Dear friends,
Greetings from ‘Nesamudan’. Hold on! Don’t hit the delete button yet – this is not a spam mail.
Welcome to the my Email Magazine: ‘Nesamudan’.
You received this email because I assume you love reading my Email Magazine. Happy reading!
Venkatesh R
Email: venkatesh.nesamudan@gmail.com
15 April 2020
Archives : https://rvenkatesh.substack.com/
How to unsubscribe: If you do not wish to receive any more updates from ‘Nesamudan’, please email me and I shall be prompt in removing your email ID from my mailing list.
P.S: Also you can share your friend's Email ids, who might like Tamil writings.
_____________
காணொலிக்குக் கை கொடுக்கும் ‘சூம்’
********************************************
கரோனா காலத்தில் பள்ளிகள், அலுவலகங்கள் எல்லாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு செயலி, ‘சூம்’ (Zoom) என்பது. பல பள்ளிகளில், சூம் வகுப்பறைகள் ஆரம்பித்துவிட்டன. தனியார்கள் பல்வேறு சந்திப்புகளை சூம் வாயிலாக நடத்தத் தொடங்கிவிட்டார்கள். ஊரடங்குக் காலத்தில் வரப்பிரசாதமாக இந்த சூம் கருதப்படுகிறது. இது ஒரு காணொலி செயலி.
வழக்கம்போல், சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸ் அப்பில் ஏராளமான விமர்சனங்கள். பயமுறுத்தல்கள். இதில் முக்கியமானது, சூம் நிறுவனத்தை நடத்தும் எரிக் யுவான் ஒரு சீனர். அதனால், இந்தச் செயலியையே நம்பக்கூடாது என்று ஒரு பிரசாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. படிப்படியாக சீனா மீது எழுந்துள்ள வன்மம்,
அந்நாட்டினர் எதைச் செய்தாலும், அதன் மீதும் தொடர்வது வருத்தமளிக்கிறது.
அப்படியென்றால், இதில் குறைகளே இல்லையா? நிச்சயம் உண்டு.
1. ஐபோனில் பயன்படும் சூம் செயலி, பயனர் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு விற்றது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பயனர் அனுமதி இல்லாமல் இந்தத் தப்பு நடைபெறுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன், மார்ச் 29 ஆம் தேதி, இந்தக் குறைபாடு களையப்பட்டது.
2. மெக் கணினியில் உள்ள வெப்கேமராக்களை ஹாக்கர்கள் கபளீகரம் செய்ய முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
3. பல தனியார் வீடியோக்கள், அது வகுப்பறையாக இருக்கலாம், மருத்துவ பரிசோதனைகளாக இருக்கலாம், அவையெல்லாம் இணையத்தில் பார்க்கக் கிடைக்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
4. சூம் தொடர்பு என்பது எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் செய்யப்பட்டது என்று சொல்கிறது அந்த நிறுவனம். அதாவது, அந்த நிறுவனத்தாலேயே பயனர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பார்க்க முடியாது. ஆனால், அது இவ்வளவு பத்திரமாக இல்லை. பயனர்களுக்கு இடையே நடைபெறும் வீடியோ உரையாடலை வேவு பார்க்க முடியும் என்று நிரூபித்துள்ளார்கள்.
5. இன்னொரு பிரச்னையும் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது அலுவலகங்களில் சூம் மீட்டிங்குகள் நடைபெறும். இதுநடுவே பயனர்கள் யாரேனும் இன்னொரு ஒரு விண்டோவைத் திறந்து வேறு விஷயங்களை இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கலாம். இதையும் சூம் கண்டுபிடித்து போட்டுக் கொடுத்துவிடும்.
‘அட்டென்ஷன் டிராக்கிங்’ என்பது இந்த வசதிக்குப் பெயர். இது பயனர்களின் தனியுரிமையைப் பாதிக்கிறது என்று கருதப்பட்டதால், ஏப்ரல் 2ஆம் தேதி இந்த வசதி சூம் செயலியில் இருந்து நீக்கப்பட்டது.
