Dear friends,
Greetings from ‘Nesamudan’. Hold on! Don’t hit the delete button yet – this is not a spam mail. Welcome to the my Email Magazine: ‘Nesamudan’.
You received this email because I assume you love reading my Email Magazine. Happy reading!
Venkatesh R
Email: venkatesh.nesamudan@gmail.com
13 April 2020
How to unsubscribe: If you do not wish to receive any more updates from ‘Nesamudan’, please email me and I shall be prompt in removing your email ID from my mailing list.
P.S: Also you can share your friend's Email ids, who might like Tamil writings.
-------------------------------------------------------
கரோனா 1 : உலகம் மெச்சும் தாய்வான்
*********************************************
கரோனா வைரஸுக்கு எதிரான போரில், நம்பிக்கையளிக்கும் நாடாக உருவெடுத்திருப்பது, தாய்வான். வெறும் 2.3 கோடி மக்கள் கொண்ட குட்டி நாடு இது. இதை தன்னுடைய பகுதி தான் என்று சீனா இன்றுவரை சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஒருமாதிரி போதும் போதாத சுதந்திரத்தோடு செயல்பட்டு வரும் நாடு இது.
இன்றுவரை, அங்கே நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 388, குணமானவர்கள் 109, மரணம் 6. அவ்வளவுதான், ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள், தாய்வானை அழைத்து, உதவி கேட்கத் தொடங்கிவிட்டன. உலகத்தையே கரோனா கொத்துக் கொத்தாக பலிவாங்கிக் கொண்டிருக்க, தாய்வான் மட்டும் எப்படித் தப்பித்துள்ளது?
எல்லாம், 2003இல் ஏற்பட்ட ‘சார்ஸ்’ அனுபவம் தான். அதில் 73 தாய்வானியர்கள் மரணமடைய, 346 பேர் பாதிக்கப்பட்டனர். அப்போது சிரமப்பட்டு கற்றுக்கொண்ட பாடங்களே இப்போது உஷாராக இருக்க உதவியுள்ளன.
டிசம்பர் 17ஆம் தேதி வூஹானில் பெயர்தெரியாத கொடிய நோய் பரவத் தொடங்கியுள்ளது என்று தெரிந்தவுடனே, தாய்வான் சீனாவையும் உலக சுகாதார மையத்தையும் தொடர்புகொண்டது. இது மனிதருக்கு மனிதர் பரவும் தொற்றுநோயா என்று கேட்டு அறிந்துகொள்ள முயன்றது. அப்போது வரை இது இத்தகைய தொற்று அல்ல என்றே சொல்லி வந்தது உலக சுகாதார மையம். இதற்குள், டிசம்பர் 31, 2019இல், உலக சுகாதார மையம், கரோனா நோய்த் தொற்று பெரிய அளவில் பரவிவருகிறது என்பதை வெளிப்படையாகத் தெரிவித்தது.
அவ்வளவுதான், ஜனவரி 5, 2020 அன்றே ஒரு உத்தரவைப் போட்டது தாய்வான். கடந்த 14 நாட்களுக்குள் வூஹான் போய்வந்த அத்தனை தாய்வானியர்களையும் வெளிநாட்டவர்களையும் கண்டுபிடித்து, தனிமைப்படுத்தத் தொடங்கும் முயற்சி அது. இதற்குப் பிறகு நடந்தது தான் மின்னல் வேகம். வரிசையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தான்.
தகவல் தொழில்நுட்பத்தை அவ்வளவு சிறப்பாக பயன்படுத்தினார்கள். உள்ளூர் காப்பீட்டு தரவுத்தளத்தையும் விமானப்பயணம் மேற்கொண்டவர்களின் சுங்கத் துறை தரவுகளையும் ஒருங்கிணைத்து, யாரெல்லாம் பயணம் செய்தார்கள் என்பதைக் கண்டுபிடித்தார்கள். அதில் நோய்த்தொற்று உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். தனிமைப்படுத்திக்கொள்ள தவறியவர்களுக்கு முப்பதாயிரம் அமெரிக்க டாலர் அபராதம்! அதேசமயம், வீட்டில் தனிமைப்பட்டு இருப்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 14 நாட்களுக்கு 450 டாலர் சன்மானமும் வழங்கியது தாய்வான் அரசு!!
