Dear friends,
Greetings from ‘Nesamudan’. Hold on! Don’t hit the delete button yet – this is not a spam mail. Welcome to the my Email Magazine: ‘Nesamudan’. You received this email because I assume you love reading my Email Magazine. Happy reading!
Venkatesh R
Email: venkatesh.nesamudan@gmail.com
31 May 2020
Archives : https://rvenkatesh.substack.com/
How to unsubscribe: If you do not wish to receive any more updates from ‘Nesamudan’, please email me and I shall be prompt in removing your email ID from my mailing list.
P.S: Also you can share your friend's Email ids, who might like Tamil writings.
____________________________
மாணவர்களை மீட்பது எப்படி?
***********************************
இந்த மாதம் 20ஆம் தேதி, மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் விஞ்ஞான் பிரசார் சார்பாக, என்னை ஒரு 'சூம்' கலந்துரையாடலில் உரையாற்றக் கேட்டுக்கொண்டார்கள். 'கோவிட் 19 - நெருக்கடியில் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம்' என்ற தலைப்பில் பேசினேன். பின்னர், பங்குகொண்டவர்களின் கேள்விகளுக்குப் பதில்களும் தெரிவித்தேன்.
நான் தொடர்ச்சியாக பல பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தாளாளர்களோடு பேசிக்கொண்டு இருக்கிறேன். அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று பல தரப்பினரிடமும் பேசுகிறேன். என்னை மிகவும் பாதித்த சில விஷயங்கள் உள்ளன.
1. வடசென்னையில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள், ராஜஸ்தானும் குஜராத்தும் போய்விட்டார்கள். இப்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தச் சொல்லி அறிவிப்பு வந்தவுடன், அவர்களை எல்லாம் தொடர்பு கொண்டால், எல்லோரும் ஊருக்குப் போய்விட்டது தெரிய வந்ததாம். அவர்களின் பெற்றோர்கள், வடசென்னையில் உள்ள பல உணவுப் பலகாரக் கடைகளில் சமையலராகவோ, வேறு சிறுசிறு தொழில் செய்து வந்தவர்கள். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவுடன், இவர்கள் ஊர் திரும்பிவிட்டார்கள். அவர்களுடைய பிள்ளைகள், மீண்டும் சென்னை வருவார்களா என்றே தெரியவில்லை என்று வருத்தப்பட்டார் ஒரு தலைமை ஆசிரியர்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இதே நிலைமை தான் பல ஊர்களிலும். நாம் இத்தனை ஆண்டுகளாக, பள்ளிக் கல்விக்காக பட்ட பாடுகள் எல்லாம் கோவிட் 19 கொடூரத்தில் சிதைந்துபோய்விட்டது. இந்த மாணவர்களில் எத்தனை பேர் மீண்டும் நம்முடைய ஊருக்குத் திரும்பி, தேர்வு எழுதி, படிப்பைத் தொடரப் போகிறார்கள். இடைநிற்றம் நிச்சயம அதிகரிக்கப் போகிறது.
பிள்ளைகளுக்கே கூட, அப்பா, அம்மா படும் சிரமங்களைப் பார்த்துவிட்டு, தாமே வேலைக்குப் போய்விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம். கல்வியின் மீது ஆர்வமும் பிடிப்பும் குறைந்துபோகலாம். இதிலும் அதிகம் பாதிக்கப்படப் போவது பெண் குழந்தைகள் தான். கல்வியறிவற்ற ஒரு தலைமுறை உருவாகவே கோவிட் 19 மறைமுகமாக வழிசெய்துவிடுமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது.
உண்மையில், இந்த ஊரடங்கு எல்லாம் முடிந்தவுடன், மிக வேகத்தில் கவனம் செலுத்த வேண்டியது பிள்ளைகளின் கல்வியில் தான். ஆர்வம் அற்றோ, வேறு காரணங்களாலோ நின்றுபோன மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்து சேர்க்கவேண்டும். முடிந்தால், இரவுப் பள்ளி மாதிரியான பழைய உத்திகளையும் பின்பற்றி, இடைநிற்றலைத் தடுத்து, மாணவர்களுக்குக் கல்வியறிவைப் புகட்ட வேண்டும்.
ஏற்கெனவே அரசாங்கம் பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்து வந்தது. இப்போதும் அவற்றைத் தொடர்வதோடு, ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பிள்ளையின் கல்விக்கும் பொறுப்பேற்க வைக்கவேண்டும். ஆசிரியர்களும் தங்கள் பொறுப்புணர்ந்து, மாணவர்களை அரவணைத்து கல்வியை மேம்படுத்த வேண்டும்.