6. இதேபோல், சூம் வீடியோக்களை கணினிகளில் சேமித்துவைக்கும்போது, அதில் பங்கேற்ற பயனர்கள் தனிப்பட்ட அளவில் மேற்கொண்ட உரையாடல்களும் சேகரமாகின்றன. இது பெரிய தனியுரிமை ஓட்டையாக கருதப்படுகிறது.
7. மிக முக்கியமான ஓட்டை, மீட்டிங் ஐடிக்களை திருடி உடைத்துக்கொண்டு, அந்நியர் வந்து உங்கள் இணைய சந்திப்புகளில் தலைகாட்டலாம். பாலியல் ரீதியான புகைப்படங்களையும் உள்ளே நுழைத்துவிடலாம் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
வழக்கம்போல், இவையெல்லாவற்றையும் மீறி, சூம் செயலி பிரமாதமாக இருக்கிறது. தொடர்ச்சியாக இதை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார்கள்.
குறைகளை நிவர்த்தி செய்துகொண்டே வருகிறார்கள். உதாரணமாக, ஒவ்வொரு இணைய சந்திப்புக்கும் புதுப்புது ஐடி உருவாகிக்கொள்வது, அந்த ஐடிக்களை இணையம் வழியாக பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது, உரையாடலில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும், இதில் கலந்துகொள்ள பாஸ்வேர்ட் கோருவது, வெயிட்டிங்க் ரூமில் வரிசையில் நிற்கவைப்பது, எந்தெந்த அம்சங்கள் எல்லாம் தவறாக பயன்படுத்தப்படலாம் என்று சந்தேகம் வருமோ, அவற்றையெல்லாம் நீக்கிவிடுவது, அதற்கும் மேல், மேசைக்கணினியில் உள்ள சூம் செயலியை அவ்வப்போது அப்டேட் செய்வது, எல்லாவற்றுக்கும் மேல், சூம் செயலியை ஆண்டிராய்டு அலைபேசி அல்லது ஐபாட்டில் மட்டுமே பயன்படுத்துவது (ஏனெனில் இதில் தொடர்ச்சியாக அப்டேட் நடந்துகொண்டே இருக்கும்) ஆகியவை பாதுகாப்பான வழிமுறைகளாக முன்வைக்கப்படுகின்றன.
எந்தக் கருவியாக இருந்தாலும், அதை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம், அழிவுக்கும் பயன்படுத்தலாம். இதற்கு, சூம் செயலியும் விலக்கல்ல.
---------------------------
கடவுளை நிரூபிக்கும் கணிதம்
**********************************
கரோனா பிரச்னை வந்தவுடன், மீண்டும் பழைய வாதம் ஒன்று தலைதூக்கியிருக்கிறது. கடவுள் இல்லவே இல்லை. இருந்தால், கரோனாவை அனுமதித்திருப்பாரா? இத்தனை உயிர்கள் பறிபோயிருக்குமா? உங்களைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா? ஒருசிலர் தங்கள் கடவுள் மறுப்பு வாதத்துக்குக் கிடைத்திருக்கும் அற்புத வாய்ப்பாக இதைப் பயன்படுத்தி, நாத்திகவாதத்தை முன்னெடுக்கிறார்கள்.
இருக்கட்டும்.
நானும் கடவுள் மறுப்புவாதத்தில் இருந்து கடவுள் ஏற்புவாதத்துக்கு வந்தவன். என் சின்ன வயது வாசிப்பும் அனுபவங்களும் அப்படிப்பட்டவை. என்னைச் செம்மைப்படுத்தியது, கணிதம்.
கல்லூரியில் எம்.எஸ்.சி., படிக்கும்போது, ரியல் அனாலிசஸ் என்றொரு பேப்பர் உண்டு. எனக்கு அமைந்தவர் அற்புத ஆசிரியர்.
