார். நான் எடுத்துக்கொண்ட ஒரு வேலை, பயன் அளித்திருப்பது நிச்சயம் மகிழ்ச்சியை அளித்தது.
-----------------