Dear friends,
Greetings from ‘Nesamudan’. Hold on! Don’t hit the delete button yet – this is not a spam mail.
Welcome to the my Email Magazine: ‘Nesamudan’.
You received this email because I assume you love reading my Email Magazine. Happy reading!
Venkatesh R
Email: venkatesh.nesamudan@gmail.com
11 April 2020
How to unsubscribe: If you do not wish to receive any more updates from ‘Nesamudan’, please email me and I shall be prompt in removing your email ID from
my mailing list.
P.S: Also you can share your friend's Email ids, who might like Tamil writings.
------------------------------------------
உதவிக்கு வரும் திரவத் தங்கம்
**********************************
இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது, கேரளத்தில் உள்ள ஸ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்துக்கு இந்த அனுமதி கிடைத்திருக்கலாம்.
உலகமே, கரோனா வைரஸ் தடுப்பு, மீட்பு ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு உத்தியாக முயற்சி செய்து பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மலேரியா மருந்தை இந்தியாவிடம் கேட்டதும் இதன் ஒரு பகுதிதான். மலேரியா மருந்தினால், கரோனா வைரஸ் தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு முழுமையான நிரூபணம் இதுவரை இல்லை தான். ஆனால், பிரான்சிலும் இதர நாடுகளிலும் நடத்தப்பட்ட சிற்சில ஆய்வுகள், நல்ல முடிவுகளைத் தந்துள்ளன. அதைவிட, வேறொரு விஷயம், அவரை யோசிக்க வைத்திருக்கிறது.
உலக வரைபடத்தை மனத்தில் கொண்டுவாருங்கள். அதில், எங்கெல்லாம் கரோனா தொற்று கடுமையாக உள்ளதோ, அந்தப் பகுதிகளை சிவப்பு மையினால் குறித்து வையுங்கள். அதேபோல், எங்கேயெல்லாம் மலேரியா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதோ அதையெல்லாம் நீல மையினால் ஹைலைட் செய்யுங்கள்.
ஒரு விஷயம், உங்களுக்கு புரியும். இரண்டு படமும், பிரதிபிம்பம் போல் தெரியும். அதாவது, கரோனா பாதித்த பகுதிகளில் மலேரியா இல்லை. மலேரியா பாதித்த பகுதிகளில், கரோனா வீரியமாக இல்லை (முற்றிலும் இல்லை என்று அர்த்தமில்லை).
அதாவது, இந்தியா போன்ற நாடுகளில், நாம் மலேரியா தடுப்பு மருந்துகளைப் பெருமளவு பயன்படுத்தியுள்ளோம். பல தலைமுறைகள் இப்படியே நோய் எதிர்ப்புத் தன்மையைப் பெற்றுள்ளது. இன்றைய நிலையில், இதைப் பார்க்கும் போது, ஒருவேளை மலேரியா மருந்துகளால் தான் கரோனா பாதிப்புகள் குறைவாக இருக்கிறதோ (அமெரிக்கா மற்றும் இதர மேலை நாடுகளின் பார்வையில்) என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தான், ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை, டிரம்ப் ‘கேம் சேஞ்சர்’ என்றே அழைக்கிறார்.
கேரள முயற்சியைப் பற்றி ஆரம்பித்துவிட்டு, வேறெங்கோ போய்விட்டேன். முதன்முறையாக சித்திரைத் திருநாள் மருத்துவ ஆய்வு மையத்தில் கோவலெஸ்சென்ட் பிளாஸ்மா தெரபியை (convalescent plasma therapy) சோதனை செய்யப் போகிறார்கள். இது ஒரு பழைய உத்தி தான். ஏற்கெனவே சார்ஸ், நிஃபா போன்ற வைரஸ் தொற்றுகள் வந்தபோதும் இந்த முறை பின்பற்றப்பட்டுள்ளது. அதற்கு முன்னர், 1918இல் ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளூவின் போதும் முயற்சி செய்து பலன் பெற்றதாக செய்திகள் உள்ளன.
அதாவது, கரோனா நோயில் இருந்து குணமானவர்களின் உடலில் இருந்து பிளாஸ்மாவை எடுத்து, தற்போது நோயினால் பாதிக்கப்பட்டோருக்குச் செலுத்துவதன் மூலம், பாதிப்பைக் குறைப்பது.