உள ரீதியாக, பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட இவர்களை மீண்டும் பள்ளிக்கூடம் என்று விரிந்த சிறகுகளுக்குள் பொத்திப் பாதுக்காப்பது மிகமிக அவசியம்.
நோபல் பரிசு அறிஞர் சத்தியார்த்தி தெரிவிப்பது போன்று, 75 லட்சம் கோடி ரூபாய் கல்விக்கென்றே திரட்டி, மாணவர்களுக்குத் தேவைப்படும் அத்தனை வசதிகளையும் உள்கட்டமைப்புகளையும் செய்துதர வேண்டும் என்றார். அது நிச்சயம் தேவை.
2. இதன் இன்னொரு முனை, மத்தியமர்கள், கொஞ்சம் வசதியானவர்களின் பிள்ளைகள். கடந்த 60 நாட்களுக்கும் மேல், இவர்களில் பெரும்பாலோர் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், யூடியூப் என்று பார்த்துப் பார்த்துச் சலித்துவிட்டனர்.
பல பள்ளிகளில் ‘சூம்’ வகுப்புகள் ஆரம்பித்துவிட்டன. காலை 7 மணி முதல் பகல் 2 மணிவரை 10 பீரியட்கள் கொண்ட டயம்டேபிள் போட்டுக்கொடுத்து, இணையத்தில் வகுப்புகள் ஜூன் 1 முதல் தொடங்கவிருக்கின்றன. எல்லாமே அரை மணிநேர பீரியட்கள்.
சூம் வகுப்புகளில் கலந்துகொண்ட பல மாணவர்களிடம் பேச முடிந்தது. எல்லோருக்கும் இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்று சொல்ல முடியாது. கவனம் குவிக்க முடியவில்லை. புரியவில்லை. ‘ஏதோ ஒன்று மிஸ்ஸாவுது...’ என்று வருந்திய மாணவர்களையும் பார்க்க முடிந்தது. அவர்கள் விரும்பும் ‘கையைப் பிடித்து அழைத்துச் செல்லும்’ மனப்பாங்கு, இணையத்தில் கிடைக்கவில்லை.
இணையம் பெளதிகரீதியான தொலைவை சுருக்கியதாகக் கருதலாம்; ஆனால், அது உளரீதியான தொலைவைக் கடக்க முடியவில்லை.
என் அனுமானத்துக்கு முற்றிலும் வேறான பார்வை ஒன்றை நண்பர் முன்வைத்தார். “நீங்கள் தான் டிஜிட்டல் மைக்ரண்ட்ஸ். ஆனால், மாணவர்களோ, டிஜிட்டல் நேடிவ்ஸ். அதனால், அவர்கள் இந்தப் புதிய கல்விமுறைக்குச் சட்டென்று மாறிவிடுவார்கள். நீங்கள் கவலையே படவேண்டாம்” என்றார். நியாயமாகத் தோன்றியது.
வேறொரு விஷயம் தான் நெஞ்சில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் தான் பள்ளிகள் தொடங்கும்போல் தெரிகிறது. மார்ச் கடைசியில் பள்ளிகள் மூடப்பட்டன. கிட்டத்தட்ட 4 அல்லது 4.5 மாதங்கள் கழித்து பள்ளிகள் தொடங்கப் போகின்றன. பல மாணவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து மீண்டிருப்பார்கள். அவர்களை மீண்டும் பள்ளிக்கூட, கல்வி கற்கும் மனநிலைக்குக் கொண்டுவர வேண்டும். ஆசிரியர்கள், அந்த நேரத்தில் மாணவர்களை மிகவும் ஜாக்கிரதையாக கையாண்டு, அவர்களை நெறிப்படுத்த வேண்டும்.
அலுங்காமல், நலுங்காமல், மாணவர்களை மீண்டும் கல்விச் சூழலுக்குள் கொண்டுவருவது எப்படி என்பதை அனைத்துத் தரப்பினரும் யோசிக்க வேண்டும்.
-----------------------
சுயம் தரும் எழுத்து
********************
சாகித்திய அகாதெமி நடத்திய மற்றொரு ‘சூம்’ கலந்துரையாடலில் கலந்துகொண்டேன். ‘தமிழ் ஊடகங்களும் இலக்கியமும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த உரையாடலில், கட்டுரையாசிரியர் திரு. சமஸ், மங்கையர் மலர் பொறுப்பாசிரியர் திருமதி. ஜி. மீனாட்சி ஆகியோர் என்னுடன் கலந்துகொண்டனர். விரைவில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்த உரையாடல், யூடியூபில் பார்க்கக் கிடைக்கும்.