இராணுவத்தையும் இதர துறைகளையும் களமிறக்கி, மாஸ்க் தயாரிக்கச் சொன்னது அந்த அரசு. அதை வழங்குவதற்கும் ஒரு ரேஷன் முறையை அறிவித்தது.
உதாரணமாக தேசிய சுகாதார இன்ஷூரன்ஸ் அட்டையில் ஒற்றைப்படை எண்ணோடு முடியும் அட்டை வைத்திருப்போர், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மருந்துக் கடைகளுக்கோ பொதுவான கடைகளுக்கோ சென்று மாஸ்க் வாங்கலாம். இரட்டைப்படை எண்ணோடு முடியும் அட்டை வைத்திருப்போர், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் முகக் கவசம் வாங்கலாம். ஞாயிற்றுக்கிழமை அனைவரும் வாங்கலாம். இதிலும் ரேஷன் இருந்தது. வாரத்துக்கு மூன்று மாஸ்க் மட்டுமே ஒருவருக்கு வழங்கப்படும். அருகில் உள்ள மருந்துக் கடைகளைத் தெரிவிப்பதற்கு ஒரு மொபைல் செயலி உருவாக்கப்பட்டது. மாஸ்க் குறிப்பிட்ட கடையில் இருப்பு இருக்கிறதா என்பதையும் அந்தச் செயலி மூலமே தெரிந்துகொள்ளலாம்.
நோய்த் தொற்று உள்ளவர்களை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியதன் மூலம், பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது தாய்வான். மேலும் இப்போது 1.5 மீட்டர் தனிமனித இடைவெளி என்பதை கறாராகவும் செயல்படுத்தி வருகிறது.
எல்லாவற்றுக்கும் மேல், கரோனாவின் பாதிப்பு என்ன, பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பதையும் அந்த நாட்டு சுகாதார அமைச்சர் அன்றாடம் தெரிவித்துக்கொண்டே இருந்தார்.
மக்களும் அரசாங்கத்தை முழுமையாக நம்புகிறவர்கள். அதிகம் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாதவர்கள். தங்கள் சுகாதாரத்தைப் பார்த்துக்கொள்கிறவர்கள்.
அதேசமயம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் தன்னார்வலர்களையும் பயன்படுத்திக்கொண்டு, அந்த அரசாங்கம், தேவைப்படும் சேவைகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தது.
இதெல்லாம் இன்று உலக நாடுகள் பலவற்றுக்கும் படிப்பினைகள். ஆச்சரியத்தோடு அந்த நாட்டின் உதவியையும் கோரியுள்ளன. அந்த நாட்டின் அதிபரான சாய் இங்-வென், அனைவருக்கும் உதவுவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருப்பது, சீனாவுக்குத் தான் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. தனி நாடாக இன்னும் அங்கீகரிக்கப்படாத தாய்வானுக்கு கரோனா பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
------------------------
கரோனா 2: உலகம் பயப்படும் அநீதிகள்
*********************************************
கரோனா மனிதர்களை மட்டுமல்ல; ஜனநாயகத்தையும் காவு வாங்கிவிட்டது. ஆம், ஹங்கேரியின் பிரதம மந்திரி விக்டர் ஆர்பன், அந்த நாட்டு நாடாளுமன்றத்தை முடக்கிவிட்டார். நீதிமன்றத்தை முடக்கிவிட்டார். தேர்தல்கள் கிடையாது. போலிச் செய்திகளைப் பரப்பினால், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை.
தனிமைப்படுத்தும் குவாரண்டனை விட்டு வெளியேறினால், 8 ஆண்டுகள் வரை சிறை. ஹங்கேரியில் காலவரையற்ற அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் எதற்குத் தெரியுமா? கரோனாவைக் கட்டுப்படுத்த.
இந்தப் பணியில் நாடும் பிரதம மந்திரியும் ஈடுபடுவதற்கு ஏற்ப, இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, மொத்த அதிகாரமும் பிரதமரிடமே வழங்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே உலக நாடுகள் ஹங்கேரியை அச்சத்துடன் பார்க்கின்றன.
ஏற்கெனவே பத்தாண்டுகளாக ஆட்சி செய்துவரும் விக்டர் ஆர்பன், இனி சர்வாதிகாரியாக உருவெடுப்பதற்கு கரோனா உதவப் போகிறது என்பதே இவர்களுடைய அச்சத்துக்குக் காரணம். ஏனெனில், அவசர நிலை எப்போது முடிவுக்கு வரும் என்று சொல்லப்படவில்லை. ஹங்கேரி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பலத்துடன், இந்த அவசரச் சட்டம் நிறைவேறியுள்ளது.