அவர் நீண்ட நீண்ட சூத்திரங்களைப் புரியவைப்பதன் / நிரூபிப்பதன் மூலம், எண்ணியலின் அரூபமான அம்சங்களை விளக்குவார். நான் இலக்கியத்தோடு தத்துவப் பித்தும் பிடித்துத் திரிந்தவன் என்பதால், கணிதம் எனக்கு விளங்கவில்லை. மாறாக, ஆசிரியரின் நிரூபணங்கள் என்னுள் இருந்த கடவுள் மறுப்பு வாதத்தை முற்றிலும் துடைத்து நீக்கியது. கடவுள் என்ற பிரம்மாண்ட சக்தியை என் கருத்தில் நிலைநிறுத்தியது கணிதம் தான். அதற்குப் பிறகு படிக்க முடியவில்லை. எம்.எஸ்.சி.யைப் பாதியில் விட்டுவிட்டு வேலைக்கு வந்துவிட்டேன். கணிதத்தில் உள்ள முடிவிலி (இன்பினிட்டி) என்ற கருத்துருதான் என்னைப் பித்துப் பிடித்து அலையவைத்தது.
நான் மட்டுமல்ல, என்னைப் போல் கணித உலகில் ஏராளமானவர்கள், கடவுளை நிரூபிப்பதற்கு முயற்சி செய்து வெற்றி கண்டிருக்கிறார்கள். இதற்கு ஆன்டோலாஜிக்கல் வாதங்கள் (ontological arguments), அதாவது இயக்கவியலின் தொடக்கம் பற்றிய நிரூபணங்கள் என்று பெயர். பற்பல நூற்றாண்டுகளாக இந்த வாதங்கள் வைக்கப்பட்டு, விளக்கப்பட்டு வந்துள்ளன.
20ஆம் நூற்றாண்டில் மிக முக்கியமானவர், கர்ட் கொடேல் (Kurt Gödel) என்ற கணித அறிஞர். கடவுள் உள்ளார் என்பதற்கு கணித ரீதியாக இவர் 1940களில் எழுதிய வாதம், இவரது மறைவுக்குப் பின்னர், அதாவது, 1970களுக்குப் பின்னர் தான் வெளியே தெரியவந்தது. இன்றைக்குப் படித்தாலும் இவரது வாதமும், அதன் தொடர்ச்சியும், தர்க்கமும் அசர அடிக்கின்றன.
எனக்குப் பிடித்த இன்னொரு வாதம் உண்டு. அதற்கு பேயீஸ் தேற்றம் என்று பெயர். நமது தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் பிளஸ் டூ கணித பாடத்தில், ‘நிகழ்தகவு கோட்பாடு - ஓர் அறிமுகம்’ என்ற அத்தியாயத்தில் இந்தத் தேற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘பேயீஸின் தேற்றமானது, சோதனை நிகழ்வதற்கு முன்பான நிகழ்தகவு மற்றும் நிபந்தனை நிகழ்தகவினைச் சோதனைக்குப்பின் காணவேண்டிய நிபந்தனை நிகழ்தகவுடன் இணைக்கப் பயன்படுகிறது.’
கொஞ்சம் பொதுமொழியில் எளிமைப்படுத்திவிடுகிறேன், புரிந்துவிடும். கரோனாவால் ஒவ்வொரு மரணம் நிகழும்போதும், நாம் கடவுள் இல்லை என்ற வாதத்துக்குப் போகிறோம். நிகழ்தகவில் இது ஒரு பகுதி. கரோனால் பாதிப்பு ஏற்படாமல், காப்பாற்றப்படும் ஒவ்வொரு உயிரும், கடவுள் இருக்கிறார் என்பதற்கான நிரூபணம். நிகழ்தகவில் இது பெரிய பகுதி. வளர்ந்துகொண்டே போகும் பகுதி என்றும் சொல்லலாம்.
‘The ingenuity of Bayes’ Theorem is that we can update our probabilistic estimate multiple times as more evidence comes.’ என்கிறார் Tuan Doan Nguyen என்ற டேட்டா அறிவியல் அறிஞர்.