மிகவும் சுவாரசியமான உரையாடல் இது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எப்படி பத்திரிகைகள், எழுத்தாளர்களைப் போஷித்து வந்துள்ளன என்பதைப் பற்றிப் பேசினோம். எழுத்தாளர்களும் பத்திரிகைகளை எவ்வாறு சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதையும் இன்று திரும்பிப் பார்க்கும்போது புரிந்துகொள்ள முடிந்தது.
கொரோனாவுக்குப் பின்னான இலக்கிய, வாசிப்புச் சூழல் தான் என் ஆர்வம் எல்லாம். என் அனுமானம் இதுதான்:
இன்றைக்குப் பலரும் அனைத்துவிதமான திரைகளின் முன்னே அமர்ந்து பொழுதைக் கழித்துவிட்டார்கள். விதவிதமான ஓ.டி.டி. பிளாட்ஃபார்ம்களில் எண்ணற்ற வெப்சீரியல்களைப் பார்த்தவர்களை எனக்குத் தெரியும். கடைசியில் எல்லோர் நாக்கிலும் துவர்ப்பும் கசப்பும் தான் மிச்சம். ‘பொழுதைக் கொல்கிறோம்’ என்ற குற்றவுணர்ச்சி தான் மேலிட்டிருக்கிறது. ‘எதார்த்தத்தில் இருந்து தப்பிக்கவே இப்படிப்பட்ட சீரியல்களில் விழுந்துவிட்டோம்’ என்று நினைப்பவர்களே அதிகம்.
இது ஒரு விஷச்சுழல். எப்படியேனும் வெளியேறிவிட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது.
இந்நிலையில் மீண்டும் புனைகதைகளும், வாசிப்பும் தான் சுயத்தை மீட்டெடுக்க உதவப் போகிறது. சொந்தக் கற்பனை உலகத்துக்கு இடமளிக்கப் போகிறது. பத்திரிகைகளும் நூல்களும் நிச்சயம் முற்றிலும் வேறொரு அனுபவத்தை இவர்களுக்கு வழங்கும். அச்சடித்த பக்கங்களில் புதைந்துள்ள, இயல்பான இடையீடற்ற, கூச்சலற்ற மெளனம் பலருக்கும் தேவையான ஒன்றாக மாறப் போவது நிச்சயம்.
ஒலி, பெரும் இம்சை. சலனம், மற்றொரு சாபக்கேடு. இவை இரண்டுமில்லாத அச்சடித்த காகிதம், அனைவரையும் தாய்மடி போல் அரவணைத்துக்கொள்ளப் போவது நிச்சயம்.
“மீண்டும், நல்ல கற்பனைவளத்தோடு எழுதும் எழுத்தாளர்களை இனங்கண்டு, மங்கையர் மலரில் எழுதச் சொல்லுங்கள். தொடர்கதைகளுக்கு இடம் கொடுங்கள்...நிலைமை மாறியிருக்கிறது. நீங்கள் விரைவில் இந்தச் சூழ்நிலையை கேப்பிடலைஸ் செய்துகொள்ள வேண்டும்.” என்று ஜி.மீனாட்சியிடம் கோரிக்கை வைத்தேன்.
கடந்த 60 நாட்களில் நான் வாசித்தவை தான் அதிகம். மிகக் கவனமாக தொலைக்காட்சியையும் வெப்சீரியல்களையும் சினிமாவையும் தள்ளிவைத்தேன். இணையத்திலும் படைப்பிலக்கியங்களை மட்டுமே அதிகம் வாசித்தேன். பல ஆண்டுகளாக நான் ‘ரைட்டர்ஸ் பிளாக்’ என்று சொல்லப்படும் ஒருவித முடக்குவாதத்தால் தவித்துக்கொண்டு இருந்தேன்.
இந்த ஊரடங்கு காலத்தில் தான் அதை உடைக்க முடிந்தது. அதற்கு உதவியது, வாசிப்பு. ஷோபா சக்தியின் ‘இச்சா’, செ.யோகநாதனின் சிறுகதைகள், ஆனந்தின் ‘சுற்றுவழிப் பாதை’, பா.ராகவனின் ‘இறவான்’, நர்சிம் எழுதிய ‘சார்மினார் எக்ஸ்பிரஸ்’, மலேசிய சிறுகதைகள் ஆகியவற்றோடு எப்போதும்போல், அசோகமித்திரனின் அழிவே அற்ற குறுநாவல்கள்.