இந்த நோய்த் தொற்றைக் காரணம் காட்டி, உலகெங்கும் வேறு என்னென்ன அரசியல் குழப்பங்கள் வரப் போகின்றனவோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உதாரணமாக, டொனால்டு டிரம்ப், நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலையே தள்ளிப் போட்டுவிடலாம்.
பிலிப்பைன்ஸ் நாட்டில், ஒருமுறை தான் அதிபராக இருக்க முடியும் என்ற விதியை தன்னுடைய ‘அவசர நிலை அதிகார’த்தைப் பயன்படுத்தி, தற்போதைய அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே மாற்றிவிடலாம்.
தன்னுடைய புகழ் சரிவதைக் கண்ட ரெசெப் தய்யிப் எர்டோகான், துருக்கியில் உள்ள ஜனநாயக மிச்சங்களையும் துடைத்தெறிந்துவிடலாம்.
“நல்லதொரு பிரச்னையினால் கிடைக்கும் வாய்ப்பை வீணடித்துவிடாதே” என்பான் மாக்கியவெல்லி. இதைத்தான் அநீதி அரசியல்வாதி இப்போது செய்கிறார்கள்.
------------------------
கரோனா 3 : கொள்ளை லாபத்துக்கான நேரம் இதுவல்ல
*****************************************************************
உலக அளவில் கரோனாவுக்காக எட்டு விதமான மருந்துப் பொருட்கள் பரிசோதனையில் உள்ளன. இவற்றையெல்லாம் முறையாகச் சோதித்து, பின்னர் மனிதர்களிடமும் சோதித்து, சந்தைக்குக் கொண்டுவர வேண்டும். இதற்கு இன்னும் 12 மாதங்கள் வரை ஆகலாம். ஆனால், இதற்குள் இருக்கும் அரசியலும் பொருளாதாரப் பேராசையும் தான் தற்போது முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.
எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு, தொடர்ச்சியாக லாபம் ஈட்ட நினைக்கும் மருந்து நிறுவனங்களுக்கு எதிராகப் பேசிவருகிறது. மிக மோசமான கரோனா காலத்தில் எந்தவிதமான காப்புரிமையும் இருக்கக்கூடாது என்பதே அவர்களுடைய வாதம். அப்படியே இருந்தாலும், அவற்றை மீறி, அனைவருக்கும் மருந்து கிடைக்க பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். கனடா, சிலி, ஈக்குவேடார், ஜெர்மனி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இந்தக் கோரிக்கைக்குச் செவி மடுத்திருக்கின்றன.
அமெரிக்காவில் உள்ள கிலீட் (Gilead) என்ற மருந்து நிறுவனம், Remdesivir என்ற மருந்தை கரோனாவுக்காக பரிசோதனை செய்துவருகிறது. இதன் முடிவுகள் இந்த மாதம் வெளிவரவுள்ளன. இதற்குள் இந்த மருந்துக்கான காப்புரிமையை 70 நாடுகளில் கிலீடு நிறுவனம் கோரியிருந்தது. எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு, பல்வேறு அமெரிக்க செனட்டர்களின் உதவியோடு, அந்த நிறுவனத்தைக் காப்புரிமையை கைவிட வைத்தார்கள்.
இதேபோல், Cepheid என்ற மருத்துவக் கருவிகள் நிறுவனம் ஒரு பரிசோதனை கிட்டை உருவாக்கியுள்ளது. வழக்கமான காசநோய், எய்ட்ஸ் மற்றும் இதர நோய்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தும் கருவியிலேயே இந்தப் பரிசோதனைக் கிட்டையும் பயன்படுத்த முடியும். 45 நிமிடங்களில் ரிசல்ட் தெரிந்துவிடும்.
இந்த டெஸ்ட் கிட்டுக்காக இந்த நிறுவனம் ஏழை நாடுகளில் கூட 19.80 டாலர் விலை நிர்ணயம் போகிறேன் என்றது. ஏற்கெனவே இருக்கும் கருவியில் பொருத்தக்கூடிய இந்த டெஸ்ட் கிட்டுக்கு இவ்வளவு விலை வைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டெஸ்ட் கிட்டின் அடக்கவிலை 3 டாலருக்குள் தான் ஆகும். அதிகபட்சம் 5 டாலர் விலை வைக்கலாம் என்பதே பலரது கருத்து.