காப்பற்றப்படும் ஒவ்வொரு உயிரும், நிபந்தனை நிகழ்தகவின் மதிப்பை உயர்த்திக்கொண்டே போகிறது. அப்படியென்றால், கடவுள் இருக்கிறார் என்பதற்கான நிகழ்தகவு உயர்கிறது என்று பொருள்.
கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. நம்பலாமா, வேண்டாமா என்று தடுமாறுபவர்களுக்கும், நம்பிக்கையே இல்லாதவர்களுக்கும் கைவிளக்காகத் திகழ்வது கணிதம். விரும்பினால், இதுபோல் இன்னும் நிறைய கணித தர்க்கங்களை முன்வைக்க நான் தயார்.
------------------------------
அந்நியன் (சிறுகதை)
***********
சந்தானம்: ஹை, பழனி, தேர்?
பழனியப்பன் : ஹை!
ச: பாஸ்டன் போயிட்டியா? இங்கதான் இருக்கியா?
ப: இல்ல பாஸ்டன். நேத்தே வந்துட்டேன். மழை ஆரம்பிச்சுடுச்சா?
ச: நல்ல மழை. வெள்ளிக்கிழமை பார்ட்டியின் போது ஆரம்பிச்சுது. நாலு நாளா கொட்டி தீர்த்துடுச்சு. வெளியவே போகல.
ப: சூப்பர். இந்த வருஷம் தண்ணிப் பஞ்சம் இருக்காதா?
ச: இதெல்லாம் இன்னும் நாலு, அஞ்சு மாசம் வரைக்கும் தான் தாங்கும். ஏப்ரல், மே, ஜூன்ல திருப்பியும் தண்ணிப் பிரச்னை ஆரம்பிச்சுடும். உனக்கென்ன கவலை?
ப: கரெட்டு தான்! அன்னிக்கு ஜாஃபர் வந்தானே? பொண்ணுக்குக் கல்யாணம்னு தானே சொன்னான்?
ச: ஆமா, மூத்த பொண்ணுக்கு. எங்கையோ நாயுடுபெட்டுல கல்யாணம்னு சொன்னான். உனக்கு பத்திரிகை வாட்ஸ் அப்ல அனுப்பறேன்னு சொன்னானே?
ப: இன்னும் வரல. உனக்கு அனுப்பிட்டானா?
ச: அன்னிக்கே வந்துடுச்சே! நான் ஃபார்வேர்டு பண்றேன்.
(கொஞ்சம் தாமதம்.)
ப: ஓகே. நீ இன்னும் தூங்கலையா?
ச: லேட்டாகும் தூங்கறதுக்கு. உனக்கு ஆபீஸ் இல்லையா?
ப: வொர்க் ஃப்ரம் ஹோம். இன்னும் ரெண்டு மூணு நாள் இப்படித்தான் இருப்பேன்.
ச: சூப்பர்டா, இதெல்லாம் எங்கவூர்ல இல்ல. கொடுத்து வெச்சவன்.
ப: இது இந்த ஊர் கல்ச்சர். எனக்கு ஆபீஸ் போகறதுக்கே ரெண்டு மணிநேரம் ஆகும். திரும்பிவர இன்னும் ரெண்டு மணிநேரம். அதுக்கு வீட்டுல இருந்தே வேலை பார்க்கலாமே!
ச: இப்படியெல்லாம் யோசிக்கறது அங்க முதலாளிகள் இருக்காங்களே! இங்கே?
ப: இந்தியாவுலேயும் வொர்க் ஃப்ரம் ஹோம் உண்டே? எங்க பெங்களூரு ஆபீஸ்ல இப்படித்தான் வேலை பார்க்கறேம். ரிமோட் வொர்க்கிங்...
ச: சரி, அன்னிக்கு நீ சரியாவே பேசலைனு சொன்னான் ஜவஹர். என்னாச்சு?
ப: அப்படியா? நல்லாதானே பேசினேன். (கொஞ்சம் தாமதம்) அவன் என்கிட்ட ஏதேதோ கேட்டுக்கிட்டு இருந்தான், எனக்குப் பதில் சொல்ல தயக்கமா இருந்துச்சு.