கொஞ்சம் புரியும்படியாகச் சொல்லவேண்டும். கரோனா பாதித்து மீண்டவர்கள் உண்டு. அவர்கள் உடம்பில், கரோனாவுக்கு எதிராக ஆன்டிபாடி என்று சொல்லப்படும் ‘நோய் எதிர்ப்புப் பொருள்’ உருவாகியிருக்கும். இதுதான், நோயாளிகளைக் காத்து வருகிறது. இந்தப் பொருளை எடுத்து, நோயுள்ள ஒருவருக்கு வழங்க முடிந்தால், அவரையும் மீட்க முடியும் என்று ஏற்கெனவே மருத்துவ உலகம் கண்டுபிடித்துள்ளது.
இந்த முயற்சியைத் தான் இப்போது கரோனா விஷயத்திலும் சோதனை செய்து பார்க்கவிருக்கிறது ஸ்ரீ சித்திரைத் திருநாள் ஆய்வு மையம். இந்திய மருத்துவ ஆய்வுக் கழகமான ஐ.சி.எம்.ஆர். இந்தச் சோதனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் (டிரக் கண்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் இந்தியா) இருந்து அனுமதி வரவேண்டும்.
ஏற்கெனவே அமெரிக்க எப்.டி.ஏ. இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவின் தென்மத்திய பகுதியில் உள்ள அர்கன்சாஸ் மாகாணத்தில், டேவிட் மங்கன் (David Mangan) என்ற நபரே முதல் பிளாஸ்மா கொடையாளி ஆகியிருக்கிறார். இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, மீண்டவர். அதன் பின்னர் பதினான்கு நாட்கள் வரை எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் இருந்தவர். இவரது இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா கொடை பெறப்பட்டுள்ளது.
நோயிலிருந்து மீண்ட ஆரோக்கிய நபர் ஒருவரால் 800 மி.லி. பிளாஸ்மா கொடை வழங்க முடியும். இதில் இருந்து நான்கு நோயுற்றவர்களுக்கு பிளாஸ்மாவைச் செலுத்த முடியும். ஒருவருக்கு ஒருமுறை நோயெதிர்ப்புப் பொருள் உள்ள பிளாஸ்மா செலுத்தப்பட்டாலே போதுமானது. அவர் நோயெதிர்ப்பைப் பெற்று, படிப்படியாக மீளமுடியும் என்று தெரிவிக்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.
இந்தியாவில் தற்போது வரை, 690 நபர்கள், கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்கள். ஸ்ரீ சித்திரைத் திருநாள் ஆய்வு முயற்சி பலன் அளிக்குமானால், கரோனா மருத்துவத்தில் ஒரு புதிய வாசல் திறந்திருப்பதாகவே பொருள்.
சொல்ல மறந்துவிட்டேனே, இப்போது இந்த பிளாஸ்மாவையே மருத்துவ ஆய்வாளர்கள், ‘திரவத் தங்கம்’ என்று அழைக்கிறார்கள்.
-------------------------------
சேமிக்கப்படுமா திரவத் தங்கம்?
**********************************
இன்று கடைக்குப் போய்விட்டு வந்தேன். வழக்கம்போல் தனிமனித இடைவெளியை கவனத்தில் கொண்டு, அரை மணி காத்திருந்து, கடைக்குள் போய், எடுத்துவந்த பட்டியலுக்கு ஏற்ப, பல்வேறு பொருட்களை எடுத்துக்கொண்டேன். எங்கே போனாலும் பத்திரிகையாளர் புத்தி விட்டுப் போகாது. அடுத்தவர்கள் என்ன வாங்குகிறார்கள் என்ற கவனமும் கூடவே இருந்தது.
பலர் உடனடி உணவுப் பண்டங்களான நூடுல்ஸ், பிரெட், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை அள்ளிக்கொண்டார்கள். மளிகை சாமான்கள் வாங்குவோர், இன்னும் ஐம்பது, நூறு, இருநூறு கிராம் பொருட்களின் பொதிகளையே எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர். இவர்களுடைய நடவடிக்கைகள் எனக்குப் பல விஷயங்களை உணர்த்தின.
இவர்கள் எல்லோரும் ஆங்கிலத்தில் சொல்வது ‘ஜஸ்ட் இன் டைம்’, அதாவது ‘தேவைப்படும் போது,’ பொருட்களை வாங்கிக்கொள்ளும் பிரிவினர்.
கூடுதலாகவோ, மொத்தமாகவோ வாங்கிச் சேமிக்கும் பழக்கம் அற்றவர்கள்.
இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ என்ற மனநிலையே இதற்குப் பின்னே இருக்கக்கூடும். பொருட்களை வாங்குவதற்குத் தேவைப்படும் நிதி வருவாய் இல்லாதவர்களாக இருக்கலாம். வீட்டில் வைத்துக்கொள்ள போதிய இடமோ, வசதியோ இல்லாதவர்களாக இருக்கலாம். அல்லது பழக்கமே ஒரு காரணமாகவும் இருக்கலாம்.
இதை யோசித்துக்கொண்டிருந்தபோது தான், இன்னொரு விஷயம் ஞாபகம் வந்தது. கரோனா வருவதற்கு சற்று முன்புதான் செளதி அரேபியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கச்சா எண்ணெய் மோதல் ஏற்பட்டது. விளைவு, படபடவென கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தது.
உடனே உலகெங்கும் கரோனா நோய்த்தொற்று. கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 20 டாலர் வரை வீழ்ச்சியடைந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, இந்தியா போன்ற 80 சதவிகிதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், கூடுதலாக வாங்கிச் சேமித்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
தற்போது, கொஞ்சம் நிலைமை சீரடைந்து பீப்பாய் ஒன்றுக்கு 34 டாலர் வரை உயர்ந்திருக்கிறது. இந்தக் காலத்தில் நாம் எவ்வளவு வாங்கிச் சேமித்தோம்?
சேமிப்பதற்கு நம்மிடம் போதிய இடம் இருக்கிறதா?
சுவாரசியமே இங்கேதான் ஆரம்பிக்கிறது. தற்போதைய நிலையில், இந்தியாவில் கச்சா எண்ணெயை வாங்கிச் சேமிக்கும் வசதி, மிக மிக குறைவு. அதாவது, நம்மிடம் 3.9 கோடி பீப்பாய் அளவுக்குத் தான் சேமிக்க முடியும். சீனாவால் 55 கோடி பீப்பாய்கள், ஜப்பானால், 52.8 கோடி பீப்பாய்கள், தென் கொரியாவால் 21.4 கோடி பீப்பாய்கள் அளவுக்குச் சேமிக்க முடியும். அதாவது, நம்முடைய சேமிப்பை வைத்துக்கொண்டு நமது நாட்டின் தேவையை ஒன்பது நாட்கள் தான் நிறைவு செய்ய முடியும். ஜப்பானாலோ, 198 நாட்கள் வரை தாக்குப் பிடிக்க முடியும்.
வெளிநாடுகளில் நிலத்தில் சேமிப்பதோடு, கடலிலும் சேமித்து வைக்கிறார்கள். நம்மிடம், விசாகப்பட்டினம், மங்களூர், படூர் ஆகிய இடங்களில் சேமிப்பு அடிநில குகைகள் உள்ளன. இன்னும் கர்நாடகத்தில் இருக்கும் இதே படூரிலும், ஒடிசாவில் இருக்கும் சந்திக்கோலே ஆகிய பகுதிகளிலும் மேலும் இரண்டு சேமிப்பு குகைகள் வரவுள்ளன. மேலும், இராஜஸ்தான் பிகானீரிலும், குஜராத் ராஜ்கோட்டிலும் புதிய சேமிப்புக் குகைகள் கட்டப்படவுள்ளன. இவற்றினால் புதிதாக 5 கோடி பீப்பாய் அளவுக்கு கச்சா எண்ணெயை எதிர்காலத்தில் சேமிக்க முடியும்
தற்போதுள்ள நிலையில் மேலும் 1.5 கோடி பீப்பாய்கள் வாங்கும் அளவுக்கே சேமிப்பு வசதிகள் நம்மிடம் உள்ளன. இதை வாங்கிச் சேமிக்க நம் நாடு முயற்சி மேற்கொண்டிருக்கிறது.
ஆனால், அடிப்படை கேள்வி அப்படியே தான் இருக்கிறது. உலக நாடுகள் ஒவ்வொன்றும் கச்சா எண்ணெயை வாங்கிச் சேமிப்பதற்கு ஏராளமான வசதிகளை மேற்கொண்டுள்ள நிலையில், நாம் ஏன் இதனை மேம்படுத்தவில்லை? உண்மையில், இன்றைக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதற்கான முழுப்பலனை நம்மால் பெற முடியவில்லையே?