இந்திய மற்றும் மேலைநாட்டுப் பங்குச் சந்தைகளில், மருந்து நிறுவனங்களின் பங்குகளே கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருக்கின்றன. அவை லாபம் ஈட்டும் என்ற நம்பிக்கையில் செய்யப்படும் முதலீடுகள் அல்ல இவை. அவை லாபம் சம்பாதித்தே ஆகவேண்டும் என்ற வற்புறுத்தல் அது.
தற்போதைய நிலையில், மருந்து நிறுவனங்கள் இந்த அழுத்தத்துக்கு ஆட்படக் கூடாது. எல்லோரும் நன்றாக இருக்கும் காலத்தில் லாபம் ஈட்டிக்கொள்ளலாம். இப்போது தேவை உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் அதற்கான ஆய்வுகள் மட்டுமே.
------------------------------
கரோனா 4 : முதலில் மீளப் போவது?
*******************************
கரோனா பாதிப்புகள் எப்போது முடியும்? தெரியவில்லை. ஆனால், அதற்குப் பிறகான உலகம் என்று ஒன்று இருக்கிறது. அதில் மீண்டும் பொருளாதார பலத்தோடு “முதலில்” மீளும் நாடுகள் எவை தெரியுமா?
ஜெர்மனியும் டென்மார்க்கும் தான்.
ஏனெனில், இவற்றில் தான் வலுவான சமூக காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. மேலும் இங்கே உள்ள தொழிலாளர் யூனியன்கள் தங்கள் முதலாளிகளோடு இணைந்து பணியாற்றி, சோதனைகளைச் சமாளிக்கும் திறன் பெற்றவை.
இது என் மதிப்பீடு அல்ல. ஹார்வர்டு கென்னடி ஸ்கூலின் பொருளாதாரப் பேராசிரியர் ஜேசன் ஃபர்மனின் (Jason Furman) கணிப்பு. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா அரசில் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தவர் இவர்.
------------------------------
எங்கோ ஒரு கிராமத்தில்... (சிறுகதை)
*******************************************
“ஒவ்வொரு ஜீவனுக்கும் பிழைச்சிக்கத் தெரியும். இதையெல்லாம் யாரும் சொல்லிக் குடுக்க வேணாம். தன்னால வரும்...” தெய்வநாயகன் சொல்ல ஆரம்பித்தபோதே, “ஆரம்பிச்சாச்சா உங்க பிரசங்கத்தை” என்றாள் சரஸ்வதி. சட்டென நிறுத்திக்கொண்டார் தெய்வநாயகன். காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, முகத்தைக் கழுவிக்கொள்ள கீழே இறங்கியபோது, ஓரமாக ஓடிய ஓணான் போன்ற ஜீவராசிகளைப் பார்த்துவிட்டு, சரஸ்வதி ஆச்சரியப்பட்டாள். அப்போது தொடங்கிய பேச்சில் தான், தெய்வநாயகன் இதைச் சொன்னார்.
“இன்னும் எவ்வளவு தூரம்ப்பா போகணும்? வழி தெரியாம மாட்டிக்கிட்டே போலிருகே குமார்.” சரஸ்வதி, கார் டிரைவர் குமாரைப் பார்த்தாள். பாவமாக இருந்தது.
தான் ரூட் தெரியாமல் மாட்டிக்கொள்வோம் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், கும்பகோணம், சீர்காழி என்று அத்தனை இடங்களும் அத்துபடி. ஆனால், இந்தப் பாதை எங்கோ கொண்டுபோய்விட்டது.
“பரவாயில்ல, வாம்மா. இதுவும் புது அனுபவம் தான். பெட்ரோல் இருக்கில்லையா குமார்?” தெய்வநாயகன் கேட்டார்.
குமார் பேசவில்லை. தலையை மட்டும் ஆட்டினான். முகத்தைத் துடைத்துகொண்டு, மீண்டும் வண்டியில் இருவரும் உட்கார்ந்துகொண்டார்கள்.