ச: என்ன கேட்டான்?
ப: என் வொய்ஃப் பத்தி கேட்டான். அமெரிக்கா போய் சேட்டு பொண்ணை செட் பண்ணிட்டேன்னு ஏதோ சொன்னான். எனக்கு கொஞ்சம் டிஸ்டர்ப் ஆயிடுச்சு.
ச: ஓ!
ப: வயித்தெறிச்சல் மாதிரி இருந்துது. என் வொய்ஃப், பசங்க போட்டோவைக் காண்பிச்சுட்டேன். என் வீடு எவ்வளவு கோடி இருக்கும்னு கேட்டான். அனாவசியமான கேள்வியா தோணுச்சு.
ச: அவன் அப்படித்தான்டா.
ப: அவன் மட்டுமில்ல. நிறைய பேர் அப்படித்தான். நான் சென்னை வந்தா, யாரையுமே சந்திக்காமல் போறதுக்கு இதுதான் காரணம்.
ச: நான் கேக்கமாட்டேனே.
ப: அதனால தான் உன்கிட்ட பேசிக்கிட்டு இருகேன். என்னை இவங்க எல்லாம் வேற மாதிரி எடை போடறாங்க. நீ வற்புறுத்திக் கூப்பிட்டியேன்னு தான் கெட்-டு-கெதர் பார்டிக்கு வந்தேன்.
ச: சாரி, நான் இயல்பா தான் கூப்பிட்டேன். அந்த பார்ட்டி சமயத்துல நீ சென்னையில இருந்தே.
ப: சே, சே! நீ ஏன் சாரி கேக்கற? எனக்கு இது பழகிப் போச்சு.
(சற்றுநேரம் பேச்சில்லை)
ப: முகில் எல்லார்கிட்டேயும் ஏதோ கேட்டுக்கிட்டே இருந்தானே?
ச: அவன் ஒரு டிராவல் ஏஜென்சி வெச்சிருக்கான். வெளியூர் டிரிப்பெல்லாம் கூட்டிக்கிட்டுப் போறான். திருப்பதி, ஷீரடின்னு போறான். அதுக்கு யாராவது ஆள் இருந்தா சொல்லுன்னு கேட்டான்னு நினைக்கறேன்.
ப: என்னை ஒரு வார்த்தை அவன் கேக்கல. இந்த முறையும் நான் நிறைய கோயில்களுக்கெல்லாம் போயிட்டு வந்தேன். என்ன பார்த்தா, அவனுக்குக் கேக்கணும்னு தோணல போல இருக்கு.
ச: அப்படி இருக்காதுடா. அவன் மறந்திருப்பான்.
ப: ஹிஹி... சப்ப கட்டு கட்டாத.
ச: சரி, அதைவிடு. நீ கொடுத்த சாக்கெட்டை எல்லாம் என் பொண்ணுக்குக் குடுத்தேன். உனக்கு தேங்க்ஸ் சொல்லச் சொன்னா.
ப: வெல்கம். அது டார்க் சாக்லெட்ஸ். எல்லோருக்கும் கொண்டுவந்தேன். ஏழுமலை அப்படியே விட்டுட்டுப் போயிட்டான், தெரியுமா?
ச: அப்படியா? நான் தான் கடைசிவரைக்கும் இருந்தேனே. பில் செட்டில் பண்ணிட்டுவந்து பார்த்தேனே. ஒண்ணும் காணோமே?
ப: அங்க தான் இருந்துச்சு. அவன் எடுத்துக்கிட்டுப் போகல. என்கிட்ட வாங்கும்போதே அலட்சியம் தெரிஞ்சுது. நான் அவனுக்கு ஏதோ பிச்சை போடறா மாதிரி நினைச்சுக்கிட்டான்.
ச: அதனால் தான் சண்டை வந்துச்சோ?