எல்லாம் ‘ஜஸ்ட் இன் டைம்’ பிரச்னைதான். அவசியம் ஏற்படும்போது, தேவைக்கேற்ப வாங்கிக்கொள்ளலாம் என்ற மனநிலைதான். இந்த அளவுக்கு விலைச் சரிவு இனிமேல் எப்போது வருமோ?
கரோனா என்று வந்தவுடன் தான், நாம் பொது சுகாதாரத் துறைக்கு பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. எரிபொருள் என்ற கேள்வி எழும்போது, சேமிப்பு வசதி என்ன என்ற கேள்வி எழுகிறது. காலத்துக்கேற்ப, வாய்ப்புக்கேற்ப முன்னுரிமைகளை மாற்றிக்கொண்டு, கூடுதல் முதலீடுகளைச் செய்வது ஒன்றே நம் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தை உறுதி செய்யும்.
------------------------
எழுத்துக் கூலி (சிறுகதை)
*****************
‘பூமிநாதன் வந்திருக்கிறார், உங்களை அழைக்கிறார்’ என்று ரிசப்ஷனிஸ்ட் சொன்னபோது, மதியம் 2.30 மணி. ஜெகதீஷுக்கு எரிச்சலாக வந்தது. படித்து முடிக்கவேண்டிய ப்ரூஃப்கள் காத்திருந்தன. காலையில் இருந்து தள்ளிப்போட்டுக்கொண்டே வந்த கட்டுரையும் ஞாபகம் வந்தது. இவரைச் சந்திக்கப் போனால், இரண்டு மணிநேரம் ஓடிவிடும். அப்புறம் உள்ளே மீண்டும் வந்து வேலையை ஆரம்பிப்பதற்குள், மாலை மயங்கிவிடும்.
“நான் இல்ல, ஆபீஸ் வரலன்னு சொல்லிடுங்க...”
சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, எங்கள் எடிட்டோரியல் அறையின் கதவைத் திறந்துகொண்டு, பூமிநாதன் உள்ளே வருவது தெரிந்தது. எங்கே நிற்பதில்லை. நேரடியாக உள்ளே நுழைவதுதான்.
“என்னாய்யா, ஆபீஸ்ல இருந்துக்கிட்டே, டபாய்க்கிறீயா?”
ஒரு இருக்கையை இழுத்துப் போட்டுக்கொண்டு, ஜெகதீஷ் முன்பு உட்கார்ந்துகொண்டுவிட்டார். அவரது வெள்ளை வேட்டியும் பாந்தமான அரைக்கை சட்டையும் கருப்பு தீட்டிய மீசையும் பளிச்சென்று சிரிக்கும் முகமும் அபாரமான ஆற்றலுள்ளவை. அவ்வளவு சீக்கிரத்தில் கண்களைவிட்டு விலகாது.
“அதெல்லாம் இல்ல, சார். உள்ளே அனுப்புங்கன்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்.”
“சரி, கிளம்பு,”
“எங்கே சார்?”
“செந்தில்நாதனை பார்க்கணும். பேட்டி எடுக்கணும்னு சொன்னே இல்ல. பேசிட்டேன். அந்தாளு எப்பவேணா வாங்க சார்னு சொல்லிட்டான். கிளம்பு. போய் பார்த்துடலாம்.”
ஒரு கணம், இதை நம்புவதா வேண்டாமா என்று திணறிப் போனான் ஜெகதீஷ். இவர் சொல்லும் செந்தில்நாதன், இன்றைக்கு மூத்த அமைச்சர். அவரது பட்டப்பெயர்களால் தான் சுவர்கள் ஒளிர்கின்றன. மேடைதோறும் ஒலிப்பதே அந்தப் புகழ்பரப்பும் பட்டப்பெயர்கள் தான். பூமிநாதன் அவரது இயற்பெயரைச் சொல்லித்தான் அழைப்பார். அவ்வளவு நெருக்கம்.
“சார், உண்மையாவா. அப்பாயின்மென்ட் வாங்கிட்டீங்களா?”
“யாருக்கு அப்பாயின்மென்ட்? நான் யார்னு காட்டறேன் வா.”
“இப்போ போனா இருப்பாரா?”
“தூங்கற நேரம். சரியா 4 மணிக்கு எழுந்துடுவான். நாம போய் பிடிச்சுடலாம்.”
“ஒரு நிமிஷம். போட்டோகிராபருக்குச் சொல்லிடறேன். நேரா வந்துடுவாரு. எங்கே வரச் சொல்லட்டும்?”