இரண்டு, மூன்று வாரங்களுக்கு ஒருமுறை இது ஒரு பழக்கம். ஆன்மிகச் சுற்றுலா. வடமொழியில் ஷேத்ராடனம். வெள்ளிக்கிழமை விடுமுறை கிடைத்தால், தொடர்ச்சியாக மூன்று நாட்கள். அல்லது சனி, ஞாயிறு கண்டிப்பாக இரண்டு நாட்கள் பயணம் உண்டு. இதற்காக ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிட்டு, தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என்று ஒவ்வொரு பகுதியாக பிரித்துவைக்கொள்வார் தெய்வநாயகன்.
ஒரே திட்டம் தான். சனிக்கிழமை காலை ஒரு குறிப்பிட்ட ஊருக்குப் போய் இறங்கவேண்டும். கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இருநூறு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கோவில்கள் அனைத்தையும் தரிசிக்க வேண்டும். ஞாயிறன்று இன்னொரு இருநூறு கிலோமீட்டர். இரவு மீண்டும் இரயில்.
திங்கள் காலை சென்னை வந்து இறங்கிவுடன், ஆபீஸ்.
உடலில் தெம்பு இருக்கும்போதே கோயில் ஸ்தலங்களையெல்லாம் ஒரு எட்டு பார்த்துவிட வேண்டும் என்பதுதான் இருவரது எண்ணமும். இந்த முறையும் அப்படித் தான் ஆரம்பித்தது. திருவாசி, திருபைஞ்ஜிலி, திருவெள்ளறை என்று ஒவ்வொரு கோவிலாகப் பார்த்துக்கொண்டே வந்தபோது தான், வழி தவறிப் போச்சு.
சரளைக்கல் சாலை, மண் சாலை என்று லேசாக உடம்பு குலுங்க ஆரம்பித்துவிட்டது.
தொலைவில் சின்னச் சின்ன கிராமங்கள். வழியெங்கும் பெரிய நடமாட்டமில்லை. யாரையாவது நிறுத்திக் கேட்கலாம் என்று தோன்றியது தெய்வநாயகனுக்கு.
இந்த ஊர் டிரைவர். தனக்கு ரூட் தெரியாமல் போய்விட்டது என்பது வேறு அவருக்கு கொஞ்சம் எரிச்சல் கொடுத்திருக்க வேண்டும். வழக்கமாக வரும் பன்னீர்செல்வம் இந்த முறை அமையவில்லை. அதனால், உரிமை எடுத்துக்கொண்டு பேசுவதற்கு தயங்கினார் தெய்வநாயகன்.
கண்ணுக்கு எட்டிய வரை பொட்டல் காடு. மே வெயில். வண்டிக்குள்ளே ஏ.சி. இருந்ததே தவிர, வெளியே சுட்டுப் பொசுக்குவது நன்கு தெரிந்தது. சாலையோரம் இருந்த மரங்கள், செடிகள் எல்லாம் பச்சை இழந்து சாம்பல் பூத்துக்கிடந்தன.
“எங்கேயாவது நின்னு கேளேன்ம்பா.” சரஸ்வதி தான் பேசினாள்.
மூர்த்தி பதில் சொல்லவில்லை. காரை இன்னும் வளைத்து நெளித்து ஓட்டிக்கொண்டே இருந்தார். முன்சீட்டில் இருந்த தெய்வநாயகன் தூரத்து கிராமங்களைப் பார்த்துக்கொண்டே வந்தார். இங்கேயெல்லாம் யார் வந்து குடித்தனம் செய்வார்கள்? ஒவ்வொரு முறை எந்த ஊருக்குப் போனாலும் இந்தக் கேள்வி எழும். பல தலைமுறைகளுக்கு முன்பே தெய்வநாயகன் குடும்பம் பட்டணம் வந்துவிட்டது. சொந்த ஊர் என்ன என்று யாராவது கேட்டால் தான், அதைப் பற்றி பேச்சே எழும்.
மற்றபடி சென்னை தான், பிறந்தது, வளர்ந்தது, படித்தது, கல்யாணம் செய்துகொண்டது எல்லாம்.
“அந்த ரோடுல திரும்புங்களேன். ஏதோ ஊர் தெரியுதே?” என்றாள் சரஸ்வதி.
அவள் சொன்னது வலப்பக்கம். மண்சாலை ஒன்று திரும்பியது. அங்கே வெகுதூரத்தில் மின்சாரக் கம்பிகளும் ஓட்டு வீடுகளும் தெரிந்தன. மூர்த்தி தன்னிச்சையாக காரை அந்தப் பக்கம் திருப்பினார். அவரது மனத்தில் திசை பற்றிய குழப்பம் இருந்தது.