ப: நான் பணக்காரத்தனமா பிஹேவ் பண்றேன்னு அசிங்கமா பேச ஆரம்பிச்சான். நான் இயல்பா தான் இருக்கேன். நீ தான் தாழ்வு மனப்பான்மையோட இருக்கேன்னு நல்லா நாலுவார்த்தை கேட்டேன். போதையில வேற இருந்தானா? பயங்கரமா எகிற ஆரம்பிச்சுட்டான்.
ச: தண்ணி உள்ளே போச்சுன்னா, என்ன பேசறோம்னே தெரியல.
ப: தண்ணி உள்ளே போனால் தான் உண்மை முகம் தெரியும், உண்மை எண்ணம் தெரியும். கதிர்வேலு கூட அதைத் தானே பண்ணான்.
ச: அவன் என்ன பண்ணான்?
ப: அவன் தான் ஆரம்பிச்சான். நாம படிச்ச ஸ்கூலுக்கு ஏதாவது பண்ணணும்னு சொன்னான். பணத்தை பூல் பண்ணி ஆரம்பிக்கலாம்னு சொன்னான். நான் என் சஜஷனைச் சொன்னேன். எனக்கு லைப்ரரிதான் ரொம்ப முக்கியம். அதனால், லைப்ரரிக்கான செலவையெல்லாம் நான் பார்த்துக்கறேன்னு சொன்னேன். என்னைப் பார்த்துட்டு, பிரகாஷ் நான் ஸ்போர்ட்ஸ் கிட்டெல்லாம் வாங்கித் தரேன்னு சொன்னான். கதிர்வேலுக்கு உடனே கோவம் வந்துடுச்சு. அவன் தான் முடிவு பண்ணுவானாம். ஸ்கூல் எச்.எம்.கைக் கேட்டுட்டு என்ன வேணுமோ அதை மட்டும் செய்வோம்னு சொன்னான். எனக்கு எரிச்சல் ஆயிடுச்சு. எனக்கு விருப்பமானதைத் தானே நான் செய்யமுடியும்?
ச: இல்லடா. அவன் ஒரு ஐடியாவுல சொல்லியிருப்பான். நீ ஏன் தப்பா எடுத்துக்கறே?
ப: இது என்னன்னு எனக்கும் தெரியும்டா. வெளிநாட்டுல இருக்கற நாங்களெல்லாம் பணம் காய்ச்சி மரங்கள். விதவிதமா திட்டம்போட்டு காலி பண்றதுதானே திட்டம்?
ச: ஏன் பழனி இப்படி எடுத்துக்கறே? அவனும் நம்மகூட படிச்சவன். அவனுக்கும் ஸ்கூலோட நன்மைக்குதானே செய்யணும்னு நினைப்பான்.
ப: மே பி, ஐம் ராங்க். என்னோட பழைய அனுபவமெல்லாம் ரொம்ப மோசமாவே இருக்கு. அதனால், எனக்குள்ள ஒரு பாதுகாப்புணர்வு வந்திருக்கலாம்.
ச: சரி, போட்டோஸ் எல்லாம் வாட்ஸ் அப்புல அனுப்பினேனே? பார்த்தியா, உன் வொய்ஃப், பசங்களுக்கெல்லாம் காண்பிச்சியா?
ப: பார்த்தேன்.
ச: என்ன, என்னமோ மாதிரி சொல்றே? பிடிக்கலையா?
ப: நான் நினைச்சுக்கிட்டு வந்தது ஒண்ணு. அங்கே நடந்தது வேற. நாமெல்லாம் எங்கே விட்டோமோ, அங்கேயிருந்து திருப்பியும் ஆரம்பிக்கணும் ஆசைப்பட்டேன். திருப்பியும் ஒரு இருபது வருஷம் முன்னால போய், பழைய பழனியப்பனா, சந்தானமா, கதிர்வேலுவா, ஜவஹரா இருக்கணும்னு நினைச்சேன்.
ஆனால், வந்திருந்தவங்க எல்லாம், தாங்க யார், தனக்கு யாரையெல்லாம் தெரியும், தன்னோட கெத்து என்னன்னு காண்பிச்சுக்கதான் முயற்சி பண்ணாங்க.