அமைச்சரின் வீட்டு விலாசத்தைச் சொன்னார் பூமிநாதன். சாந்தோம் பக்கம். புகைப்படக்காரர் மூர்த்தியை அழைத்துச் சொல்லிவிட்டு, நேரே எடிட்டரிடம் ஓடினான் ஜெகதீஷ். விஷயத்தைச் சொல்லிவிட்டு, வெளியே வந்தபோது, நன்கு சாய்ந்து உட்கார்ந்து அன்றைய நாளிதழ்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். வாரப் பத்திரிகைகளின் பிராதன விஷயங்களில் ஒன்று, பேட்டிகள். அதுவும், முக்கிய பிரச்னைகளிலோ, கொள்கை விஷயங்களிலோ வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டவர்கள், அல்வாக்கள்.
செந்தில்நாதனும் அப்படிப்பட்டவர் தான். கடந்த மூன்று நாட்களாக, ஏதேனும் ஒன்றைப் பேசி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். வரிசையாக கேள்விகளை அடுக்கி, பதில்களை வாங்கிவிட்டால், இந்த வாரம் ரேப்பர் ரெடி. அவசரமாக பாத்ரூமுள் போன ஜெகதீஷ், பேட்டிக்கு வைக்கவேண்டிய தலைப்பு, போஸ்டரில் போடவேண்டிய தலைப்பு என்றெல்லாம் வரிசைப்படுத்தி, சொல்லிப் பார்த்துக்கொண்டார்ன். ‘சிக்கலில் சின்னாபின்னமான செந்தில்நாதன்’, ‘செந்தில்நாதன், நொந்தில் நாதன்!’ ‘நொந்த செந்தில்!!’ கடைசி தலைப்பு சட்டென கவரும்.
மீண்டும் எடிட்டோரியல் அறைக்கு வந்தபோது, “எங்கய்யா போயிட்ட, ஒரு காபி சொல்லக்கூடாதா?”
“எடிட்டர்கிட்ட சொல்லிட்டு வந்தேன். போகும்போது சாப்பிட்டுக்கலாம், வாங்க.”
ஜெகதீஷின் உற்சாகம் அவருக்கும் மகிழ்ச்சி அளித்திருக்க வேண்டும். வேகமாக அவரும் படிகளில் இறங்கினார். இருசக்கர வாகனத்தை வெளியே எடுத்தவுடன்,
பின்சீட்டில் ஒருபக்கமாக உட்கார்ந்துகொண்டார். இருக்கை கொதித்தபோதும் மனது குதூகலமாக இருந்தது.
பத்திரிகையாளனுடைய மகிழ்ச்சியே ஓட்டம் தான். அதுவும் பூமிநாதனோடு போவது ஒருவித இன்பம். மூத்த பத்திரிகையாளர்கள் எல்லோருமே தகவல் களஞ்சியங்கள் என்பது ஜெகதீஷின் எண்ணம். கடந்த காலத்தின் கருவூலங்கள் அவர்கள். பூமிநாதன் இன்னும் ஒருபடி மேலே. நாள், கிழமை, நேரம் உள்பட எல்லாவற்றையும் ஞாபகநுனியில் வைத்திருப்பார். அவ்வளவு ஏன், அன்றைக்கு கலைஞர் என்ன எழுதினார், சி.பி.சிற்றரசு மேடையில் என்ன பேசினார், அண்ணா சட்டசபையில் எப்படி விளக்கினார் என்று பேசியே காண்பித்துவிடுவார். காலம் சட்டெனக் கண்முனே விரியும்.
அதைவிடச் சுவாரசியம், உள் அரசியல். பத்திரிகையாளனுடைய போதையே இந்த கிசுகிசுக்கள் தானே! மிக லாகவமாக ஒரு லாஜிக்கை கட்டியிழுத்து, எதிராளியைக் கட்டிப் போட்டுவிடுவார்.
“செந்தில்நாதன் இருக்கானே, இவனுக்கு நான் தான் முதன்முதல்ல சீட் வாங்கிக் கொடுத்தேன் தெரியுமா?” ஒருமுறை இதுபோன்ற பேச்சில் தான் இந்தத் தூண்டிலைப் போட்டார். உடனே சிக்கிக்கொண்டான் ஜெகதீஷ். எப்படி சார் என்று ஆரம்பித்த கதை கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நீண்டது. அதன் பிறகு, அடுத்தடுத்த முறைகள் தேர்தலில் நின்றபோது, பூமிநாதன் எப்படியெல்லாம் உதவிசெய்தார் என்பதையும் விவரித்தார்.