ஊர் அருகே போக, போக, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பையன்கள் நின்று காரைப் பார்த்தார்கள். வீட்டு வாசலில் பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்த ஒரு பெண், தன் வேலையை நிறுத்திவிட்டு, வண்டியைப் பார்த்தாள். கார் கொஞ்சம் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.
“இங்கே ஏதாவது கோவில் இருக்கு?”
அந்தப் பெண், தலை நிமிர்ந்து இடக்கையை நீட்டி திசை காட்டினாள். அவளுக்கு இது பழக்கமாக இருக்கவேண்டும் என்பது அவளது பார்வையிலும் செய்கையிலுமே தெரிந்தது. கொஞ்சம் தூரம் முன்னே நகர்ந்த கார், ஓரிடத்தில் திரும்பியது. தூரத்தில் சட்டென கோபுரம் ஒன்று தென்பட்டது. பெரிதாகவும் இல்லாமல், சின்னதாகவும் இல்லாமல், பழைய வீடொன்றின் முகப்பு போலிருந்தது.
கார் மெதுவாக அந்தக் கோவில் அருகே போய் நின்றது. கோவில் கதவு மூடப்பட்டிருந்தது. மதியத்துக்கு மேல் யார் வருவார்கள் என்று மூடியிருப்பார்கள்.
தெய்வநாயகன் இறங்கிச் சுற்றிமுற்றிப் பார்த்தார். வழக்கமான கிராமம். வெயில் நதி ஓடிக்கொண்டிருக்கும் வீதி. காரைப் பார்த்துவிட்டு, இரண்டொரு வீடுகளில் இருந்து சிற்சில முகங்கள் எட்டிப் பார்த்தன.
கோவிலைத் திரும்பிப் பார்த்தார். வைணவக் கோயில் தான்.
“கோவில் எப்போ திறப்பான்னு கேளுங்களேன்.” சரஸ்வதி வண்டியில் உட்கார்ந்துகொண்டே சொன்னாள். தெருவைச் சுற்றிப் பார்த்தவர், யாரும் தங்களை ஒரு பொருட்டாகக் கூட மதியாதது கண்டு, திகைப்படைந்தார். வேளை தப்பி வரும் வெளியூர் பக்தர்கள் ஏராளம் இருக்கவேண்டும். பக்கத்தில் இருந்த வீட்டுக்கு அருகே சென்றபோது, ஒரு பெண் வெளியே வந்தாள். ஒரு கணம் தான். அந்தப் பெண் முகத்தில் ஒளிவெள்ளம். முகத்தில் சிரிப்பு. தெய்வநாயகத்துக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே புரியவில்லை.
“வாங்கோ, மாமா. மாமி வந்திருக்காளா?”
கார் இருந்த திசையை தெய்வநாயகன் பார்க்க, அந்தப் பெண் விறுவிறுவென்று கார் அருகே நடந்தாள்.
“மாமி, செளக்கியமா?”
“ஏ! ஆண்டாள்தானே உன் பேரு...இங்கேயா இருக்கே.”
சரஸ்வதி குரலில் அதீத உற்சாகம் புதிதாக இருந்தது. கதவைத் திறந்துகொண்டு வேகமாக இறங்கினாள். பார்வையாலேயே தெய்வநாயகத்தைக் கூப்பிட்டாள்.
“நம்ம தெற்குக் குளக்கரை தெருவுல இருந்தாளே. தெரியறதா இவளை? ஆண்டாள். ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருவாளே?”
தெய்வநாயகன் திணறிப் போய்விட்டார். முகத்தைப் பார்த்த ஞாபகம் கூட இல்லை. எங்கும் நிறைந்திருப்பவர்கள், திருவல்லிக்கேணிவாசிகள். பல ஆண்டுகள் ஆனாலும், தாங்கள் வாழ்ந்த தெருவையும் வீட்டையும் மறக்கவே மாட்டார்கள்.
தெய்வநாயகன், அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அங்கே ஒரு பொருட்டாகவே இல்லை. இரண்டு பெண்களும் வீட்டுக்குள் நகர்ந்துவிட்டார்கள்.
காரை நிழல் தேடி நிறுத்துகிறேன் என்று மூர்த்தி நகர, வேறு வழியில்லாமல், சரஸ்வதி பின்னாலே போனார் தெய்வநாயகன்.