எல்லார்கிட்டையும் ஒரு தடை. ஒரு சுவர். தங்களோட அடையாளம்னு போலியா ஒரு விஷயத்தை காண்பிச்சாங்க.
ச: என்னவோ புதுசா சொல்றே? எல்லோரும் நல்லாதானே பழகினாங்க?
ப: உனக்குப் புரியலன்னு சொல்லி ஏமாத்தாத. நீ என்னைவிட ஷார்ப்பான ஆளு. நாம் இப்படியா இருபது வருஷம் முன்னே இருந்தோம்?
ச: காலமாற்றதைப் புரிஞ்சுக்கோ பழனி. நாம் எப்படி அப்படியே இருக்கமுடியும்? காலத்தை ரீவையிண்ட் பண்ணமுடியுமா? அவனவன், ஏதேதோ கஷ்டப்பட்டு, அடிபட்டு, முன்னுக்கு வந்திருக்கான். இன்னும் சில பேர் வரல. இன்னும் போராடிக்கிட்டு இருக்கான். இருபது வருஷத்துக்கு முன்னாடி இருந்ததெல்லாம் இப்போ எப்படி ஞாபகம் இருக்கும். இப்போ இருக்கறதுதானே நிஜமனிதர்கள்?
ப: கரெக்ட். நான் தான் தப்பு பண்ணிட்டேன். நாம் நிஜமா இருக்கணும்னு நினைச்சேன். போலியா இருக்கிற உங்க மத்தியில நிஜமா நின்ன நான் தான் அம்மணமாயிட்டேன்.
ச: ஏண்டா இப்படியெல்லாம் பேசறே? உனக்கு இங்க இருக்கற லைஃபே தெரியாது இல்ல. கஷ்டம் தெரியாது. சூழ்நிலை தெரியாது.
ப: யாரு, எனக்கா?
ச: ஆமாண்டா. நீ எத்தனை வருஷம் ஆச்சு இங்கே வந்து?
ப: பார்த்தியா, நீயும் பேச ஆரம்பிச்சுட்டே?
ச: என்ன பேசினேன்?
ப: விலக்கி வெச்சு, அந்நியப்படுத்தி பேசறே பார்த்தியா? நான் இன்னும் இந்திய பாஸ்போர்ட் தான் வெச்சிருக்கேன். என் மண் இதுதான்னு நினைக்கறேன். ஆனால், நீங்களெல்லாம் தான் என்னை வேற்று மனுஷனா பார்க்கறீங்க. ஒவ்வொரு டிரிப்லேயும் நான் நெருங்கி நெருங்கி வரணும்னு நினைக்கறேன். நீங்க தாண்டா, எங்களை ஒதுக்கி ஒதுக்கி வெக்கறீங்க... திரும்பியும் இங்கே வந்து விழும்போது, எவ்வளவு வேதனையா இருக்கு தெரியுமா? யாரோ, கைவிட்டுட்ட ஃபீலிங். இதுக்காகத்தான், நான் கெட்-டு-கெதருக்கெல்லாம் வரதே இல்ல. என் வேதனை தான் அதிகமாகுமே தவிர, சின்ன அரவணைப்பு கூட கிடைக்காது. சாரி, நான் பேசிக்கிட்டே போறேன். நீ இங்கே இருந்தா தான், நான் என்ன மனநிலையில இருக்கேன், என்ன உணர்றேன்னு புரியும். பை.
சட்டென்று பழனியப்பன் ஜிமெயில் ஹாங்க்-அவுட் சாட்டில் இருந்து வெளியேறினான். பச்சை விளக்கு ஒளிராத அந்தப் பெயரையே ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டிருந்தான் சந்தானம்.
--------------------------
We had the school golden Jubilee reunion recently. We have not faced any complex between our friends. We honoured our teachers and smart classes to our school and two class room we gave latest model chair and tables, created corpus fund and adopted some students bright in studies but economically weak.