“இன்னிக்கு போனா கூட மரியாதையா நின்னு பேசுவான், தெரியுமா?”
அலுவலகத்தில் எடிட்டரிடம் இதைப் பற்றிச் சொன்னபோது, “யாரு பூமியா? ஒரே பீலா மன்னன்யா அந்தாளு. அவர நம்பாத...” என்று ஒரு வரியில் நிறுத்திவிட்டார்.
இதை பூமியிடம் லேசாகச் சொன்னபோது, “உங்க எடிட்டருக்கு காண்டுய்யா...நான் பார்த்து வளர்ந்த சின்னப் பையன் தெரியுமா? என் இமேஜ் என்னன்னு அவனுக்குத் தெரியல. இருக்கட்டும், ஒரு நாள் காட்டறேன்.”
இதில் எந்தப் பக்கம் நிற்பது என்றே தெரியாது. சீனியர்கள் எல்லோருக்கும் ஒரு பிரச்னை உண்டு. தற்பெருமை. யாரும் யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதையும் ஜெகதீஷ் புரிந்துகொண்டிருந்தான்.
“காபி வாங்கித் தரேன்னு சொன்னே.” பின்னே இருந்து பூமிநாதன் பேசியது கேட்டது. தி.நகர் பக்கம் ஒரு ஓட்டலில் வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே போனார்கள்.
எல்லாமே செல்ஃப் சர்வீஸ். இரண்டு காபிகளை எடுத்துக்கொண்டு மேஜையருகே ஜெகதீஷ் வந்தபோது, ஒரு காகிதத்தை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார் பூமிநாதன்.
“ஜெகதீஷ், ஒரு விஷயத்தைத் தெளிபடுத்திடறேன். இது என் பேட்டி. நான் தான் எழுதுவேன். என் பேர்ல தான் வரணும். சரியா?”
காபியை அவர் பக்கம் தள்ளிவிட்டு, தலையாட்டினான். இந்த முன்நிபந்தனைக்குக் காரணம் இருந்தது. ஒவ்வொருமுறை இவர் எழுதிக் கொடுத்த எதையும் எடிட்டர் அப்ரூவ் செய்யமாட்டார். அப்படியே ஒப்புக்கொண்டாலும், அதை முற்றிலும் மாற்றி எழுதிவிடுவார். அறுபது, எழுபது கால பத்திரிகையுலகம் அல்ல இது. இன்னும் கூர்மையாக, நறுக்கென்று, லாஜிக்கோடு சொல்லவேண்டும். ஆனால், பூமிநாதன் எழுத்தில் இதெல்லாம் வெளிப்படாது. பேச்சில் தெரியும் சமத்காரம், எழுத்தில் தொய்ந்துபோய்விடும்.
“சீக்கிரம் விஷயத்துக்கு வரச்சொல்லுய்யா. காதைச் சுத்தி, மூக்கைத் தொடறதுகுள்ள, ரீடர் அடுத்த பேஜுக்குப் போயிடுவார்.”
கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், பூமிநாதனிடம் சொல்ல முடியாது. பத்திரிகையைப் பார்த்தவுடன், முதலில் கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டார். ‘என் எழுத்தை எடிட் செய்ய நீ யார்’ என்று எடிட்டரிடம் சண்டை பிடிக்கிறேன் என்று ஆரம்பித்தார். ஜெகதீஷ் பயந்துபோனான். ஆனால், எல்லா வாரங்களிலும் இல்லையென்றாலும், எப்போதாவது ஒன்று என்ற அளவில் அவர் பெயர் பத்து பாயின்ட் போல்டில் இடம்பெறுவதை கண்டு சமாதானம் அடைந்தார்.
அவருக்கு ஐடியா சொல்லவும் தெரியாது. அவர் சொல்லும் மேட்டர்களை எழுதவும் முடியாது. காது கொடுத்து கேட்கச் சுவாரசியமாக இருக்கும் பல விஷயங்கள், எழுதும்போது அரதபழசாக, காலாவதி ஆகியிருக்கும். அதை ‘யாரும் சீண்ட கூட மாட்டார்கள்’ என்பார் எடிட்டர்.