பழைய வீடு. வாசல் பகுதியையும், ரேழி பகுதியையும் இணைத்து அலுவலக அறை மாதிரி இருந்தது. பழைய கணினி, டைப்ரைட்டர், இறைந்துகிடந்த தாள்கள், குப்பைக் கூடை... உயரத்தில் பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் ரெளட்டர் மினுக்கிக்கொண்டிருந்தது. பெண்கள் இருவரும் பின்கட்டுக்குப் போய்விட்டிருந்தார்கள்.
தெய்வநாயகனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு இருக்கையில் உட்கார்ந்துகொண்டார். புழுக்கம்.
சற்றுநேரத்தில் ஆண்டாள் எட்டிப் பார்த்தாள். “உள்ளே வாங்கோ, மாமா.”
“இருக்கட்டும்மா. இங்கே இருக்கேன்.”
கையில் மோர் டம்பளை நீட்டினாள் ஆண்டாள். கொஞ்சம் நெருக்கத்தில் பார்த்தார். கண், காது, மூக்கு எங்கும் பொட்டு நகையில்லை. தாலிச் சரடு மட்டும் இருந்தது. நகை இருக்கவேண்டிய இடத்தில் ரப்பரும், வளையங்களும் தொங்கிக்கொண்டிருந்தன. முகம் மட்டும் கருங்கல் சிலை போல், பளிச்சென்று. திருத்தமான மூக்கு, கண்கள். ஓவியத்தில் இருந்து எழுந்துவந்தவள் போலிருந்தாள்.
மோர் டம்பளரைத் திரும்ப வாங்கிக்கொண்டு ஆண்டாள் உள்ளே நகர, கை, கால்களைத் துடைத்துக்கொண்டு சரஸ்வதி வந்தாள்
“இவள யாருன்னு தெரியறதா?”
உதட்டைப் பிதுக்கினார் தெய்வநாயகன்.
“நாமகூட இவ கல்யாணத்துக்கு ரெண்டாயிரம் ரூபாய் கொடுத்தோம். இவ அப்பா, கிருஷ்ணதீர்த்தத்துல இருப்பாரே...”
அவள் சொல்லச் சொல்ல, ஆண்டாளின் அப்பா ஞாபகத்துக்கு வந்தார். திவசம், இறுதிக் காரியங்களில் சாப்பிடுவதற்கு என்றே ஒருசிலர் இருப்பார்கள். அவர்களுக்கு வருவாயே இதுதான். ஆண்டாளின் அப்பா அதில் ஒருவர்.
“ரெண்டு மூணு தரம், நம்மகிட்டு வந்து வந்து பேசினாரே”
“அவரே தான்.”
“ஹஸ்பண்ட் என்ன பண்றார்?”
“இங்க கோயில்ல கைங்கர்யம். அப்பப்போ, வெளியே தளிகை பண்ணவும் போறாராம்.”
ஆண்டாள் மீண்டும் உள்ளே வந்தாள். தட்டில் நறுக்கிய பழங்களைக் கொண்டுவந்தாள். “தோட்டத்துல விளைஞ்சது. மாம்பழம்.”
“இது என்ன ஆபீஸ் ரூம் மாதிரி இருக்கே?” தெய்வநாயகன் ஆரம்பித்தார்.
“ஆமாம், மாமா.” என்றவள், சற்றுநேரம் பேசவில்லை. அந்த அமைதி அவருக்கு என்னென்னவோ சொன்னது. உதிரும் மண்சுவர்கள், உயரத்தில் தொங்கும் பழுப்பு வேட்டி, அறை முழுக்க பழைய ஜாதிக்காய் பெட்டிகள், அழுக்குப்படிந்த ராமர், கிருஷ்ணர் ஓவியங்கள், கடந்த வருட காலண்டர்...
“அவருக்கு ஒண்ணும் பெரிசா வருமானமில்ல. இந்தப் பக்கத்துல ஆறேழு கோவிலைப் பார்த்துக்கறார். பல கிராமங்கள்ல சம்பளம் கிடையாது. அதுதான் நான் இதெல்லாம் ஆரம்பிச்சேன்...”
வாசலில் நிழலாடியது. பெரியவர் ஒருவர் நின்றிருந்தார். “என்னாங்க வேணும்?” ஆண்டாள் எழுந்தாள். “ஜெராக்ஸ் போடணும்.”