கண்கள் எழுத்துகளை வாசிக்கும்போது, உள்ளுக்குள்ளே மற்றொரு உலகம் விரிந்துகொள்ளும். காட்சிகள் தென்படத் தொடங்கும். படிப்படியாக நம்முடைய சொந்த அனுபவங்களும் பேச்சுகளும் கூட எட்டிப் பார்க்கும். வாசிப்பு ஒரு தளத்தில் செயல்பட, மற்றொரு தளத்தில் சிந்தனையும் ஓடிக்கொண்டே இருக்கும். அது தரும் மயக்கம் இருக்கிறதே, அப்பப்பா! அதை எந்தக் காட்சி ஊடகத்தாலும் ஈடுசெய்ய இயலாது.
இப்படிப்பட்ட எதிர்பார்ப்புக்கு ஒவ்வொருவரும் இனி வந்து சேர்வர். அல்லது வந்திருப்பர். பத்திரிகைகளும், எழுத்தாளர்களும் வாசகர்களைக் கட்டிப்போடும், ஆணியடித்தாற்போல் உட்கார வைக்கும் எழுத்துவலிமையோடு படைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
-----------------------
நிழல் (சிறுகதை)
*******
அந்த வீட்டில் நுழைந்தபோதே, ஹரிஹரனுக்கு லேசாகத் தயக்கம் இருந்தது. வெளியே நல்ல வெயில். அப்பாதான் பதினோரு மணிக்கு வாக்கில், ஸ்ரீதர் மாமா வீட்டுக்குப் போகச் சொல்லியிருந்தார். பத்தேமுக்கால் வாக்கில், வேட்டியை நன்கு இறுக்கிக் கட்டிக்கொண்டு, வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினான்.
எண்ணி, ஐந்தாவது தெரு. ஸ்ரீதர் மாமாவைச் சின்ன வயது முதலே தெரியும். அப்பாவின் சொந்த ஊர்க்காரர். சென்னையில் வந்து செட்டில் ஆனபோது, அப்பாவுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது ஸ்ரீதர் மாமா தான்.
அப்பா சம்பந்தப்பட்ட அத்தனை விசேஷனங்களிலும் ஸ்ரீதர் மாமா முன்னின்று ஏதேனும் ஒரு வேலையைச் செய்வார். அவரது சுறுசுறுப்பும் படபடப்பும் மிகவும் புகழ்பெற்றது. அம்மாவைப் பெண் பார்க்க, அப்பா போனபோதும் ஸ்ரீதர் மாமா உடன் இருந்திருக்கிறார். புது குடித்தனம் போட்டது, பிள்ளைப் பேறு, புது வீடு கட்டியது, இறுதியாக அம்மா தவறியபோதும் அருகிலேயே இருந்தவர்.
இரண்டு தெரு கடந்தவுடன், ஒரு லஸ்ஸி கடை தென்பட்டது. இந்த ஏரியாவிலேயே இதற்கு ஈடு இணை இல்லை. கெட்டி தயிரில், லஸ்ஸி போட்டு, மேலே முந்திரி, பிஸ்தா போன்ற அற்புத பருப்புகளைத் தூவிக் கொடுக்கும் இடம் இது மட்டும் தான். கையில் காசிருந்தது. ஒரு குவளை லஸ்ஸி குடிக்கலாம் என்று தோன்றியது. அப்பா காலையில் வேலைக்குப் போனபோதே, ஒருசில உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டுத் தான் போயிருந்தார்.
அதில் ஒன்று, வெளியே எதையும் சாப்பிடக் கூடாது என்பது. ஸ்ரீதர் மாமா வீட்டில் சாப்பாடு போடுவார்கள், உன்னைச் சாப்பிட அழைத்திருக்கிறார்கள். மரியாதையோடு நடந்துகொள் என்பது கொஞ்சம் கறாராகவே இருந்தது.
வாசல் மிதியடியில், காலைத் தட்டிக்கொண்டு, கம்பிக்கதவைத் தட்டினான். அது நான்கைந்து குடித்தனங்கள் இருக்கும் பெரிய வீடு. ஸ்ரீதர் மாமா வீடு, கீழ்ப் போர்ஷன்.
“வாடா கண்ணா...வா, வா...”