“கேள்வியெல்லாம் டாண், டாண்னு நான் கேப்பேன். ரெடியா இருக்கேன். போட்டோகிராபரை முதல்ல போட்டோ எடுத்துக்கிட்டு வெளியே போயிடச் சொல்லு. அப்புறம் ஆரம்பிக்கலாம்.”
மனத்தளவில் அவர் தயாராகிக்கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது.
மீண்டும் வண்டியை கிளப்பிக்கொண்டு, சாந்தோம் போனபோது, மூன்றே முக்கால். அவர் சொன்ன தெருவைக் கண்டுபிடித்து நெருங்கியபோது, வாசலில் வரிசையாக பல கார்கள். அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. அதில் மூன்றாவது மாடியில் அமைச்சர் வீடு. சென்னை வந்தால் தங்குவதற்கு என்று ஏற்படுத்திக்கொண்டது. வாசலிலேயே காவலர்கள் நிறுத்திவிட்டார்கள்.
ஆனால், பூமிநாதனுடைய தோரணை அசத்தியது. “அமைச்சர் கூப்பிட்டிருக்கார். அவர் பி.ஏ. கிட்ட, பூமி, பூமி...பூமிநாதன் வந்திருக்கேன்னு சொல்லுங்க. தெரியும்.”
ஒரு கணம் அந்தப் போலீஸ்காரன் நிதானித்தான். அவன் மனத்தில் என்ன ஓடியதோ? அவரது வெள்ளைவேட்டியும் சட்டையும் ஏதோ உணர்த்தியிருக்க வேண்டும்.
“சார் தூங்கிக்கிட்டு இருக்கார்.”
“தெரியும். மேல போய் வெயிட் பண்றேன். இவர் எங்க சப் எடிட்டர். போட்டோகிராபர் வருவாரு. மூர்த்தின்னு பேரு. மேலே அனுப்பிடுங்க.”
தன்னியல்பாக, அந்தக் காவலர் தலை அசைந்தது. லிஃப்டில் ஏறி, மூன்றாவது மாடிக்குப் போனபோது, அந்தப் பகுதி முழுக்க செருப்புகள் தான். குசுகுசுவென மெதுவான பேச்சுகள். ஒருவரை ஒருவர் தெரிந்தும் தெரியாததும் போன்ற பாவனைகள். செருப்பைக் கழட்டிவிட்டு, பூமிநாதன் வேகமாக அந்த பிளாட்டில் நுழையவும், நின்றிருந்தவர்கள் லேசாக இடம் ஒதுக்கி வழிவிட்டார்கள். காபி வாசனை கமகமத்தது. பின்னாலேயே போன ஜெகதீஷால் முன்னே நகர முடியவில்லை. எட்டி எட்டி பார்க்க வேண்டிய நிலை.
பூமிநாதன் ஹால்வரை போய்விட்டார். அங்கிருந்து திரும்பிப் பார்த்தவர், “ஜெகதீஷ், இங்கே வாப்பா” என்றார். அந்த ஹாலில் அவர் குரல் மட்டும் தான் ஓங்கி ஒலித்தது. ஹால் முழுக்க உட்கார்ந்திருந்தவர்கள், உள்ளே நுழைந்த ஜெகதீஷை ஒரு வி.வி.ஐ.பி. போல பார்த்தனர்.
அமைச்சரின் பி.ஏ. போல் தெரிந்த அரைக்கை சட்டைக்காரர், சட்டென முன்வந்து, விசாரிக்கத் தொடங்கினார். “நான் உங்ககிட்டதானே பேசினேன். சாயங்காலம் வாங்கன்னு அமைச்சர் சொன்னார்னு சொன்னீங்களே...”
“யார்கிட்ட பேசினீங்க?”
உடனே தன்னுடைய அலைபேசியை எடுத்து, எண்களைத் தேடத் தொடங்கினார். அப்போது, திடீரென்று சின்ன பரபரப்பு ஆரம்பித்தது. அறைக்குள் அமைச்சர் எழுந்துவிட்டார். அந்த அறைக்கு இரண்டொருவர் போய்வர, அரைக்கை சட்ட பி.ஏ. அங்கே விரைந்தார். எல்லோரும் விரைப்பு காட்ட, வாசலில் நின்றவர்களும் உள்ளே முண்டியடித்துக்கொண்டு முயன்றனர். கைகளில் சால்வை, பூங்கொத்துகள், புத்தகங்கள் என்று எல்லோரும் தயாராக இருந்தனர்.