அந்தப் பெரியவர் கொடுத்த ரேஷன் அட்டையை எடுத்துவந்தாள். பெரிய ஜமக்காளத்தை நீக்க, கீழே பழைய ஜெராக்ஸ் மெஷின் தெரிந்தது. அதற்கான சுவிட்சைப் போட்டுவிட்டு காத்திருக்க, ஒருசில நிமிடங்களில் உயிர்பெற்றது. ஜெராக்ஸ் போட்டுக் கொடுத்து, வெளியே பெரியவரிடம் போய் கொடுத்து காசு வாங்கிக்கொண்டாள்.
“அக்கா, பாஸ்போர்ட் போடணும். சாயங்காலமா வரட்டாக்கா?” தெருவில் சைக்கிளை சாய்த்து நின்றவர் கேட்டார். தலையாட்டிவிட்டு உள்ளே வந்தாள் ஆண்டாள்.
“கோயில் எப்படி தெறப்பா?”
“அஞ்சு மணி கூட ஆயிடும் மாமி. இவர் தான் வந்து தெறப்பார். இருந்து சாப்பிட்டுட்டு பெருமாள சேவிச்சுட்டுப் போகலாம் மாமி.”
“இன்னொரு தரம் பார்த்துக்கலாம்டீ செல்லம். நாங்க கெளம்பறோம். ஓட்டலுக்குப் போகணும். சொந்தக்காரள வரச்சொல்லியிருக்கேன்.” சரஸ்வதி எழுந்துகொண்டாள். புடைவையில் மண் ஒட்டிக்கொண்டது.
உள்ளே நகர்ந்த ஆண்டாள், தட்டு நிறைய மாம்பழம் எடுத்துவந்து கொடுத்தாள். “நில்லுங்கோ மாமி, சேவிச்சுடறேன்.”
சரஸ்வதி கைப்பைத் திறந்து நான்கைந்து ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டாள். கையில் அட்சதைக் கொடுத்து ஆண்டாள் சேவித்தபோது, தெய்வநாயகன், ‘நாராயணா, நாராயணா’ என்று மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தார். கையில் ரூபாய்த் தாள்களை வாங்கிக்கொள்ள சங்கடப்பட்டது அந்தப் பெண். சரஸ்வதி அதை நாசூக்காக, அவள் கையில் அழுத்திக் கொடுத்தாள். அந்த ஸ்பரிசத்துக்கு அவள் கட்டுப்பட்டாள்.
மீண்டும் காரில் ஏறியபோது, காருக்குள் வெப்பம் தகித்தது. கதவுகளைத் திறந்துவிட்டிருந்தார் மூர்த்தி.
“எப்படி போகணும்னு வழி கேட்டுக்கிட்டீங்களா மூர்த்தி?” தெய்வநாயகன் கேட்க, தலையை மட்டும் ஆட்டினார் மூர்த்தி.
தெருமுனை திரும்பும்வரை, ஆண்டாள் வீட்டு வாசலிலேயே நின்றிருப்பது தெரிந்தது. மூர்த்தி, துணிச்சலாக தன் திசையறிந்து ஓட்டுபவர் போல், வண்டியை விரட்டினார். சரஸ்வதி, தெய்வநாயகனையே பார்த்திருந்தாள்.
“எப்படிப்பா? இந்தப் பொண்ணை இன்னிக்கு கார்த்தாலகூட நினைச்சுக்கிட்டேன். அப்படி ஒரு கஷ்டப்பட்டது இந்தப் பொண்ணு. பத்தாவதுக்கும் பிளஸ் டூவுக்கும் நான் ஃபீஸ் கட்டியிருக்கேன். டிரஸ் வாங்கிக் குடுத்திருக்கேன். எங்கே இருக்கோ? எப்படி வாழறதோன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். எவ்வளவு சமத்தா இருக்கு? பிள்ளை உண்டாகியிருக்காம்...”
சரஸ்வதியின் ஆச்சரியம் தொடர்ந்துகொண்டே இருந்தது.
“ஒவ்வொரு ஜீவனுக்கும் பிழைச்சிக்கத் தெரியும். இதையெல்லாம் யாரும் சொல்லிக் குடுக்க வேணாம். தன்னால வரும்...” என்று வாய்வரை வந்துவிட்டது. நிறுத்திக்கொண்டார் தெய்வநாயகன்.
-----------------------
Presentation too good. Very realistic.