மாமி தான் கம்பிக் கதவைத் திறந்தாள். பதினோரு மணி வெயில் முற்றம் தான், அவர்களுடைய போர்ஷன் வரை வெக்கையை ஏற்படுத்தியிருந்தது. மாமி குரல் கேட்டு, ஸ்ரீதர் மாமா, அடுத்த அறையில் இருந்து வெளியே எட்டிப் பார்த்தார். வழக்கமாக பேண்ட், சட்டையில் இருக்கும் மாமா, இன்று வித்தியாசமாக காட்சியளித்தார்.
முகத்தில் சட்டெனப் புன்னகையைத் தவழவிட்டவர், மீண்டும், கோவிலாழ்வார் முன்னால் நின்றுகொண்டு திருமஞ்சனத்தைத் தொடர்ந்தார். ஹாலின் ஓரத்தில் நின்றுகொண்டான் ஹரிஹரன். மீண்டும் எட்டிப் பார்த்த மாமா, “அப்படியே சேர்ல உட்காரேண்டா. ஏன் நின்னுக்கிட்டு இருக்கே. இன்னும் செத்த நேரம் தான். தளிகை ஆயிடும்.”
“அவசரமில்ல மாமா.”
அவர் சொன்ன சேர் என்பது ஒரு பக்கம் லேசாகச் சாய்ந்தது. சமாளித்து உட்கார்ந்துகொண்டான். இந்த வீட்டில் இரண்டு, மூன்று அண்ணாக்கள் உண்டு. யாரையும் காணோம். எல்லோரையும் சின்னவயதில் இங்கே வந்தபோது பார்த்தது. ஒருசில அண்ணாக்கள் விளையாடுவார்கள். ஒரு அண்ணா மட்டும் ரொம்ப நெருங்கி சகஜமாகப் பேசுவார்.
சமையலறையில் மாமி, ஹரியையே பார்ப்பது தெரிந்தது. அங்கிருந்து வெளியே வந்தவர்,
“கொஞ்சம் காபி தரட்டுமாடா கண்ணா. கார்த்தல என்ன சாப்பிட்டீயோ?”
“ஒண்ணும் சாப்பிடல மாமி.”
“காபி தரட்டுமா?”
கேட்டாள் கொடுப்பார். ஆனால், அப்பா என்ன நினைத்துக்கொள்வாரோ? சாப்பாடு மட்டும் தான் சாப்பிடச் சொல்லியிருந்தார். காபி கேட்டது நாளை ஒருவேளை தெரியவந்து, அப்பா கோபித்துக்கொள்ளலாம். மேலும், இவர்கள் வீட்டுக் காபி எப்படி இருக்குமோ?
“வேண்டாம் மாமி. நான் வீட்டுலேயே குடிச்சுட்டுத் தான் வந்தேன்.”
லேசாக தயங்கி நின்ற மாமி மீண்டும் உள்ளே போய்விட்டாள். நாளிதழ்களோ, வானொலியோ கூட தென்படவில்லை. அவர்களுடைய போர்ஷனுக்கு வெளியே வராண்டாவில் தெரிந்த வெயில் கோலத்தை மட்டுமே சுவாரசியமாக இருந்தது. மேலே குறுக்கே நெடுக்கே கம்பிகள் இருக்கவேண்டும். சூரிய ஒளியில் அழகான கோலங்கள் தெரிந்தன்.
“கோவிந்தன் மார்க்கெட்டுக்கு வாழ எல வாங்க போயிருக்கான். இதோ வந்துடுவான்.” மாமி உள்ளேயிருந்து சொல்வது கேட்டது. அது தனக்குச் சொல்லப்பட்டதா என்ற குழப்பம் ஹரிக்கு ஏற்பட்டது. மாமா கோவிலாழ்வாரில் இருந்து கவனத்தைத் திருப்பவில்லை.
“ஸ்கூல் லீவாடா இன்னிக்கு?”
“ஆமாம் மாமி. கால் வருஷ பரீட்சை முடிஞ்சுது. ஒருவாரம் லீவு.”
“எக்ஸாம் எப்படி எழுதிருக்கே?”
“நல்லா எழுதியிருக்கேன் மாமி.”
சொல்லும்போதே, ஹரிக்கு லேசாக அச்சமாக இருந்தது. இதெல்லாம் எப்படிச் சொல்ல முடியும்? தெரிந்தவரை எழுதியிருக்கிறேன் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், இவர்கள் அந்தப் பதிலைக் கேட்க விரும்பமாட்டார்கள்.