ஒருசில நொடிகளில் அமைச்சர் செந்தில்நாதன் பிரசன்னமானார். இருகரம் கூப்பி, மேடையில் தோன்றும் அதே பாணி. கையில் கொடுக்கப்பட்ட பூங்கொத்துகள், அறிமுகங்கள், மனுக்கள், சால்வைகள், பூமாலைகள் என்று சுற்றிச் சுழன்று வாங்கிக்கொண்டே இருந்தார் அமைச்சர். அவற்றை, அடுத்த சில நொடிகளிலேயே பின்னால் நின்ற அணுக்கத் தொண்டர்கள் வாங்கிக்கொண்டார்கள்.
ஜெகதீஷுக்கு ஒன்றுமே புரியவில்லை. எங்கே பேட்டி கொடுக்கப் போகிறார்? அவரது பரபரப்புக்கு அடுத்த சில நிமிடங்களில் எங்கோ வெளியே கிளம்புபவர் போல் இருந்தார் அமைச்சர். வண்டியில் போகும்போது பேசுவாரா? அல்லது இவர்களை எல்லாம் அனுப்பிவிட்டு, உட்கார்ந்து பேசுவாரா? போட்டோகிராபரை வேறு காணோமே? அட்ரஸ் தெரியவில்லையா?
பூமிநாதன் முன்னே நகர்ந்தார். “செந்தில்... நான் பூமி...”
ஒருகணம், அங்கே அபாய அமைதி சூழ்ந்தது. அது பல நிமிடங்கள் நீடித்தது போல் தோன்றியது ஜெகதீஷுக்கு.
செந்தில்நாதன் ஒரு கணம் பூமிநாதன் பக்கம் தலையைத் திருப்பிப் பார்த்தார். முகத்தில் துளியும் சலனமில்லை. அவரை பல ஆண்டுகளாக தெரியும் என்பதைக் குறிக்கும் அறிகுறியும் இல்லை. பின்னால் நின்ற நபரிடம் திரும்பி,
“ஏன் கண்ட கண்டவங்களையெல்லாம் உள்ளே விடறீங்க. செக் பண்ண மாட்டீங்களா? செக்யூரிட்டி என்ன பண்றாரு...”
அவ்வளவுதான். யார் கையைப் பிடித்தார்கள்? யார் நெக்கினார்கள்? யார் தள்ளினார்கள் என்பது புரிவதற்குள் குண்டுக்கட்டாக வெளியே உமிழப்பட்டார்கள் பூமியும் ஜெகதீஷும். நடுவில் அவர் சொன்ன எந்த வார்த்தையும் யார் காதிலும் விழவில்லை. படியெங்கும் தொண்டர்கள். அமைச்சரைப் பார்க்க வந்தவர்கள். கீழே வந்து வெளிக்காற்றைச் சுவாசித்தபோது தான் ஜெகதீஷுக்கு போன உயிர் திரும்பிவந்தது.
பூமிநாதன் முகத்தைப் பார்க்கவே லஜ்ஜையாக இருந்தது. இதில் யாரைக் குறை சொல்வது? பூமி அப்பாயின்மென்ட் வாங்கினாரா? தெரியாது. பூமிக்கு செந்தில்நாதன் தெரிந்தவரா? அதுவும் தெரியாது. இதையெல்லாம் இப்போது கேட்கவும் முடியாது என்பதுதான் இருப்பதிலேயே மிகப்பெரிய சோகம்.
அமைச்சர் வீட்டு எதிர்வாடையில் இருந்த டீக்கடைக்கு அருகில் போய் நின்றுகொண்டார் பூமி. ஜெகதீஷுக்கு கிளம்பினால் போதும் என்று இருந்தது.
“நான் வேலைக்கு வந்ததிலிருந்து இதோ, இங்கேயே நிக்கறேன். என் எழுத்தைப் பிடிச்சுக்கிட்டு அவன் மேலே கிடுகிடுன்னு ஏறிட்டான். இனி நான் தேவை இல்ல. கூலிக்காரன், கூலிக்காரன் தான்.”
பூமிநாதன் இன்னும் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். ஜூனியர்களுக்கு சீனியர் பத்திரிகைக்காரர்களை மிகவும் பிடிப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு.
தம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான சாட்சிபூதமாக நிற்பவர்கள் அவர்கள் தானே!
----------------------------------