“அம்மா இருந்தா, பக்கத்துல உட்கார்ந்து சொல்லிக் கொடுத்திருப்பா...”
தெரியவில்லை. நிச்சயம் பக்கத்தில் உட்கார்ந்திருப்பாள். சொல்லிக் கொடுத்திருப்பாளா? தெரியாது. அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. சயின்ஸோ, மேக்ஸோ தெரியாது. தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கக் கூடும். ஆனால், அம்மா பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு படிப்பது சுகமாகத்தான் இருக்கும். மூன்றாண்டுகள் முன்புவரை, அப்படித்தான் இருந்தது. காலையும் மாலையும் அம்மா பக்கத்தில் உட்கார்ந்துகொள்வாள். தன் பாட்டுக்கு அரிசியில் கல் பொறுக்குவதோ, காய்கறிகளை நறுக்கொள்வதோ செய்துகொண்டே இருப்பாள். கூடவே ஹரி மீது ஒரு கண் வைத்துக்கொள்வாள். கேட்கும்போது, காபி கிடைக்கும். அவ்வப்போது சமையலறையில் இருந்து கைமுறுக்கோ, முள்ளுமுறுக்கோ, ரிப்பன் பக்கோடாவோ கொண்டுவந்து தருவாள்.
வாசலில் சத்தம் கேட்டது. கோவிந்தன் அண்ணா. தானே லாகவமாக விரல்களை உள்ளே விட்டு, கம்பிக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தார் கோவிந்தன்.
“எவ்வளவு பெரிசா வளர்ந்துட்டான்ப்பா இவன்...”
ஹரியைப் பார்த்தவுடன், ஆச்சரியம் தாளாமல் அப்படியே நின்றார் கோவிந்தன். ஸ்ரீதர் மாமா, சற்றே வெளியே எட்டிப் பார்த்தவர், “அவன் பத்தாவது வாசிக்கிறாண்டா. அவனப் போய் சின்னவன்னு சொல்ற?” அப்படியே அவர், கோவிந்தன் அண்ணா கையில் இருந்த வாழையிலை கட்டை வாங்கி, உள்ளே வைத்துக்கொண்டார்.
“நிஜார்ல பார்த்திருக்கேன்ப்பா. இங்கேயேஅங்கேயுமா ஓடிக்கிட்டே இருப்பான். நல்லா உசரமா வளர்ந்துட்டான்.”
ஹரி நின்றுகொண்டான். கைகளை என்ன செய்வது என்று தெரியவில்லை. அவை, பொலபொலவென்று இரண்டு பக்கங்களும் தொங்கிக்கொண்டு இருந்தன. போட்டிருந்த சட்டை, அளவு பெரிசாகவும் தெரிந்தது.
நெடுநெடுவென வளர்ந்துவிட்டதை இப்போது எல்லோரும் கவனித்துக் கேட்கிறார்கள். உண்மைதான். செருப்பு சைஸ் கூட மாறிவிட்டது. கோவிந்தன் அண்ணா அருகில் வந்து நின்றார். அவரும் நல்ல உயரம்.
“என் உசரம் இருக்கான்ப்பா.” உள்ளே ஸ்ரீதர் மாமாவைப் பார்த்துச் சொல்லிவிட்டு,
“எந்த ஸ்கூல்லடா வாசிக்கறே கொழந்தே.”
‘கொழந்தையா?’ ஹரிகே சிரிப்பாக இருந்தது. ஆனால், அண்ணா அப்படி அழைத்தது மிகவும் பிடித்திருந்தது. இவர் தான் இந்த வீட்டில் மூத்தவர். ஸ்கூல் பெயரைச் சொன்னான். அங்கே இருந்த ஒன்றிரண்டு ஆசிரியர்களின் பெயர்களைக் கேட்டார் அண்ணா. அவனுக்குத் தெரியவில்லை.
“கொஞ்சம் உட்காரு... அப்பா திருமஞ்சனத்தை முடிச்சுடட்டும்.”
“முடிஞ்சுது, முடிஞ்சுது. ஆர்த்திக்கு உள்ளே வாங்கோ...”
கோவிந்தன் அண்ணா சட்டையைக் கழட்டி இடிப்பில் கட்டிக்கொள்ளத் தொடங்கினார். தானும் அப்படி செய்யவேண்டுமோ? செய்யாவிட்டால், தப்பாகிவிடுமோ? சட்டையைக் கழட்டுவதா, வேண்டாமா என்று லேசான குழப்பம் ஏற்பட்டது.
“சட்டையெல்லாம் கழட்ட வேண்டாண்டா. அப்படியே வா.” ஸ்ரீதர் மாமா ஆபத்பாந்தவனாக அழைத்தார். கழட்டியிருக்கலாம். என்ன ஆகப் போகிறது? இப்போதெல்லாம் இது ஒருவித லஜ்ஜையை உருவாக்கியது.
மாமா தட்டில் விளக்கேற்றி ஆர்த்தி காண்பித்து, ராமானுஜர் திருவடிகளே சரணம், ஆண்டாள் திருவடிகளே சரணம் என்று முடித்தபோது, ஹரிக்கு சட்டையெல்லாம் வேர்த்துக் கொட்டிவிட்டது. அந்த சமையலறையில் துளி காற்று இல்லை. ஸ்ரீதர் மாமாவும் கோவிந்தன் அண்ணாவும் கூட வியர்வை நனைந்திருந்தார்கள்.
“ஹாலுக்கு வாடா. பேனுக்குக் கீழ உட்கார்ந்துக்கலாம்.” அண்ணா அழைக்க, வெளியே வந்தபோது, கொஞ்சம் இதமாக இருந்தது.
அண்ணா காட்டிய இடத்தில் அமர்ந்துகொண்டான். முன்பு உட்கார்ந்திருந்த சேரை மடித்து ஓரம் வைத்திருந்தாள் மாமி.
ஹரியின் முன்பு ஸ்ரீதர் மாமா இலை போட, கோவிந்தன் அண்ணா தண்ணீர் செம்பும் டம்பளரும் வைத்தார். மாமி ஒவ்வொரு பதார்த்தமாக எடுத்து வர ஆரம்பித்தாள்.
“நீங்க சாப்பிடலையா மாமா?”
“நீ சாப்பிடறா கண்ணா. கார்த்தாலேருந்து எதுவும் சாப்பிடாம வந்திருப்பே,” என்றார் மாமா.
அடுத்த சில நிமிடங்களில், கோவிந்தன் அண்ணாவும் மாமிக்கு உதவ ஆரம்பித்தார். மாமா, ஓரமாக போய் உட்கார்ந்துகொள்ள, இலை நிறையத் தொடங்கியது. ஐந்து பொறியல்கள். மாங்காய் வெல்ல பச்சடி. தயிர் பச்சடி. கறிவேப்பில்லை துவையல்...
“நிதானமா சாப்பிடறா கண்ணா. அவசரமே இல்ல.”
ஹரிக்கு இவ்வளவு வகைகள் சாப்பிட்டது இல்லை. ஒரு குழம்பு அல்லது ஒரு கூட்டு சாதம். எப்போதுமுள்ள தயிர் சாதம். இவ்வளவையும் மீதம் வைக்காமல் சாப்பிட வேண்டும். இல்லையென்றால், இவர்கள் தப்பாக எடுத்துக்கொள்ளக் கூடும்.
ரசம் சாதம் சாப்பிடும்போதே, வயிறு நிறைந்துவிட்டது. இலையில் மேல்பாகத்தில் இருந்த பொறியல்களையெல்லாம் சாப்பிட்டதில் வயிறு நிரம்பிவிட்டது. கோவிந்தன் அண்ணா, மீண்டும் அந்தப் பதார்த்தங்களை நிறைக்க எடுத்துவந்தபோது, அதை மன்றாடி நிறுத்தினான் ஹரி.
“தயிர் சாதம் சாப்பிட முடியலன்னா பரவாயில்லடா செல்லம். திருக்கண்ணமுது மட்டும் சாப்பிடு போதும்” என்றார் ஸ்ரீதர் மாமா.
அவர் சொன்னதுதான் சரியாயிற்று. தயிர் சாதம் சாப்பிட முடியவில்லை. சாப்பிட்ட மற்ற அனைத்தும் நெஞ்சு முட்ட நின்றுகொண்டது. வெளியே பாத்ரூமில் போய் கையைக் கழுவிக்கொண்டு உள்ளே வந்தபோது, அங்கே மாமி தரையைச் சுத்தம் செய்துகொண்டு இருந்தார். கோவிந்தன் அண்ணா, கையில் ஒரு தட்டோடு நின்றுகொண்டிருந்தார்.
“உனக்கு என்ன வாங்கிக் கொடுக்கறதுன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். பேண்ட், சட்டை பிட்டு இருந்தது. இதா, தெச்சுக்கோ...”
அண்ணா அந்தத் தட்டை நீட்டினார். துணிப்பையின் மீது ஒருசில ரூபாய்த் தாள்களும் இருந்தன.
“இதெல்லாம் எதுக்குண்ணா. நான் வாங்கிகிட்டா, அப்பா கோச்சுப்பா. வேண்டாம்.”
“நான் அப்பா கிட்ட சொல்லிக்கறண்டா கண்ணு. நீ வாங்கிக்கோ. கோவிந்தன் குடுத்தான்னு சொல்லு. அப்பா ஒண்ணும் சொல்லமாட்டான்.” ஸ்ரீதர் மாமா தான் வற்புறுத்தினார். காலில் விழ வேண்டும் என்று தோன்றியது. கொஞ்சம் தள்ளி நின்று, காலில் விழ முயன்றபோது, அண்ணா சட்டென்று தோளைப் பிடித்து நிறுத்தினார்.
“இதெல்லாம் வேண்டாண்டா ஹரி. நல்லா படி. எது வேணும்னாலும் வந்து கேளு. சரியா, இதை வெச்சுக்கோ.”
அண்ணா, தட்டின் மேல் இருந்த பணத்தை எடுத்து, ஹரியின் மேல்பாக்கெட்டில் திணித்தார். துணிப்பையை கையில் கொடுத்தார்.
“ராத்திரிக்கு ஏதாவது கட்டிக் கொடுக்கட்டுமா கண்ணா...” மாமி சமையலறை வாசலில் நின்று கேட்டாள்.
“இல்ல, மாமி. எதுவும் வேண்டாம்.”
எல்லோரும் நின்றுகொண்டிருந்தார்கள். அதாவது, வழியனுப்புகிறார்கள் என்று தோன்றியது. “நான் கெளம்பறேன் மாமா.” சொல்லும்போதே, அனைவரையும் பார்த்தபடி சொன்னான். எல்லோரும் தலையசைப்பது போன்று தோன்றியது.
வெளியே வந்து செருப்பை மாட்டிக்கொண்டு, சாலையில் இறங்கினான் ஹரி. சாலை முனை திரும்பும்போது திரும்பிப் பார்த்தான். ஸ்ரீதர் மாமாவும் மாமியும் அவன் போவதையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.
வயிறு திம்மென்று இருந்தது. வேகமாக நடக்க முடியவில்லை. இரண்டு, மூன்று பேண்ட் தைத்துக்கொள்ளும் அளவுக்குத் துணியைக் கொடுத்துவிட்டார் கோவிந்தன் அண்ணா. மேல்சட்டைப் பையில் ரூபாய்த்தாள்கள் இருந்தன. நூறு ரூபாயாவது இருக்கும்.
இதெல்லாம் செய்வதற்கு நிச்சயம் பெரிய மனசு வேண்டும். ஏன் செய்தார்களோ, தெரியவில்லை! போகும் வழியில் லஸ்ஸி சாப்பிடலாம். ஆனால், வயிற்றில் இடம் இருக்கவேண்டுமே. என்ன சாப்பாடு! அப்பப்பா!
சைக்கிள் ஒன்று இடித்துக்கொண்டு ஓட, ஓரமாக நகர்ந்தான். சட்டென்று என்னவோ பொறி தட்டியது. ஸ்ரீதர் மாமா வீட்டு வாசல் ரேழியில் ஒரு சைக்கிள் உடைந்து கிடந்தது. அது மாமாவின் இளையமகன் ரவியுடையது. அவனைப் பார்க்க முடியவில்லையே!
கோவிந்தன் அண்ணா கையிலிருந்து பேண்ட், சட்டை வாங்கியபோது, பின் சுவரில், ரவி புகைப்படமா இருந்தது? அதற்கு புது மாலை போட்டு, பொட்டு வைக்கப்பட்டு இருந்ததே! அன்று காலை தான் மாலை போட்டிருக்க வேண்டும்.
ஹரி அப்படியே நின்றுகொண்டான். தலை சுற்றியது. லேசாக குமட்டிக்கொண்டு வந்தது. எவ்வளவு சாப்பிட்டாலும் இப்படிக் குமட்டாது. அதிசயமாக அன்று குமட்டியது. அடுத்த சில நிமிடங்களில், சாப்பிட்ட அத்தனையும் வெளியே வந்து விழுந்தது. பக்கத்துச் சுவரைப் பிடித்துக்கொண்டு வாந்தி எடுத்தபோது, கண்களில் கண்ணீரும் கொப்பளித்தது.
-------------------------